பா.ஜ.க.வில் இணைந்துள்ள குஷ்பு காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார். மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்களும் பா.ஜ.க. பக்கம் தாவக்கூடும் என செய்திகள் பரபரக்கின்றன. இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. நக்கீரனிடம் விரிவாகப் பேசினார்.
""கடந்த ஆறு வருடங்களாக குஷ்புவை மரியாதையாகத்தான் காங்கிரஸ் வைத்திருந்தது. கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருந்தபோது, அவர் கட்சிக்கு வந்தவுடன் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நான் 30 வருஷமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சி மாறுவது இல்லை. எங்களைப் போன்றவர்கள் பல மாநிலங்களுக்கு சென்று கட்சிக்காக பணியாற்றியிருக்கிறோம். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், பின்னர் படிப்படியாக மாநில காங்கிரஸ் பொறுப்புக்கு வந்து, செயற்குழுவிற்குள் வர 12 வருடங்கள் ஆனது. ஆனால் இவர் கட்சியில் இணைந்தவுடனேயே செயற்குழுவிற்குள் வந்தார்.
சிறு வயதில் இருந்தே காங்கிரஸ் கொள்கை பிடிக்கும் என்று சொல்லும் குஷ்பு, இந்தக் கட்சியை குறை சொல்வது மனசாட்சியற்ற செயல். இப்போது அவர் சென்றுள்ள கட்சியிலாவது விசுவாசமாக இருக்கிறாரா என பார்க்க வேண்டும். பல கட்சிகளுக்கு போய்விட்டார். இனி அவர் எந்தக் கட்சிக்கு சென்றாலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜனநாயகமும், சுதந்திரமும் கிடைக்காது.
பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் எதிராக பேசியவருக்கு என்ன அழுத்தம் வந்ததோ தெரியவில்லை. ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் பா.ஜ.க.வுக்கு சென்றிருக்கிறார். கொள்கைகளை விட அவர்களுக்கு பிரச்சனை பெரியதாக இருக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வுகாணத்தான் சென்றிருக்கிறார். பிரச்சனையை தீர்க்க சென்றுள்ள அவர், ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சிக்காமல், அவர்கள் கொடுத்த வேலையை மட்டும் செய்ய வேண்டும்.''
நீங்கள் பா.ஜ.க.வுக்கு செல்வதாக செய்திகள் வெளியானது பற்றி...
""என்னைப் போன்ற கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள் எவ்வளவு நெருக்கடி வந்தாலும், கஷ்டப்பட்டாலும் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பார்கள். பாரம்பரியமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நம்பிக்கையின் பேரிலும், விஸ்வாசத்தின் பேரிலும் இந்தக் கட்சியில் இருக்கிறோம். இந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தபோதுகூட நான் போகவில்லை.
1996ல் இருந்தே பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய கனவு. தொடர்ந்து சீட் கேட்பதால் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் என் பிறந்தநாளன்று வேண்டுமென்றே வதந்தி பரப்பியவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக.
-வே.ராஜவேல்