ருவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவர் அபகரிக்கும்போது அவர் மீது நிலமோசடி புகார் கொடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சொத்தையும் உரிமையையும் பாதுகாக்க முடியும். ஆனால் அரசு அதிகாரிகளே, ஆட்சியிலிருக்கும் மிகப் பெரிய மனிதர்களின் ஆசியுடன் அரசு நிலத்தை விதிகளையும் மீறி சட்டத்திற்கு புறம்பாக முறையற்ற ஆவணங்களை கொண்டு விற்பனை செய்யும்போது அதை வாங்கியவர்கள் யார் மீது எப்படி புகார் கொடுப்பது?

land

இதுதான் பெல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்களின் குழப்பம். அவர்களில் சிலர் நம்மை தொடர்பு கொண்டு, இது தொடர்பான சில தகவல்களை அளித்ததோடு, அவர்கள் உறுப்பினராக இருக்கும் பெல் ஊழியர் சங்கத்தின் சார்பில் தாழம்பூரில் வாங்கப்பட்ட நிலம் குறித்தும் அதில் தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் நமது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதுகுறித்து நாம் விசாரணையில் இறங்கிய போது, மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான பாரத் கனரக மின் சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான பெல், திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒன்று சென்னை தியாகராய நகரில் இயங்கி வருகிறது. சுமார் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தின் தலைவராக இருந்த தங்கராஜ் என்பவர் தாழம்பூர் கிராமத்திலுள்ள சில சர்வே எண்களில் அமைந்துள்ள நிலங்களை தங்கள் உறுப்பினர்களுக்கு வாங்கித்தருவதாக உறுதியளித்து சங்கத்து உறுப்பினர்களிடமிருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

Advertisment

land

இந்தத் தொகை முறைகேடான வழிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டு ஆளுங்கட்சியின் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலருக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பெல் ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் தங்கராஜ் என்பவர், 2019 ஆம் ஆண்டு நில மேலாண்மை ஆணையராக இருந்த ஒரு அதிகாரிக்கு நெருக்கமானவர் என்பதால், அவர் மூலம் தங்கராஜுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அலுவலர்களும் சத்திய நாராயணா ரெட்டி என்பவரும் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள்.

இதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் அனாதீனம் நிலங்களை, அரசு விதிமுறைகளில் இருக்கும் சில குளறுபடிகளை பயன்படுத்தி தலா 3 ஏக்கர் வீதம் சத்யநாராயணா ரெட்டியின் ஆட்கள் 10 நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளனர். அந்த பத்து நபர்களிடமிருந்து சங்க உறுப்பினர்களுக்கு கிரயப்பத்திரம் செய்து கொடுக்கப்பட்டது. பின்னர் அது லே-அவுட்டில் அங்கீகாரம் செய்யப்பட்டு பெல்சிட்டி என்ற பெயரில் மனைகளாக உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நேரத்தில் பெல் ஊழியர்கள் சங்க தலைவர் தங்கராஜ், உடல் நலம் பாதிக்கப் பட்டதால் சில நபர்கள் சொசைட்டியின் பணிகளை கவனிக்கும் பொருட்டு கோடி கணக்கில் பணத்தை செலவிட்டு மதுரவாயல் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் மற்றும் சில அதிகாரிகள் மூலம் வருவாய் துறை, பதிவுத்துறை, மற்றும் மாமல்லபுரம் உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் ஆகியோரின் உதவியோடு பத்திரங்களை பதிவு செய்து பட்டா பெற்று அரசு நிலத்தை வணிகநிலமாக மாற்றம்செய்து, லே-அவுட் ஒப்புகைகளை பெற்றுத் தந்துள்ளனர்.

இந்த அனாதீனம் சொத்துக்களில் நிலை குறித்த சட்டங்களையும் அரசு விதிகளையும் நாம் விரிவாக ஆராய்ந்து பார்க்கும்போது பல விவரங்கள் வெளிப்பட்டன. நில உச்சவரம்பு சட்டம், சீர்திருத்தச் சட்டங்கள், எஸ்டேட் ஒழிப்பு போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு ரயத்துவாரி முறை அமலுக்கு வந்தது. ரயத்துவாரி முறையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம் தாழம்பூர் கிராமம் தமிழ்நாடு எஸ்டேட் சட்டம் 1948 கீழ் ரயத்துவாரி கிராமமாக மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி பயிரிடப்பட்ட நிலமாக இருந்தாலும் சரி அல்லது தரிசு நிலமாக இருந்தாலும் சரி உழுவதற்கு ஏற்ற எல்லா நிலங்களும் வகைப்படுத்தப்பட்டு ஆவணங்களின் அடிப்படையில் அனுபோக பட்டா வழங்கப்பட்டது.

land

தரிசு மற்றும் எவருடைய இருப்பிலும் இல்லாத நிலங்களுக்கு அரசே உரிமையாளர் ஆகும். முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு அரசு பரிசீலனை செய்து அந்த நிலத்தை வழங்கலாம். அவ்வாறு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்ட விவரங்கள் "அ' பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது . உரிமை கோரப்படாத நிலங்கள் அனாதீனம் என்று வகைப்பாடு செய்யப்படுகிறது. 1987ஆம் வருடத்திய யு டி ஆர் "ஏ' பதிவேட்டின்படி தாழம்பூர் கிராமத்தில் 590.51 ஏக்கர் நிலம் அனாதீனமாக உள்ளது.

இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட நிலங்களை பாகுபாடு மாற்றம் செய்து விவசாய நிலங்களாக நிபந்தனையுடன் ஒருவருக்கு ஒப்ப டைக்கலாம். ஆரம் பத்தில் அனாதீனம் நிலங்களுக்கு நில மேலாண்மை சம் பந்தப்பட்ட அலு வலர்கள் மூலமோ அல்லது நீதிமன் றத்தின் மூலமோ பலரும் உரிமை கோரி வந்தனர். அவ்வாறு எவரும் உரிமை கொண்டாடி பரிகாரம் தேடிக் கொள்ளாத நிலையில் உள்ள நிலங்கள் அரசு வசமே இருந்து வந்தது. அவ்வாறான நிலங்களை தீர்வை ஏற்படுத்தப்பட்ட நஞ்சை- புஞ்சை -தரிசு நிலங்களாக மாற்றி, மாவட்ட வருவாய் அலுவலர் நில ஒப்படை செய்யலாம். அந்த வகையில் பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி உரிமை இல்லாத நபர்களுக்கு நிலங்களை அளித்துள்ளனர்.

பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள நிலங்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பெரும் கட்டுமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இந்த கிராமங்களில் விளைநிலங்கள் வணிக நோக்கில் கட்டுமானங்கள் ஆக மாறிய விந்தைக்குப்பின் மிகப்பெரிய அரசியலும் அதிகார வர்க்கத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகமும் உள்ளது.

பெல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்திற்காக வாங்கப்பட்ட 30 ஏக்கர் மனைகளும் இதுபோன்று அனாதீனம் சொத்துக்களே ஆகும். அரசு அதிகாரிகளின் துணையோடு இந்த முறைகேடான செயல்களில் ஈடுபட்ட பெல் ஊழியர் சங்கத் தலைவர் தங்கராஜ் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டு, பாண்டியன் என்பவர் புதிய தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். இதையடுத்து, முன்னாள் தலைவர் தங்கராஜ், தாழம்பூரில் சங்கத்திற்காக எவ்வளவு இடங்கள் எவ்வளவு மதிப்பில் வாங்கினார் என்று குறிப்பாக சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் பணமோசடி .கையாடல் அதிகாரத் துஷ்பிரயோகம் முறையான கணக்குகள் தாக்கல் செய்யப்படாதது போன்ற காரணங்களுக்காக காவல்நிலையத்தில் அவர் மீது குற்றவியல் புகார் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

land

அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தங்கராஜ், உரிமையியல் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். பெல் ஊழியர் சங்கத்தில் நடைபெறும் இந்த மோதல்களால் தற்போது சங்கத்தின் வங்கி கணக்கு தற்காலிக முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு மதுரவாயல் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தேவதாஸ், தானே முன்னின்று இந்த சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட உயர்நிலை வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியோடு அனைத்து வேலைகளையும் செய்கிறார். பல கோடிகளுக்கு அதிபதியாக விலையுயர்ந்த கார்களில் அ.தி.மு.க. கொடியுடன் பவனிவரும் தேவதாஸ் இதுபோன்ற பழைய மகாபலிபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள அனாதீன சொத்துக்களை சட்டத்திற்கு புறம்பாக அதிகாரிகளின் துணையுடன் மாற்றம் செய்து, விற்பனை செய்ய புரோக்கரேஜ் செய்து கோடிகளை சம்பாதித்து விட்டு தற்போது பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி அடுத்த ரவுண்டில் சம்பாதிக்கும் முனைப்பில் உள்ளார்.

அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டங்கள் வானகரத்தில் நடைபெறும்போது கடந்த ஐந்து வருடங்களாக முழு செலவையும் இந்த தேவதாஸ் ஏற்றுக்கொள்வதால், கட்சித் தலைமை மற்றும் மந்திரிகள் இவரது செயல்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக அ.தி.மு.க.வினரே கூறுகிறார்கள்.

இதுகுறித்து கவுன்சிலர் தேவதாசை, நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ""பெல் ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் தன்னை தொடர்புகொண்டு கேட்டதால் அந்த இடங்களுக்கு, தான் பட்டா வாங்கி கொடுத்ததாக ஒப்புக்கொள்கிறார், அந்த பட்டாக்கள் போலியானது என்பதால் அரசு அந்த பட்டாக்களை தற்போது நிறுத்திவைக் கப்பட்டுள்ளது பற்றி கேட்டபோது அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது'' என்கிறார். (அவ ருடைய கருத்துகள் தனிச் செய்தியாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது)

land

மேலும் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர், தாழம்பூர் கிராமத்தில் சத்திய நாராயண ரெட்டி என்பவர் அதிகாரிகளுடன் சேர்ந்து சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து உள்ளதாகவும், இதுகுறித்து கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரித்து வருவதாகவும் அதன் முடிவில் சத்திய நாராயண ரெட்டி மீதும், அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்திருந்தார். இதனால் உஷாரான அதிகாரிகள், சத்திய நாராயண ரெட்டி மூலம் பெல் சிட்டிக்கு வழங்கிய பட்டாக்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக ஆவணங்களில் பதிவிடுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தாழம்பூர் கிராமத்தில் போலி பட்டாக்கள் மிகுதியாக இருப்பதால் யாரும் அங்கு நிலங்களை வாங்க வேண்டாமென்று காஞ்சிபுரம் கலெக்டர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் அரசு அளித்த உத்தரவாதப்படி கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறி.

இந்த விவகாரத்தில் அனாதீனம் என்று தடைசெய்யப்பட்ட இடங்களை எவருக்கும் வழங்க இயலாது என்ற வருவாய் நிலை ஆணைகளை மீறி செயல்பட்டது யார்? மேலிருந்து கீழ்மட்டம் வரை அதிகாரிகள் ஒரே நேர்கோட்டில் நின்று இந்த வேலைகள் அனைத்தையும் செய்ய எங்கிருந்து உத்தரவு வந்தது?

2020 ஜனவரியில் பட்டாக்கள் தடை செய்யப்பட்ட தாக கூறும் பெல் சிட்டி இடத்தில் தனியார் காவலாளிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, சாலைகள் போடும் பணி நடைபெறுவது எப்படி?

தாழம்பூர் கிராம நிலங்களின் பட்டா மற்றும் "அ' பதிவேடு போன்ற பொதுமக்கள் பார்வையிடும் ஆவணங்களை அதிகாரிகள் மறைப்பது ஏன்?

போன்ற கேள்விகளுக்கு விடை தேடி தாழம்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் தாசில்தார் போன்ற யாரும் பதிலளிக்க முன்வராத நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது எந்த விளக்கமும் கிடைக்க வில்லை. அரசுக்கு சொந்தமான- இன்றைய மதிப்பில் 150 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய 30 ஏக்கர் அனாதீனம் நிலங்களை இலவசமாக போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு தாரை வார்த்தது கீழ்மட்ட அதிகாரி களால் மட்டுமே செய்யக் கூடியது அல்ல. இதன் பின்னால் செல்வாக்கு மிகுந்த சில புரோக்கர்களும் அதிகாரமிக்க ஆளுங்கட்சி பிரமுகர்களும் வருவாய்த்துறை அதிகாரிகளும் உள்ளனர். தற்போது அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பட்டாக்களை ரத்து செய்வதாக ஆவணங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அந்த நிலங்கள் தனியார் வசம் இருப்பதை நாம் நேரில் சென்று பார்த்த போது அறியமுடி கிறது. இது மேலும் ஒரு மோசடி முயற்சியாகும்.

இதன் தொடர்ச்சியாக, ஒருவேளை நாளை அரசு தலையிட்டு பட்டா நிபந்தனைகள் மீறல் அடிப்படையில் அந்த நிலங்களை அரசாங்கமே எடுத்துக்கொண்டால் பாதிக்கப்பட போகும் பெல் ஊழியர்கள் சங்க உறுப்பினர்களுக்கு யார் பதில் சொல்வது என்ற கேள்வியுடன் மறைக்கப்பட்ட தாழம்பூர் கிராம 590 ஏக்கர் அனாதீன நிலங்கள் தொடர்பான நக்கீரனின் புலனாய்வுப் பயணம் தொடர்கிறது.

-கீரன், மனோ

படங்கள் : ஸ்டாலின்

______________

ஆவணங்கள் இல்லாமலேயே லே-அவுட்!

land

ஊரக வளர்ச்சித்துறையில் ஒரு நிலத்திற்கான லேஅவுட் ஒப்புகை பெறுவதற்கு 21 வகையான அடிப்படை ஆவணங்களை தாக் கல் செய்ய வேண்டும் என்பது அரசு விதி. அந்த நிலம் மறுசீரமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க கூடாது. 13 வருடங்களுக்கு வில்லங்க சான்றிதழ் இணைக்க வேண்டும். நிலத்தின் உரிமை குறித்து அரசு வழக்கறிஞர் அளிக்கும் அறிக்கை மற்றும் உரிமையாளரின் பிரமாண பத்திரம் ஆகியவை முக்கியமானவை. ஆனால் இந்த பெல் சிட்டி நிலங்களுக் கான லே அவுட் விண்ணப்பத்தில் இவை போலியாக வைக்கப்பட்டதா? அல்லது அந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லையா? என்பதற்கு எந்த பதிலும் யாரும் கூற தயாராக இல்லை. உள்ளூர் திட்ட குழும அதிகாரி தனது உத்தரவின் பார்வையில் 12 ஆவணங் களை குறிப்பிட்டு அரசுக்கு சொந்தமான இடத்தை வியாபாரம் செய்யும் நிலமாக மாற்றியிருப்பது இந்த நில ஊழலில் மிகவும் முக்கியமான ஒன்று. இதுவும் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.

நான் தலையிட்டேன்... இங்கே எல்லா நிலமும் அப்படித்தான் - அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ்!

landகுற்றச்சாட்டுகள் குறித்து அதிமுக மதுரவாயல் 147 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தேவதாஸிடம் நாம் விளக்கம் கேட்டபோது, ""தங்கராஜ், பெல் கம்பெனியிலிருந்து ஓய்வுபெற்றவர்களிடம் பணம் வசூல் செய்து சத்திய நாராயணன் என்கிற ரெட்டியிடம் ஒரு ஏக்கர் 1 கோடியே 60 ரூபாய் என பர்ச்சேஸ் செய்ய அக்ரிமெண்ட் போட்டுக்கொள் கிறார். இதற்கு, ரெட்டியிடம் 9 கோடி ரூபாயை முதலில் ஒயிட் டில் கொடுக்கிறார்கள். பட்டா வாங்கிவிட்டு டாக்குமெண்ட் பண்ணி தர்றேன் என்று சொல் லித்தான் இந்த பணத்தை வாங்கு கிறார் சத்தியநாராயண ரெட்டி. பிறகு, சிறுக சிறுக 96 கோடி ரூபாய் சத்யநாராயணரெட்டிக்கு கொடுக்கிறார் தங்கராஜ். இந்தப்பணம் எல்லாமே சங்க உறுப்பினர்களுடையது.

சத்தியநாராயணன் நேரடியாக பட்டா வாங்க வில்லை. கலெக்டர் பொன்னையாவுக்கு வேண்டப்பட்ட டீம்தான் பட்டா வாங்குகிறது. "பெல்' நிறுவனத்தின் ஓய்வுபெற்ற சங்கத்திலுள்ள ஜெயக்குமார் என்கிறவரின் பெயரில் பவர்’வாங்குகிறார்கள். சங்கப் பெயரில் பதிவு செய்கிறார்கள். ஆனால், பணம் கொடுத்தவர் களுக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த, இடைப்பட்ட காலத்தில் 30 கோடி ரூபாயைத் தவிர்த்து மற்ற 66 கோடி ரூபாயை சத்தியநாராயணரெட்டியிடமிருந்து திரும்ப வாங்கிவிடுகிறார்கள்.

இந்தச்சூழலில், தங்கராஜ் சொன்னபடி சங்க உறுப்பினர் களுக்கு இடத்தை பதிவு செய்து கொடுக்க மறுக்கிறார் என்று அவர்களுக்குள் பிரச்சனை வருகிறது. தங்கராஜுக்கு மேலுள்ள பாண்டியன், ஹேமந்த் உள்ளிட்டவர்கள் தங்கராஜிடம் இதுபற்றிக் கேட்கிறார்கள். மேலும், தங்கராஜ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் கொடுக்கிறார்கள். அப்போது, சங்க உறுப்பினர்களின் பணத்தில் வாங்கிய இடத்தை வேறு பெரிய பார்ட்டியிடம் அதிக விலைக்கு விற்றுவிட்டு அதில் வரும் பணத்தில் சங்க உறுப்பினர் களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்றும் முடிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில்தான், தங்கராஜையும் ஜெயக்குமா ரையும் ஓரங்கட்டிவிட்டு பாண்டி யனும் ஹேமந்தும் சங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்கள். அதற்குப் பிறகு, அந்த இடத்திற்கு செல்லமுடியாமல் தவிக்கிறார்கள். அந்த நேரத்தில், என்னை அணுகுகிறார்கள். "சார், நாங்க பட்டால்லாம் வாங்கிட்டோம் சார். 150 கோடி ரூபாய்க்குமேல செலவு செஞ்சுட்டோம். லோக்கலில் பிரச் சனையா இருக்கு. கொஞ்சம் பொசிஷன் எடுத்து தரமுடியுமா'ன்னு எனது நண்பர் மூலமாக என்னை அணுகி கேட்கிறாங்க. உங்கக் கையில பட்டா இருக்கு. டாக்குமெண்ட் இருக்கு. ஏன், பயப்படுறீங்கன்னு சொன்னேன்.

அதன்பிறகு நான், இதில் தலையிட்டு அவர்களுக்கு ரோடு போட்டுக்கொடுத்து, பொசிஷன் எடுத்துக்கொடுத்து 9 ஏக்கரை 120 பேருக்கு மேல் பட்டா பதிவு பண்ணிக் கொடுத்திருக்கேன். ஏமாந்துட்டோம்னு வந்து அணுகியவர்களுக்காக இதை பண்ணிக்கொடுத்தேன். இந்த, ஏரியா முழுக்க அப்படித்தான் இடங்களை பட்டா போட்டி ருக்கிறார்கள். அவர்கள், 40 ஏக்கர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் வெறும் 23 ஏக்கர்தான் வாங்கியிருக்கிறார்கள். இதுதான், இதில் நடந்தது''’என்று விளக்கம் அளித்தார்.

நாம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை தொடர்புகொண்டு, அரசுக்கு சேரவேண்டிய அனாதீன இடங் களை மோசடியாக பட்டா போட்டது குறித்து நீதிமன்ற பரிந்துரையில், இதற்கு, விசாரணை குழு அமைத்தீர்களா? இதில், ஊழல் மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா? என்று பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் கேட்ட போது, ""அவருக்கு, உடல்நிலை சரியில்லை. த்ரோட் இன்பெக்ஷன் இருப்பதால் அவரால் பேச முடியாது'' என்றார் ஃபோனை அட்டெண்ட் செய்த அவரது பி.ஏ. அதனால், நமது கேள்விகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பி விளக்கம் கேட்டோம். "விரைவில் அவரிடம் கேட்டுவிட்டு பேசுகிறேன்' என்றார். ஆனால், இதழ் அச்சாகும்வரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடமிருந்து நமக்கு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. அவரது விளக்கத்தை வெளியிட தயாராகவே இருக்கிறோம்.