மக்கள் உயிர் பறி போவதை மத்திய-மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றனவா? உடனடியாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்த தற்கொலைகள் பற்றிய கேள்வி சாதாரணமானதல்ல.
இந்த சூதாட்டத்தின் கொடூரம் குறித்து கடந்த ஜூலை 25-28 இதழிலேயே "ஆன்லைன் ரம்மி ஏமாத்து-ஊரடங்கால் சீரழியும் குடும்பங்கள்' என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டு எச்சரிக்கை மணி அடித்தது நக்கீரன்தான். தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அழைக்கும் விளம்பரங்கள் அதிகளவில் வந்து கொண்டிருந்தன. கொரோனா ஊரடங்கு நிபந்தனைகள் கடுமையாக இருந்த காலகட்டத்தில், வீட்டுக்குள்ளேயே இருந் தவர்களின் மனது இந்த ஆன்லைன் சூதாட்ட வலையில் விழுந்தது.
திரைத்துறையிலும் கிரிக்கெட்டிலும் கொடிகட்டிப் பறக்கும் பிரபலங்களே இதற்கான விளம்பரங்களில் நடித்து, ரம்மி விளையாட அழைத்ததால், இதன் ஆபத்து புரியாத நடுத்தர- ஏழை சூதாடிகள் பலர் சிக்கிக் கொண்டனர். ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கையிருப்புத் தொகையையும்- கடன் தவணை செலுத்த வேண்டிய தொகையையும் வைத்து ஆன்லைன் ரம்மி ஆடினர். விளம் பரங்களில் தெரிவித்தது போல, லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என நினைத் தவர்களுக்கு கையிலிருந்த ஆயிரங்கள் கரைந்தன. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகமானது. அதனால், தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது.
ஆன்லைன் ரம்மி ஆட்டம் என்பது உண்மையாகவே விளையாட்டுதானா, அல்லது தொழில்நுட்பத்தின் கண்கட்டு வித்தையா என்று அதில் பங்கேற்பவர்களுக்குத் தெரியாது. எங்கோ ஓரிடத்திலிருந்து இயக்கப்படும் தொழில்நுட்பத்திற்கு, பணம் கட்டி ஆடுபவர்கள் பலிகடா ஆகிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியை நக்கீரன் விரிவாக எடுத்துச் சொன்னது. அதுமட்டு மின்றி, இந்த விளையாட்டினால் பாதிக்கப்பட்ட சிலர், மற்றவர்களுக்கு எச்சரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களைப் பதிவேற்றினர். அப்படிப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று மிரட்டியது ஆன்லைன் ரம்மி கும்பலின் அடியாள் படை.
தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவது பற்றி, லோக்கல் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை. சைபர் கிரைமும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அனுமதி பெற்றே ஆன்லைன் சூதாட்டம் நடத்தப்படுகிறது என்றன நிறுவனங்கள். அரசும் காவல்துறையும் அதையே தெரிவித்து கைவிரித்தன. கார்ப்பரேட்டுகள் பின்னணியில் நடக்கும் இந்த சூதாட்டத்தால் மக்களின் உயிர் உருட்டப்படுவதை நக்கீரன் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தது.
ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கத்துக்கு அடிமையான புதுச்சேரி கோரக்காடு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார், ஒரு லட்சம் ரூபாய் வரை ஜெயித்த ஆசையில், தொடர்ந்து ஈடுபட்டு 40 லட்சத்துக்கு மேல் இழந்தார். இனி மீளமுடியாது என்பதால் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்ட அவர், ‘என் சாவுக்கு காரணம் ஆன்லைன் ரம்மிதான், அதை தடை செய்யுங்கள் என மரண வாக்கமூலத்தைப் பதிவு செய்துவிட்டு, தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
பண்ருட்டி மேலப்பாளையம் அருள்வேல் தனது தாயாருடன் சேர்ந்து தற்கொலை. திருச்சி ஜீயபுரம் அனலை கிராமம் ஆனந்த், சென்னை டி.பி.சத்திரம் கல்லூரி மாணவர் நிதிஷ்குமார், சென்னை செங்குன்றம் அண்ணா நகர் தினேஷ், விழுப்புரம் ஆதனூர் குமரேசன், கோவையில் ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை என உயிர்ப்பலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இந்த விவரங்கள் அனைத்தையும் 2020 நவம்பர் 07-10 தேதியிட்ட நக்கீரன் இதழில், ‘உருட்டப்படும் உயிர்கள்-ஆட்டிப்படைக்கும் ஆன்லைன் சூதாட்டம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எம்.வினோத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இதுபோன்ற சூடாட்ட விளையாட்டுகளைத் தடை விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு சட்டரீதியான அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தெலுங்கானா, ஓடிசா, மராட்டியம், ஆந்திரா, நாகலாந்து போன்ற மாநிலங்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்துள்ளது என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுபோலவே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய-மாநில அரசுகளுக்கு ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அத்துடன் இந்த சூதாட்ட விளம்பரங்களில் நடித்த பிரபலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்க, அதன்பிறகே எடப்பாடி அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை என அறிவித்தது.
இதுதொடர்பாக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கவர்னரும் உடனடி ஒப்புதல் தந்ததால், அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது. மக்கள் நலன் காக்கும் நக்கீரனின் அயராத செயல்பாட்டுக்கு இது மேலும் ஒரு வெற்றி. அவசர சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தண்டனைகளின் படி, ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கீரன்