வாச்சாத்திக் கொடூரங்களால் பாதிக்கப் பட்ட மலைவாழ் மக்களுக்காக நக்கீரன் எடுத்த தொடர் முயற்சிகள் வீண்போகவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டங்களுக்குப் பின், பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கான நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்பதில், நம் நக்கீரன் தலை நிமிர்வோடு பெருமிதம் கொள்கிறது.
91-ல் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் முதன்முதலாக அமர்ந்தார். அவர் வந்த பிறகுதான், அதிகாரத்திற்கு விஷக்கொடுக்கு முளைத்தது. தமிழகத்தில் அதிகார வர்க்கத்தினரின் அதிகார அத்துமீறல்களும் அடாவடி வெறியாட்டங்களும் அதன்பிறகே ஆரம்பித்தன.
92 ஜூன் 20ஆம் தேதி குலை நடுங்கவைக்கும் அந்த வாச்சாத்திக் கொடுமைகளும் அதிகார வர்க்கத் தினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன. அதற்குக் காரணம், அங்குள்ள சித்தேரி மலையில் இருந்த சந்தன மரங்களை, அப்போதைய ஆளுங்கட்சிப் பிரமுகர்களும், வனத்துறை அதிகாரிகளும் கைகோத்துக் கொண்டு சரமாரியாக வெட்டி விற்றுவந்தனர். மரத்தை வெட்டுவதற்கு வாச்சாத்தி கிராமத்து மலைவாழ் மக்களை கூலித் தொழிலாளிகளாகப் பயன்படுத்தி வந்தார்கள்.
அந்த மலைவாழ் மக்கள் ஒருகட்டத்தில் மறுக்க, காட்டில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்று வருவதாகவும், அவர்கள் மறைத்து வைத்திருக்கும் சந்தன மரங்களை பிடிக்கச் செல்வதாகவும் சொல்லிக்கொண்டு தான் அன்று அந்த மிருகங்கள் வாச்சாத்தி கிராமத் திற்குள் நுழைந்தன.
அந்தக் கும்பலில் 155 வனத்துறையினரும் 108 காவல்துறையினரும் 6 வருவாய் துறையினருமாக மொத்தம் 269 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வெறிபிடித்த ஓநாய்கள் போல் அங்கே படையெடுத்துச் சென்றனர்.
அவர்கள் நிகழ்த்தப்போகும் கொடூரங்கள் எதையும் அறியாத அந்த கிராமம், அவர்கள் நுழையும் வரை நிம்மதியில் ஆழ்ந்திருந்தது. இவர்கள் அங்கே சென்றதும் அவர்கள் நிம்மதியில் இடிவிழத் தொடங்கியது.
போன வேகத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தை கள் என்றெல்லாம் பார்க்காமல், கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாகத் தாக்கினர். வீடுகளைச் சூறை யாடினர். பெண்களை விருப்பம் போல் ஆபாசமாகக் கையாண்டனர். அந்த கிராமமே உயிர்பயத்தில் அலறியது. அந்த களேபரத்திற்கிடையே 90 பெண்கள் உள்ளிட்ட 133 பேரைக் கைது செய்து ஊர் மரத்தடிக்குக் கொண்டு வந்தனர். அதோடு நிறுத்தாமல், அவர்களில் 13 வயது சிறுமி உட்பட 18 பெண்களைத் தேர்ந்தெடுத்து தனியே அழைத்துச் சென்றனர். அவர்களில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இருந்தார். அந்த வெறி நாய்கள், அத்தனை பேர் உடையையும் உருவின. அவர்கள் கதறித் துடித்த நிலையிலும் அவர்களை வல்லுறவு செய்து, பாலியல் கொடுமைகளையும் அரங்கேற்றின. சட்டத்தை காக்கவேண்டியவர்களே, கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத கொடூரங்களை எல்லாம் நிகழ்த்தினர்.
இதையறிந்த அப்போதைய அரூர் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வான அண்ணாமலை, நக்கீரனுக்கு பதட்டத் தோடு தகவல் கொடுத்து, இதை வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். உடனே அன்றைய நக்கீரன் நிருபரான ஜெயப்பிரகாஷ் வாச்சாத்திக்குச் சென்றார். அவர்கள் போன போது, ஊரே வெறிச்சோடிப் போயிருந் தது. கைதானவர்கள் போக, மிச்ச சொச்சம் இருந்தவர்கள் அனைவரும், காட்டுப் பகுதிகளுக்கு ஓடிப்போய் பதுங்கி இருந்தனர். அவர்களை எல்லாம் சந்தித்து தைரியமூட்டிப் பேச வைத்து, அங்கே அரங்கேறிய அத்தனை கொடுமை களையும் நக்கீரன்தான் முதன்முதலாக வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியது. அதில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களிடம் துடைப்பத்தைக் கொடுத்து ஊர்க் கவுண்டரை போலீஸ் அடிக்கச் சொன்னதையும், அவருக்கு சிறுநீரைக் கொடுத்து குடிக்கச் சொல்லி கொடுமைப் படுத்தியதையும்கூட நக்கீரன் பதிவு செய்யத் தவறவில்லை. இதன் பிறகே இதில் பாதிக்கப்பட்டவர்கள் அரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் வெளியே வந்தபோது, அப்போதிருந்த ஜெ.’ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுமே என்று, அன்று வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் ஸ்பாட்டுக்கு விரைந்தார். அங்கே எந்தக் குற்றமும் நடக்கவில்லை என்று எல்லாவற்றையும் மறைக்கும் முயற்சியில் இறங்கினார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 93-ல் எடுத்துச் செல்லப்பட்ட போது, அப்போதிருந்த பெண் நீதிபதியான பத்மினி ஜேசுதுரையே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார்.
சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளராக இருந்த தோழர் நல்லசிவன் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டிய நிலையில், மலைவாழ் மக்கள் இயக்கத்தினர் உட்பட சமூக ஆர்வலர்கள் களமிறங்கி நின்றனர். இதைத் தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.
பாதிக்கப்பட்டவர்கள் மலைவாழ் மக்கள் என்பதால், இதைக் கருணையோடு அணுகிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது. அதன்பிறகுதான் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. நக்கீரனின் வாக்குமூல ஆவணங்கள் வாச்சாத்தி வழக்கிற்கே ஆதார சுருதியாக அமைந்தது.
இதன் அடிப்படையில் வனத்துறையை சேர்ந்த 155 பேரும், காவல்துறையை சேர்ந்த 108 பேரும் வருவாய்த்துறையினர் 6 பேருமாக மொத்தம் 269 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த வழக்கு 2008ம் ஆண்டில் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமர குருபரன் தீர விசாரித்துவிட்டு, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில், தீர்ப்பு வழங்கிய நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என கடந்த 2011ஆம் ஆண்டு அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பு வந்தபோது, வாச்சாத்தி நிகழ்வுகளை உரியவகையில் நக்கீரன் அழுத்தமாகப் பதிவுசெய்ததால்தான், இப்படி ஒரு நம்பிக்கையூட்டும் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.” என்று ’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்’ தலைவர் சண்முகமும், பாதிக்கப்பட்ட மக்களும் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் சொன்னார்கள். அப்போதே இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சம்பவ இடத்திற்கே சென்று விசாரித்தார். நிலைமையின் தகிப்பை முழுதாக அறிந்தார். பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை அப்பட்டமாகத் தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, நீதிபதி வேல்முருகன், தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறார். மேலும் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்ட 18 பெண்களுக்கும் தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
ஏறத்தாழ 30 ஆண்டு காலமாக, நக்கீரனின் உறுதுணையோடு நடந்த சட்டப் போராட்டத்தின் பயனாகவே, இந்த தீர்ப்பின் மூலம் இப்போது நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது.
முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பில் அப்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த ராமானுஜம், அப்போதைய மாவட்ட ஆட்சியர் தசரதன் என மேலும் பல வனத்துறையினர் விடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது குற்றவாளிகளாக இந்த தீர்ப்பில் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் ஆறுதல்.
இப்படியொரு மகத்தான தீர்ப்பு கிடைப்பதற்குக் காரணமான மலைவாழ் மக்கள் இயக்கத்தினர், கம்யூனிஸ்ட் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த வழக்கறிஞர்கள் என அத்தனை பேரையும் இன்று ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகம் பாராட்டுகிறது.
இந்த வாச்சாத்தி விவகாரத்தில், கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு நம் நக்கீரன் தம்பிகள் ஜெயப்பிரகாஷ், மகரன், வடிவேலு நடத்திய புலனாய்வுக் களப்பணிகளும், அது திரட்டிய ஆவணங்களும் தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அந்த வகையில் நக்கீரன் எப்போதும், பாதிக்கப்படுகிறவர்களுக்கான குரலை எப்போதும் ஓங்கி ஒலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
"தீர்ப்பில் சொல்லப்பட்டவாறு, இழப்பீடு மற்றும் அரசுப்பணி போன்ற நிவாரணங் களை, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க, தமிழக அரசு முன்வரவேண்டும்' என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
ஆசிரியர்