குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ஜொலித்து, புகழ் பெற்ற பின் திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் மீனா மட்டுமே. பேபியாக இருந்து ஹீரோயினாக லைம்லைட்டுக்கு வந்தவுடனேயே அஜீத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு இனிய இல்லத்தரசியானவர் ஷாலினி. லாக்டவுனுக்கு முன்பு வரை பிரபல சேனலில் டாக்ஷோ நடுவராக வந்து கொண்டிருந்த நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் "தெறி' படத்தில் விஜய்க்கு மகளாக அறிமுகமாகிவிட்டார். அம்மாவைப் போல இவரும் டாப் ஹீரோயின் ஆனாலும் ஆச்சர்யமில்லை.
ஆனால் 90-களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்கள், ஹீரோயின் ஸ்டேஜுக்கு வந்தும் சினிமாவைவிட்டு விலகிவிடுவார்கள். காரணம் வேறு வகையான இம்சைகள், தொந்தரவுகள். ஆனால் லேட்டஸ்ட் பேபி ஸ்டார்ஸ் எல்லோருமே ஹீரோயின் ஆகி ஒருகை பார்த்துவிடுவது என்ற லட்சியத்துடன் களம் இறங்கி கலக்கி வருகிறார்கள்.
நிவேதா தாமஸ்
மலையாள சினிமாவில் 11 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே மாநில அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றவர். "ஜில்லா' படத்தில் விஜய்யின் தங்கையாக பளிச்சென தெரிந்தார், "பாபநாசம்' படத்தில் கமலின் மூத்த மகளாக அனைவருக்கும் தெரிந்த முகமானார். சமுத்திரக்கனியின் "போராளி'யில் கிட்டத்தட்ட ஹீரோயின் ரேஞ்சுக்கு அறிமுகமாகியும் ஜொலிக்க முடியவில்லை.
"தர்பார்'-ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக நடித்ததும் இவருக்கு சூப்பர் அந்தஸ்து கிடைத்தது. "போராளியி'ல் விட்ட இடத்தைப் பிடித்தே தீருவது என்ற போராட்ட குணத்துடன் முழுமூச்சாக டோலிவுட்டில் இறங்கினார். தெலுங்கு ஹீரோக்களான நானி, சுதீர்பாபு ஆகியோர் நடிக்க, மோகன கிருஷ்ணா என்பவர் டைரக்ஷனில் "வி' என்ற தெலுங்குப் படத்தில் ஹீரோயினாகிவிட்டார். என்ன ஒண்ணு இந்தப் படம் கடந்த மாதம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகிவிட்ட்து. அதனால் என்ன இனிமே தான் இருக்கு நம்ம ஆட்டம் என மனதை திடப்படுத்திக்கொண்டு, விஜய்தேவர ஹொண்டா, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற டாப் ஜோடி போடும் முயற்சியில் இறங்கியுள்ள நிவேதா தாமஸுக்கு இப்போது வயது 22.
அனிகா சுரேந்திரன்
இந்த பாப்பாவுக்கு சொந்த மாநிலம் சேட்டன்களின் பூமிதான். இப்போது 16 வயதாகும் அனிகா 4 வயதிலேயே பேபி ஸ்டாராக அறிமுகமாகி பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் "என்னை அறிந்தால்' படத்தில் அஜீத்திற்கு மகளாக குட்டி பாப்பாவாக வந்தார். "விஸ்வாசம்' படத்திலோ கொஞ்சம் பெரிய பாப்பாவாக பளிச்சென காட்சியளித்தார்.
இப்போது விஜய்சேதுபதியின் "மாமனிதன்'’படத்திலும் நடித்து வரும் அனிகா, இனிமேல் ஹீரோயின்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தமிழ் ஃபீல்டில் தன்னோட குழந்தை முகம் பதிந்துவிட்டதால், மலையாளத்தில் இளம் ஹீரோக்களுக்கு ஹீரோயினாகி, அதன் பின் தமிழுக்கு வந்தால், அதுக்கு மவுசே தனிதான் என்ற எதிர்கால கணக்குடன் இருக்கார் அனிகா.
வேண்டாம் ஹீரோயின் சான்ஸ் -பேபி ஸ்டார் உஷார்!
"அள்ளித்தந்த வானம்' படத்தில் பிரபுதேவாவிடம் அடைக்கலமாகும் அனாதைச் சிறுமியாக அறிமுகமானவர் பேபி கல்யாணி.
"ஜெயம்' படத்தில் ஹீரோயின் சதாவின் தங்கை, "ரமணா'வில் விஜயகாந்தின் வளர்ப்பு மகள்களில் ஒருவர், அதன் பின் தெலுங்கு, கன்னட சினிமாக்களில் பிஸியான பேபி ஸ்டாராக இருந்து, வளர்ந்து 16 வயதானதும் பிரபல சேனல் ஒன்றில் டாக் ஷோவிற்கும் டான்ஸ் புரோக்கிராமிற்கும் சான்ஸ் கிடைத்தது. சேனலில் முகம் தெரிந்தவுடன் ஹீரோயின் சான்ஸும் கல்யாணி வீட்டுக் கதவைத் தட்டியது.
கல்யாணியோ மிக சமீபத்தில், அதாவது ஊரடங்கிலிருந்து முழு தளர்வுகள் அறிவிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்பு, திடீரென ஃபேஸ்புக்கில் மனம் திறந்தார். சினிமாவிலும் டி.வி.யிலும் நான் சந்தித்த மோசமான மனிதர்களைப் பற்றி பேசப்போறேன். அப்போது எனது அம்மாவுக்கு தமிழ் தெரியாது, மிகவும் சிரமப்பட்டுத்தான் புரிந்துகொள்வார். ஆனால் எனக்கு தமிழ் நன்றாக தெரியும். என்னிடம் கதை சொல்லி முடித்ததும் என் அம்மாவிடம், ‘யுவர் டாட்டர் மே பி அக்ரி சம் அட்ஜெஸ்மெண்ட்’ என அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவார்கள்.
ஷூட்டிங்கே ஆரம்பிக்காமல் அட்ஜெஸ்மெண்டிலேயே குறியாக இருந்தப்பதான் அவர்களின் கெட்ட எண்ணம் புரிந்தது. அதன்பின்தான் ஹீரோயின் சான்ஸே வேண்டாம் என முடிவெடுத்தேன். அதேபோல் சினிமாவைவிட டி.வி. ஏரியா படுகேவலம். 2013-ல் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் செட்டிலாகிவிட்டேன்’ என மனதில் இருப்பதைக் கொட்டிவிட்டார் பூர்ணிதா (எ) கல்யாணி.
-ஈ.பா.பரமேஷ்வரன்