போலீஸôரால் சித்ரவதைக் குள்ளாகி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரத்தில் விசாரணையை துவக்கி வேகம் காட்டிய சிபிஐ, தங்களுக்கு கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்டமாக கைது நடவடிக்கைகளை நோக்கி முன்னெடுத்து வருகின்றது.
கடந்த 15-07-2020 அன்று தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் துணைகண்காணிப்பாளர் குமார் தலைமையில் விசாரணையை துவக்கிய மனித உரிமை ஆணையத்தினர் முதற்கட்டமாக, மருத்துவர் விண்ணிலா, கோவில்பட்டி ஜெயில் சூப்பிரண்ட் சங்கர், சாத்தான்குளம் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் மற்றும் தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தனர். காலை 11.40 மணி முதல் மதியம் 01.25 வரை, சாத்தான்குளம் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஆத்திக்குமார் மிரட்டிக் கூறியதாலே இவ்வாறு நடந்து கொண்டேன் எனவும், சம்பவ தினத்தில் நடந்தவற்றையும் மறைக்காமல் பகிரங்கமாக மருத்துவர் விண்ணிலா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதே வேளையில், மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிய கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் மருத்துவரும், சிறைச்சாலை மருத்துவருமான வெங்கடேஷிடம், ""நக்கீரனில் வெளிவந்த மருத்துவ குறிப்பு நீங்கள் எழுதியதா...? அது எப்படி வெளிவந்தது..?'' என்பது உள்பட பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அங்கு பதிலளித்த பின், தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் மனித உரிமை ஆணையத்தினர் முன் ஆஜராகி அங்கும் பதிலளித்து புறப்பட்டிருக் கின்றார்.
அதே தினத்தில் சிபிஐ டீமோ, கைது செய்யப்பட்டு தங்கள் வசமிருந்த காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், இரண்டு தலைமை காவலர்கள் உள்ளிட்ட ஐந்து போலீசாரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கும், பென்னிக்ஸின் மொபைல் கடைக்கும் அழைத்து வந்து, 19ஆம் தேதி அன்று நடந்தது என்ன? விசாரணை எப்படி நடந்தது என்பது குறித்து பல்வேறு விஷயங்களை கேள்வியாக எழுப்பி முத்துராஜா, எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்ளிட்டோரை நடித்துக் காட்ட செய்து வீடியோ ஆவணமாக பதிவு செய்தது.
விசாரணையின் போது போலீஸ் எழுத்தர் பியூலா செல்வகுமாரி மற்றும் தலைமைக் காவலர் ரேவதி இருவரிடமும் விசாரணை நடத்தியவர்கள், ரேவதியிடம், ""எந்த டேபிளில் வைத்து அடித்தனர்..? எந்த பெஞ்சில் வைத்து அடித்தனர்..?'' என டேபிளையும் பெஞ்ச்களையும் அடையாளம் காட்டக் கூறியுள்ளனர். இடம்மாறி கிடந்த டேபிளை தேடிப்பிடித்துக் காட்ட குறிப்பெடுத்துக் கொண்டது சிபிஐ.
ஜூலை 16 அன்று தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக கோவில்பட்டி சிறையில் இருந்து பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்ற சிறை காவலர்கள் வேல்முருகன், செந்தூர் ராஜா மற்றும் மாரிமுத்து ஆகியோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்த நிலையில், தந்தை மகன் உடலை உடற்கூறாய்வு செய்த அரசு மருத்துவர்கள் மூன்று பேரிடம் மறுநாள் விசாரணையை நடத்தியது மனித உரிமைகள் ஆணையம்.
சனிக்கிழமையன்று மாலை 6.50 மணியளவில் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு வந்த சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான ஆய்வாளர்கள் அனுராக் சின்கா, பூரண் குமார், உதவி ஆய்வாளர்கள் சுசில்குமார் வர்மா, சச்சின், சிபிஐ போலீஸôர் அஜய்குமார், சைலேந்திர குமார், பவன்குமார், திரிபாதி உள்ளிட்ட டீம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்களுக்கு காயங்கள் ஏதும் இருந்ததா என சிறை கண்காணிப்பாளர், வார்டன்கள் மற்றும் கைதிகளிடம் விசாரணை நடத்தினர். சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றது சிபிஐ டீம்.
""சிபிஐ தரப்பிற்கு பல வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதில் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் கொடுத்த எழுத்தர் பியூலா செல்வ குமாரி சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் வந்த அதே வேளையில், காவலர் முத்துராஜாவோ, ""சம்பவம் நடைபெற்ற பொழுது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ûஸ தரமற்ற வார்த்தைகளில் பேசியதாகவும், பாலகிருஷ்ணனிடம் ஆரம்பித்த விவகாரத்தினை ரகுகணேஷிடம் கூறி தூண்டி விட்டு, ""உங்க பங்குக்கு நீங்களும் செமத்தியா சாத்துங்கன்னு கூறி லத்தியை எடுத்துக் கொடுத்ததே அந்தம்மாதான்'' என பியூலாவுக்கு எதிராகத் தெரிவித்துள்ளாராம். விரைவில் எங்களது கைது வரிசையில் பியூலாவும் இடம் பெறுவார்'' என்கின்றது சிபிஐ வட்டாரம்.
அதேவேளையில், ""சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ- தரப்பில் வழக்கறிஞர் யாருமில்லை. கடைசியாக ஜெயக்குமார் என்பவர் சிபிஐ வழக்கறிஞராக பணியாற்றி உடல் நலக்குறைவால் பணியினை விட்டு விலகி ஏறக்குறைய ஒன்றரை வருடமாகி விட்டது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை வரை பலவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது போல்தான் இந்த வழக்கும் கிடப்பில் போடப்படும் சூழல் இருக்கின்றது'' என கவலை தெரிவிக்கின்றார் சென்னை உயர்நீதிமன்றக் கிளையின் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம்.
-நாகேந்திரன்