நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வீ.கரப் பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி நித்யா, கடந்த மார்ச் 11ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை யானார். இவ்விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. கையிலெடுத்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நமது நக்கீரனில் ஏற்கெனவே செய்திகள் வெளியிட்டுள்ளோம். தற்போது இவ்விவகாரம், ஊரில் பெரும்பான்மையாக இருக்கும் வேட்டுவ கவுண்டர்களுக்கும், கரும்பாலை நடத்தி வரும் கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்குமான மோதலாக உருமாறியது.

nn

கரும்பாலைகளில் வடமாநிலத் தொழி லாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களால்தான் நித்யா கொலை செய்யப்பட்டார் என்றும், அதனால் கரும்பாலைகளை எப்படியாவது மூடவைக்க வேண்டும் என்றும் நித்யாவின் வேட்டுவக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கிளம்பியுள்ள தாகக் கூறப்படுகிறது. நித்யா கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் சென்ற பிறகு, தீ வைப்பு, வயல்வெளிகள் நாசம் உள்ளிட்ட சம்பவங் களை மட்டும் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையிலான தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்த தீபக், ராகுல் என்கிற ஸ்ரீராகுல், ஆனங்கூரைச் சேர்ந்த பிரதீஷ் என்கிற சக்திவேல் ஆகியோரை மே 28ஆம் தேதி கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்தோம். "நித்யா கொல்லப்பட்ட பிறகு நடந்த தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியில் வேட்டுவ கவுண்டர் சமூக இளைஞர்கள் இருப்பது தெரிய வந்தது. தீபக், ராகுல், பிரதீஷ் ஆகியோர்தான் மூளையாக செயல்பட்டு, வாட்ஸப்பில் 'ஸ்பாட் கய்ஸ்' என்ற பெயரில் குழு தொடங்கி உள்ளனர். சக்திவேல் செல்போனில் ஆய்வு செய்தபோது, 'நித்யாவை கொன்றவர்களை ஏதாவது பண்ணியே ஆகணும்' என்று தீபக்குடன் சாட் செய்திருப்பது தெரிய வந்தது. தீபக் தனது காதலியிடம் வாட்ஸ்ஆப்பில் ஆலையை எரித்தது தொடர்பாகப் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் தான் திட்டம் தீட்டியுள்ளார். இதுபோன்ற ஆதாரங்களின் அடிப்படையில்தான் மூவரையும் கைது செய்திருக்கிறோம்.'' என்கிறார்கள் காவல்துறையினர். இவர்களிடம் அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காவல்துறை கைப் பற்றியுள்ளது. கடந்த ஜூலை 18ம் தேதி குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியது. இவர்கள் மூவரும், தங்கள் ஜாதிப்பெண்ணைத் தொட்டால் என்ன நடக்கும்னு காட்டுவதற்காகத்தான் இப்படி திட்டமிட்டோம் என்று கூறியுள்ளனர்.

nn

Advertisment

குண்டாஸில் கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான ராகுலின் தந்தை குழந்தைவேலு நம்மிடம், ''எங்க ஊர் பசங்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து கலெக்டரிடம் முறையிட்டோம். அவரும் முன்னாள் டி.எஸ்.பி. கலையரசனிடம், பசங்களை துன்புறுத்தக்கூடாது என்று சொல்லிட்டுப் போனார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை அதிகாரி மிரட்டியிருக்கிறார். அதன்பிறகு, ராகுல், தீபக், பிரதீஷ் ஆகியோரை கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்து விட்டனர். டிராக்டர்களுக்கு தீ வைப்பு சம்பவம் தொடர்பாக இவர்களை கைது செய்திருப்பதாக காவல்துறை சொல்கிறது. அந்த சம்பவம் நடந்தபோது என் மகன் வீட்டில் தான் இருந்தான். நித்யாவின் கொலைக்கு நீதி கேட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து போராடி வந்தேன். அதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் என் மகனை கைது செய்துள்ளனர்'' என்றார்.

சென்னை அம்பேத்கர் சட்டப்பணிகள் சங்கத்தின் பொறுப்பாளர் ரத்தினசாமி தலை மையிலான உண்மை கண்டறியும் குழு, நித்யா கொலை, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தது. இது தொடர்பாக ரத்தினசாமி நம்மிடம் "நித்யா கொலைக்குப் பிறகு வேட்டுவ கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை தலைகீழாக கட்டித் தொங்க விட்டு அடித்து டார்ச்சர் செய்துள்ளனர். 'எஸ்' டைப் நாற்காலி பொசிஷனில் நிற்கச்சொல்லி, லத்தியால் அடித்துள்ளனர். தீபக், ராகுல், பிரதீஷ், சுதாகர், பிரவீன், தர்மராஜ் ஆகியோரை நீதிமன்றக் காவலுக்கு அழைத்துச் செல்லும்போது, காவல்துறை டார்ச்சர் செய்ததாக நீதிபதியிடம் சொல்லக்கூடாது என்றும், அவ்வாறு சொன்னால் சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில் தப்பிக்க முயன்றதாகக்கூறி, என்கவுன்ட்டர் செய்து விடுவோம் என்றும் மிரட்டியிருக்கிறார்கள். பெற்றோர் மீதும் வழக்குப் போடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

nn

Advertisment

காவல்துறை விசாரணையில், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. நித்யா கொலை வழக்கில் சந்தேகத்திற்குரிய வடமாநிலத் தொழிலாளர்களிடம் இதுவரை காவல்துறை விசாரிக்கவே இல்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணை யிலும் சந்தேகம் இருக்கிறது'' என்றார்.

நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணனிடம் கேட்டபோது, "நித்யா கொலைக் குப் பிறகு கரும்பாலைகளுக்கு தீ வைப்பு, பெட் ரோல் குண்டுகள் வீசியது, வாழைத்தோப்பு, பாக்குத்தோப்பை சேதப்படுத்தியது தொடர் பாக போதிய ஆதாரங்கள் அடிப்படையில் குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம். விசாரணையின்போது யாரையும் டார்ச்சர் செய்யவில்லை,'' என்றார். படித்த இளைஞர்கள் சாதிய வன்மத்துடன், ஹீரோயிஸம் என்ற பெயரில் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண் டதுதான் இத்தனை பிரச்னைக்கும் காரணம் என்கிறது காவல்துறை.