பேராவூரணி பேரூராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து தி.மு.க. பிரமுகர் ஒருவரே உயர்நீதிமன்றம் வரை செல்ல, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பும் நடவடிக்கை எடுக்காமல் கடுக்கா கொடுக்கமுயன்ற நிலையில், நீதிமன்றம் கிடுக்கிப்பிடி நெருக்கடி கொடுத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதால் உரிய ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான ஒப்பந்தக்காரர் செந்தில்குமார் என்பவர் துறைசார்ந்த அரசு அலுவலர்களிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், பேரூராட்சிகள் துறை உரிய ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்வதுடன், தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை யடுத்து பேரூராட்சி இயக்குநர் அலுவலக அலுவலர்கள் பேராவூரணி பேரூராட்சியில் ஆய்வு செய்தபோது ஒப்பந்தங்கள் போடப் பட்டு சாலைப்பணிகள் செய்யாமலேயே பணிகள் முடிவடைந்ததாக அப்போதைய செயல் அலுவலர் பழனிவேல் உதவியுடன் பல லட்சங்களை தி.மு.க. பேரூராட்சி தலைவர் சாந்தியின் கணவரும் தி.மு.க. நகரச் செயலாளருமான சேகர், சாந்தியின் மாமனார் தி.மு.க. முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் எடுத்திருப்பதும், ஒப்பந்தம் எடுத்தவர் ஒருவர் பெயர் இருக்கும்போதும் பணத்தை செல்வராஜ் பெயருக்கு அனுப்பியுள்ளது, மேலும் செல்வராஜ் வீட்டிலுள்ளவர்கள் பெயர்களுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது உட்பட பல முறைகேடுகள் ஆய்வில் தெரிய வந்தது. ஆனால் ஆய்விற்குப் பிறகும் நீதிமன்ற உத்தரவுப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில், போடாத ரோட்டை போட்டதாக ஆவணங்கள் தயாரித்து இத்தனை கோடிகளை ஆட்டையைப் போட்ட பேரூராட்சி தலைவர் குடும்பத்தினர், துணையாக இருந்த செயல் அலுவலர், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தி.மு.க. தலைமை வரை உள்ளூர் உ.பி.கள் கொண்டுசென்றனர். கடந்த மாதம் இது குறித்து தி.மு.க. தலைமையில் விசாரணை செய்துள்ளனர். விசாரணை முடிந்து வெளியே வந்தவர்கள், இந்தப் பிரச்சனையை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பார்த்துக் கொள்வார். வேறு நடவடிக்கை இருக்காது என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. "பேரூராட்சி ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடு!' என்று பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்ட மும் நடத்தினர். இதன் பிறகும் எந்த நடவடிக் கையும் இல்லை. செய்யாத வேலைக்கு பேரூராட்சி பணம் எடுத்திருப்பது ஆதாரப் பூர்வமாக தெரியவந் தும், நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து பேராவூரணி பொன்காடு நீலகண்டன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை நடை முறைப்படுத்த வில்லை என்று கடந்த வாரம் அதே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாகவும் விரைவாகவும் விசாரித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை பேராவூரணி வந்த தஞ்சை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. அன்பரசன் தலைமையிலான போலீசார் புகார்தாரரான பொன்காடு நீலகண்டனிடம் விசாரணை செய்து தொடர்ந்து பேராவூரணி பேரூராட்சி அலு வலகத்திலும் விசாரணை செய்துள்ளனர். மேலும் புகாரில் கூறப்பட்டுள்ள சாலைகள், பணிகள் நடந்துள்ளதா என்பதையும் நேரில் ஆய்வுசெய்துள்ளனர்.
இந்த ஆய்வறிக்கையை நீதிமன்றத் தில் சமர்ப்பிக்கும் நிலையில், "முறைகேடு நடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையே வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிடலாம்' என்று கூறப்படுகிறது.
அப்படி நீதிமன்றம் உத்தரவிட்டால் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலர்கள், ஒப்பந்தக்காரர், ஒப்பந்தமே எடுக்காமல் முறைகேடாக பணம் பெற்றவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர். தங்கள் குடும்பத்தை தற்காத்துக்கொள்ள சீனியர் உடன்பிறப்புகளிடம் ஓடிக்கொண்டி ருக்கிறார்கள் பேரூராட்சி தலைவர் குடும்பத்தினர்.