தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்துள்ள ஒரு சீக்ரெட் விசாரணையில் ஏக ரகளை நடந்திருக்கிறது. அதனையடுத்து காங்கிரஸ் எம்.பி. சுதாவுக்கு எதிராக, காங்கிரஸ் சீனியர்கள் டெல்லிக்கு படையெடுக்கத் திட்டமிட்டுள்ள தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி மேயராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன். மாநகராட்சியில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் சரவணனுக்கும் ஏழாம் பொருத்தம்தான்.
கடந்த வாரம் மாநகராட்சி கூட்டம் நடந்தபோது ஏற்பட்ட பிரச்சனையில், மேயர் சரவணனும், தி.மு.க. கவுன்சிலர் தட்சிணாமூர்த்தியும் தரையில் படுத்துக்கொண்டு, "என்னை கொல்லப்பார்க்கிறார்' என ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சுமத்திய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
என்ன நடந்தது என தி.மு.க. தலைமை விசாரித்ததும், உண்மையான ரிப்போர்ட்டை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தனர் மாநகராட்சி தி.மு.க.வினர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் இது குறித்து விசாரணை நடத்தியிருக்கிறது.
கடந்த 3-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த விசாரணை கூட்டத்தில், முன்னாள் தலைவர் தங்கபாலு, மேயர் சரவணன், மயிலாடுதுறை எம்.பி.சுதா, மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் மாநில நிர்வாகிகள் சிலர் என பலரும் கலந்துகொண்ட னர். அவர்களிடம் விசாரணை நடத்தினார் செல்வப்பெருந்தகை. அந்த விசாரணையில்தான் ஏகத்துக்கும் மோதல், ரகளை, விரும்பத் தகாத வார்த்தைகள் என ரவுண்ட் கட்டியிருக்கிறது.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் நாம் விசாரித்தபோது, மேயர் சரவணனிடமிருந்து விசாரணையைத் தொடங்கினார் செல்வப்பெருந்தகை. அப்போது மாநகராட்சி கூட்டத்தில் நடந்ததை விவரித்த சரவணன், "தி.மு.க. கவுன்சிலர்கள் தன்னை செயல்படவிடாமல் தொடர்ச்சியாக நடத்திவரும் அரசியலை விரிவாகச் சொன்னதுடன், மீனவ சமூதாயத்தைச் சேர்ந்த நான் அதிகாரத்தில் அமர்ந்திருப்பது யாருக்குமே பிடிக்கவில்லை. காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கூட என்னை பிடிக்கவில்லை. தி.மு.க.வுடன் சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக செயல்படுகிறார்கள்'' என ஆதங்கத்துடன் பேசினார்.
உடனே குறுக்கிட்ட எம்.பி.சுதா, "மாவட்டத்தில் கட்சி சரியில்லை. மேயர், மாவட்டத் தலைவர் எல்லாத்தையும் மாத்துங்க. நான் சொல்ற ஆட்களைப் போடுங்க. அப்பதான் மாவட்டத்தில் கட்சியை வளர்க்க முடியும். எல்லாத்தையும் மாத்துங்க. ராகுல்காந்திக்கிட்டே நான் பேசிக்கிறேன்' என சொல்ல, மேயருக்கும், மாவட்ட தலைவருக்கும் ஏககோபம் வந்துவிட்டது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய மாவட்ட தலைவர் லோகநாதன், "மாவட்ட அரசியலைப் பத்தி இந்த அம்மாவுக்கு (சுதா) என்ன தெரியும்? கும்மிடிப்பூண்டியிலிருந்தவரை இங்கு போட்டியிட வைத்தீர்கள். உயிரைக் கொடுத்து வேலைசெஞ்சு எம்.பி.யாக ஜெயிக்கவச்சோம், ஆனா, இந்தம்மா, கட்சிக்காரர்களை மதிக்கிறதே இல்லை. மேயரை சுத்தமாக மதிக் கிறதில்லை. எங்கோ இருந்த வரை இங்கு போட்டதுனால கட்சியை வளர்க்க முடியாம கஷ்டப்படுறோம். அந்தம்மா வரும்போதெல்லாம் நாங்கள் அவருக்கு பின்னாலே ஓடிவர வேண்டும்னு நினைக்கிறார். அதெப்படி முடியும்?
மாவட்டத்தில் நான் சொல்வதுதான் சட்டம், எனக்குத்தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது. நான் யார் தெரியுமா? எம்.பி.! மாவட்ட தலைவர், மேயர் எல்லாம் எனக்குப் பிறகு தான். ராகுல்காந்தியே நான் சொல்வதைத்தான் கேட்பார். நீங்கள் எம்மாத்திரம்னு எகத்தாளமாகப் பேசுகிறார். முதலில் கட்சிக்காரர்களை மதிக்கக் கத்துக்கொள்ளச் சொல்லுங்கள்' என்றெல்லாம் எகிறினார் லோகநாதன்.
இதனால் ஆவேசப்பட்ட எம்.பி. சுதா, "ராகுல்காந்திகிட்ட அழுதுபுரண்டு சீட் வாங்கிக்கிட்டு வந்துட்டேன்னு கொச்சையா இந்தாளுங்க மாவட்டம் முழுக்க சொல்லிக் கிட்டு வர்றாங்க. ராகுல்காந்தியின் நம்பிக்கையை பெற்றவள் நான். பாரத் ஜோடோ யாத்திரையில் அவர்கூட நெடுந்தூரம் பயணித்தவள். எனது உழைப்பைப் பார்த்து எனக்கு சீட் தந்தார். ஆனா, என்னை அசிங்கப்படுத்துறாங்க. நான் நினைச்சன்னா, இவங்க எல்லாத்தையும் கட்சியை விட்டு தூக்கிட முடியும். என்ன நினைச்சிக்கிட்டு இருக்காங்க?' என ஏகத்துக்கும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக்கொண்டே போனார். ஒருமையில் தடித்த வார்த்தைகளும் அவரிடமிருந்து வெளிப்பட்டன.
"எம்.பி. இப்படி பேசியதைக் கேட்டு, அமைதியா இருங்க என செல்வப் பெருந்தகை சொன்னாரே தவிர, இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது' என சுதாவை அவர் கண்டிக்கவில்லை. இதனை எதிர்க்கும் விதத்தில் "நாங்க வெளியே போறோம்' என லோகநாதன் உள்ளிட்டவர்கள் சொல்ல... "வெளியில போய்யா...… யார் உன்னை பிடிச்சி வெச்சிருக்கிறது' என்று எகத்தாளமாகச் சொன்னார் சுதா.
லோகநாதன் மாவட்ட தலைவர் அதுவும் கட்சியில் சீனியர்மேன். அவருக்கான மரியாதையை எம்.பி. கொடுக்கவில்லை. எம்.பி.யின் எகத்தாளமான பேச்சால் எந்த முடிவும் எடுக்கப்படாமலே விசாரணைக் கூட்டத்தை முடித்துவிட்டார் செல்வப் பெருந்தகை''’என்று விவரித்தனர்.
பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு பேட்டை ரவுடி மாதிரி எம்.பி. சுதா பேசியதை பொறுக்கமுடியாத காங்கிரசார், அவர் மீது புகார் கொடுக்க டெல்லிக்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இந்த பஞ்சாயத்து காங்கிரஸ் தலைமையிடத்தில் வெடிக்கக் காத்திருக் கிறது.
ஏற்கனவே இவர் மீது நிறைய சர்ச்சைகளும் புகார்களும் இருக்கின்றன. "எம்.பி. பதவிக்குரிய பொறுப்புணர்வும், புரோட்டகாலும் இவருக்குத் தெரிந்திருக்க வில்லை' என்று குற்றச்சாட்டுகிறார்கள் கதர்ச்சட்டை சீனியர்கள்.