நேரடி அரசியலில் குதிக்க தீவிரமாக இருக்கும் நடிகர் விஜய், தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ஜோதிடர் குறித்துக்கொடுக்கும் தேதியில் கட்சியைப் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் டெல்லிக்கு படையெடுக்கவிருக்கிறது விஜய்யின் வழக்கறிஞர்கள் டீம்.
இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 150 பேருடன் விவாதித்தார் நடிகர் விஜய். இதற்கு முன்னதாக, கட்சியின் பெயரை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்வதற்கான நடைமுறைகளை முன்னெடுத்திருந்தனர்.
புதுக்கட்சி ஒன்றை தொடங்கும்போது கட்சிக்கான தலைமை, அலுவலக முக்கிய பொறுப்பாளர்கள், அடிப்படை உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 110 பேர் இருக்க வேண்டும் என்கிற ஆணையத்தின் விதி உள்ளிட்ட பல விசயங்கள் அந்த விவாதத்தில் அலசப்பட்டன.
அதன்படி, தலைவர் தலைமையில் கட்சி இயங்குவதாக முடிவு செய்யப்பட்டது. தலைவ ருக்கு கீழ், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமை பொறுப்புகளுக்கான பதவிகள் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதன் கீழ் இயங்கும் மற்ற பதவிகளில் முக்கியமானவற்றை தலைவர் நியமனம் செய்வார் என்றும் ஆலோசித்தனர்.
அந்த அடிப்படையில், கட்சிக்கான சட்டவிதிகள் உருவாக்கப்பட்டன. கட்சியை துவங்கும் போது குறைந்தபட்சம் 110 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சட்டவிதி என்பதால், விஜய்யின் நம்பிக்கைக்குரிய 200 நபர்களை தேர்வு செய்து அவர்களிடம் பிரமாணப்பத்திரங்கள் (அஃபிடவிட்) பெறப்பட்டன. அந்த 200 நபர்களையும், தனது ரசிகர் மன்றம் துவக்கப்பட்ட காலத்திலிருந்து சீனியர்களாவும், தனக்கும் கட்சிக்கும் உண்மையாக இருப்பவர்களாகவும் பார்த்து தேர்ந்தெடுந்திருந் தார் விஜய். அப்படி தேர்வு செய்யப்பட்ட 200 நபர் களை தனித்தனியாக சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் பிரமாணப்பத்திரம் பெறப்பட்டது. ஒரு நாளைக்கு 10 பேர் என இந்த அசைன்மெண்ட் மட்டுமே கிட்டத்தட்ட 20 நாட்கள் நடந்தன. இந்த 200 நபர்கள்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள். ஒரு கட்சி துவக்கப்படும் போது எத்தனை உறுப்பினர்களை காட்டுகிறீர்களோ… அவர்கள் தான் கட்சியின் பொதுக்குழு.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அந்த 200 நபர்களுடன் சென்னை பனையூரில் ஆலோ சனை நடத்தினார் விஜய். அவருடைய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான அனுமதி, தலைவராக விஜய்யும், பொதுச் செயலாளராக புஸ்சி ஆனந்தும் உள்ளிட்ட தலைமைப் பொறுப்புகளுக்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான ஒப்புதல்கள் அந்த கூட்டத்தில் பெறப்பட்டது.
கட்சியின் சட்ட விதிகள், கொள்கைகள் உள்ளிட்டவற்றை விவரித்துப் பேசினார் புஸ்சி ஆனந்த். அவைகளுக்கும் ஒப்புதலளித்தனர். மேலும், அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு (விஜய்) வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட அடிப்படை உறுப்பினர்கள் அனைவரையும் பேச அனுமதித்தார் விஜய். எல்லோருமே பேசினர். பேசியவர்களில் பலரும், ரசிகர் மன்றமாக இருந்த போதும் அது மக்கள் இயக்கமாக மாற்றியமைக்கப் பட்ட பிறகும் மக்கள் பணிகளை எப்படியெல்லாம் முன்னெடுத்தோம் என விவரித்தார்கள். இளைஞர் களும் பெண்களும் தலைவர் (விஜய்) மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அன்பையும் சிலர் வெளிப்படுத்தினர்.
இறுதியில் பேசிய நடிகர் விஜய், "உங்களில் என்னை காண்கிறேன். நீங்கள் வேறு; நான் வேறு அல்ல, நாம் ஒன்றுதான். அரசியலுக்கு நாம் வருவதாக அரசல் புரசலாக வெளிப்பட்ட போதே எத்தனையோ தடைகள்... எதற்கு கட்சி? என்றெல்லாம் எதிர்மறையாகப் பேசி தடுக்க நினைத்தவர்கள் பலர். இதையெல்லாம் கடந்து தான் அரசியல் கட்சியைத் துவக்கும் முடிவில் உறுதியாக இருந்தேன். அந்த உறுதியைக் கொடுத்தது உங்களின் நம்பிக்கை தான் .
மக்கள் இயக்கமாக இருந்து அரசியல் பணிகளை செய்வதன் அடுத்த பரிணாமமாகத் தான், நேரடியாக அரசியலில் இறங்கி மக்கள் பணிகளை செய்யலாம் என்கிற சிந்தனை வந்தது. பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய பெரும் தலைவர்களின் சமூக சிந்தனைகளைத் தாங்கி, நாம் அரசியல் கட்சியைத் துவக்குகிறோம்.
தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலுக்கான விதை நம் மூலம் ஊன்றப்படலாம் என நினைக் கிறேன். புகழ், பணம் எல்லாத்தையும் பார்த்தாச்சு. ஆனா, இதையெல்லாம் கொடுத்த தமிழக மக்க ளுக்கு நம்மால் முடிந்த நல்லதை செய்ய வேண்டும் என்கிற உந்துதல்தான் இந்த அரசியல் கட்சி தொடக்கம். இங்கு பேசியவர்கள் பலரும், நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என சொன்னீர்கள். தேர்தல் ஆணையத்தில் கட்சியை முறைப்படி பதிவு செய்துவிட்டு, இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் நாம் சந்திப்போம். அப்போது பலவற்றையும் விவாதித்து, ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம்''’என்று அரசியல் சார்ந்து பல விசயங்களை அழுத்தமாகப் பேசியிருக்கிறார் விஜய்.
கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த கூட்டம் முடிந்தது. அதன்பிறகு, தேர்தல் ஆணையத்தில் கட்சியை முறைப்படி பதிவு செய்வது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் சட்ட நிபுணர்களு டன் மீண்டும் ஒருமுறை ஆலோசித்து விட்டு அவர்களை டெல்லிக்கு சென்று வர உத்தர விட்டார் விஜய்.
மறுநாள் வழக்கறிஞர்கள் டெல்லிக்கு புறப்பட்டனர். தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசித்திருக்கிறார்கள். எல்லாம் சரியாக இருந்தது. உடனடியாக சென்னைக்குத் திரும்பினர். ஜோதிடர் குறித்துக் கொடுக்கும் நாளில் கட்சியை பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஜோதிடர் சொல்லும் தேதிக்காகக் காத்திருக்கின்ற னர். தேதி கிடைத்ததும் அந்த நாளில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப் பிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். அதிகபட்சம் இன்னும் 15 நாட்களில் கட்சி பதிவு செய்யப்பட்டு விடும்.
கட்சியின் பெயரில், கழகம் என்பதை சேர்த்திருக்கிறார் விஜய். அதாவது, அவரது அரசியல் தமிழகத்தை மையப்படுத்தித்தான் என்பதால், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும், தமிழ் மண்ணில் வேரூன்றியிருக்கும் கலாச்சாரத்தையொட்டியும், கழகம் என்கிற வார்த்தையை தனது கட்சியில் சேர்த்திருக்கிறார்.
விஜய்யை உள்ளும் புறமும் அறிந்த மக்கள் இயக்கத்தினரிடம் நாம் விசாரித்த போது, "நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியைத் துவக்கியிருந்தாலும் விஜய்யின் இலக்கு 2026-ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் தான். அரசியலில் தனது அடிகளை மெல்லமாகவே எடுத்து வைக்க வேண்டும்; நேரடி அரசியலில் இறங்கிய பிறகு தனது வேகத்தை காட்டவேண்டும் என்பதே அவரின் திட்டமாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் என்கிற குறுகிய நாட்களே இருப்பதால், தேர்தலை எதிர்கொள்கிற அனைத்து விசயங்களை யும் அதற்குள் செய்து முடிக்க முடியாது என்பது விஜய்யின் யோசனை. அதனால், 2024-ல் இல்லை; 2026-தான் இலக்கு. அதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு விஜய் வர மாட்டார்''‘என்று சொல் கின்றனர்.
வெங்கட்பிரபு இயக் கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அந்த படம் ஜூலையில் ரிலீஸ் செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் மார்ச்சுக்குள் முடிந்து விடும். அதற்குள், கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் கட்சியின் பெயரை அங்கீகரிக்கும். இந்த நடைமுறைகள் முடிய எப்படியும் 2 மாதங்கள் ஆகிவிடும்.
அதேசமயம், தற்போது நடித்துக்கொண்டிருக் கும் படத்திலுள்ள தனது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை துவக்கி வைக்கவிருக்கிறார் விஜய். அவருடைய மக்கள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அப்படியே கட்சியின் உறுப்பினர் களாக உருமாற்றம் செய்யப்படவிருக்கிறார்கள்.
விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கு கடந்த 2 ஆண்டுகளில் விண்ணப்பித் தவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படாமல் இருக் கிறது. அவர்களின் தற்போதைய நிலை அறிந்து அவர்களை கட்சியின் புதிய உறுப்பினர்களாக சேர்க்கும் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக கட்சி அங்கீகரிக்கப்பட்ட பிறகு, வட தமிழகத்தில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை ஜூலையில் நடத்தி, அதில் தனது கொள்கைகளை பிரகடனப்படுத்தவிருக்கிறார் நடிகர் விஜய். அதில் 3 முக்கிய அரசியல் விசயங்களை அழுத்தமாக பிரகடனப்படுத்தவிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவைகளின் வெற்றிகளை மையப்படுத்தி யாருடன் விஜய் மோதப்போகிறார் என்பது தெளிவாகும் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.