"நீண்ட மாதங்களாக அமைதியாக இருந்த டெல்லி, மீண்டும் எடப்பாடி அரசை மிரட்டும் லகானை எடுத்திருக்கிறது. இந்தமுறை மிரட்டல்கள் கொஞ்சம் காட்டமாகவே இருந்தன' என்கிறார்கள் சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள். இந்த நிலையில்தான் அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

admk

அ.தி.மு.க. உறுப்பினர்களைப் பதிவு செய்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், "நமது அம்மா' பத்திரிகைக்கு சந்தா வசூலித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்வதற்காக சென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கடந்த 7-ந் தேதி அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மா.செ.க்கள், அணித் தலைவர்களின் கூட்டத்தை எடப்பாடியும் பன்னீரும் கூட்டினர். இதில் மேற்கண்ட பிரச்சினைகளோடு தினகரனின் அரசியலைக் குறித்தும் பேசியுள்ளனர்.

கூட்டத்தின் துவக்கத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., ""நமது அம்மா பத்திரிகைக்கு சந்தா வசூலிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். கட்சியில் 1 கோடியே 55 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்கிறோம். ஆனா, மூன்றுமுறை உறுப்பினர்கள் சேர்க்கைத் தேதியை நீட்டித்தும் பலனில்லை.

Advertisment

மூன்று மாதங்களாக நடந்துவரும் இந்த பணியில் இதுவரை சுமார் 7 லட்சம் படிவங்கள் கொடுக்கப்பட்டும் 1 லட்சம் விண்ணப்பங்கள்தான் பூர்த்தி செய்யப்பட்டு தலைமைக்கழகத்துக்கு வந்திருக்கிறது. அப்படியென்றால், 25 லட்சம் உறுப்பினர்கள்தான் நம் கட்சியில் இருக்கிறார்களா? ஒன்றரைக்கோடி தொண்டர்கள் இருப்பதை மே மாதம் இறுதிக்குள் உறுதி செய்யுங்கள்.

admk

தினகரன்தான் எனக்கு கட்சி பதவி தந்ததாகப் போகிற இடங்களிலெல்லாம் அவர் சொல்லி வருகிறார். இது பெரிய பொய். முதன்முதலாக அ.தி.மு.க. இளைஞரணியின் ஒன்றிய துணைச்செயலாளராக 1984-ல் நியமிக்கப்பட்டேன். அந்தப் பதவியை எனக்குத் தந்தது அன்றைக்கு இளைஞரணியின் மாநில செயலாளராக இருந்த ஜே.சி.டி.பிரபாகரன்தான். எம்.ஜி.ஆரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். அதன்பிறகு என்னை ஒன்றியச் செயலாளராக்கியது சையதுகான். இதுதான் எனது நியமனம். ஆனா, அந்த காலகட்டத்தில் அ.தி.மு.க.வுக்கும் தினகரனுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனா, நம்மைப் பத்தி எல்லா இடங்களிலும் மோசமாக விமர்சித்து வருகிறார் தினகரன். இதற்குக் கடுமையான எதிர்விமர்சனம் வைக்கவேண்டும். அதை நாம் செய்வதில்லை. இப்படியே போனால் சரியாகாது''’என்றார் காட்டமாக.

Advertisment

அப்போது குறுக்கிட்ட வைத்தியலிங்கம், ""தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் யாருமே பதில் சொல்வதில்லை. தினகரனை எதிர்க்கக்கூடாது என நினைக்கிறார்கள்''’எனச் சொல்ல, இதனையடுத்து எழுந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ""அமைச்சர்களை குற்றம்சாட்டுவது போல பேசுவது தவறு. தினகரனின் ஒவ்வொரு பேச்சுக்கும் நாங்க பதிலடி தந்துகொண்டுதானிருக்கிறோம். காவிரி விசயத்தில் அவரை எதிர்த்துப் பேசியது நாங்கதானே''’என்றார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு உருவானது. அந்தச் சமயத்தில்,’""தஞ்சையில் காவிரிக்காக போராட்டம் நடத்திய தினகரன், கடுமையாகப் பேசினார். அதுக்கு அமைச்சர்களும் சரி, நாமும் சரி பெருசா அலட்டிக்கவே இல்லை. இங்கு வந்து நாம் வாய்ஜாலம் காட்டக்கூடாது''’என மா.செ.க்கள் பலரும் முணுமுணுக்கத் துவங்கிவிட்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, ""சீனியர்களை மா.செ.க்கள் மதிக்கிறதே இல்லை. தினகரன் பக்கம் போய்ட்டு வந்தவர்களுக்கெல்லாம் இங்கு மரியாதை இருக்கிறது, எங்களுக்கு இல்லை. இப்படி இருந்தால் எப்படி? கட்சியில் நான் சீனியர். எனக்கு என்ன மரியாதை இருக்கிறது?''’என தனது ஆதங்கத்தைக் கொட்டினார். கூட்டத்தில் பேசிய பலரும் இதே தொனியிலேயே பேசினர். இறுதியில் பேசிய எடப்பாடியும் பன்னீரும்,’""எங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லைன்னு சொல்றாங்க. நாங்க ஒருங்கிணைஞ்சுதான் செயல்படுறோம். ஆனா, கீழ்மட்டத்தில்தான் இந்த ஒருங்கிணைப்பு இல்லை. அந்த ஒருங்கிணைப்பை மா.செ.க்கள்தான் ஏற்படுத்தணும். அதை உறுப்பினர்கள் சேர்க்கையில் காட்டுங்கள்''’என முடித்தனர்.

கூட்டம் முடிந்ததையடுத்து அன்று இரவு சீனியர் அமைச்சர்களோடு தீவிரமாக விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது குறித்து நாம் விசாரித்தபோது, ""நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவதை கொள்கை முடிவாக எடுத்திருக்கும் மோடி அரசு, இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவர, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறவிருக்கிறார். மாநில அரசுகளின் ஒப்புதலும் ஆதரவும் இல்லாமல் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியாது.

தற்போது இந்தியாவிலுள்ள 31 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆட்சி 21 மாநிலங்களிலும், காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆட்சி 10 மாநிலங்களிலும் நடக்கின்றன. இதில் சமீபத்தில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு விலகியதால் பா.ஜ.க. பலம் 20-ஆக குறைந்துள்ளது.

பெரும்பான்மை மாநிலங்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை ஏற்கின்றன என்பதைக் காட்டுவதற்காக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மாநில அரசுகளிடம் ஆதரவுக் கடிதம் கேட்டு வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி அரசுக்கு கடிதம் அனுப்பியது டெல்லி. ஆனா, இதனைக் கிடப்பிலேயே போட்டிருந்தார் எடப்பாடி. இந்த நிலையில், மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள் விழா ஆலோசனையில் கலந்துகொள்ள டெல்லி சென்ற எடப்பாடி, மோடியை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்தார். அப்போது, "நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆதரவு கடிதத்துடன் டெல்லி வாருங்கள். அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கும்' எனச் சொல்லப்பட்டது. நினைவூட்டல் கடிதமும் அனுப்பினர். இந்த நெருக்கடி எடப்பாடியை அப்-செட்டாக்க... அது குறித்து சீனியர்களிடம் அவர் ஆலோசித்தபோது, கடிதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கடிதம் இல்லாமல் டெல்லி சென்றதால் மோடியின் அப்பாயின்ட்மெண்ட் மறுக்கப்பட்டது.

அதனால் "காவிரி விசயமாக மோடியுடன் பேசுவேன்' என டெல்லி சென்ற எடப்பாடி வெறும் கையுடன் திரும்பினார். இந்த நிலையில், ஆதரவுக் கடிதம் கேட்டு மீண்டும் மிரட்டத் துவங்கியிருக்கிறது மத்திய அரசு. இது குறித்துதான் சீனியர்களிடம் விவாதித்தார் எடப்பாடி. அமைச்சர்களோ ""கடிதம் கொடுத்தாலும் நம்முடைய ஆட்சியின் ஆயுள் காலம் நாடாளுமன்றத் தேர்தல்வரைதான். பிறகெதற்கு இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்? அதனால் அப்படி ஒரு கடிதம் தரத்தேவையில்லை'' என அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடியும் ஏற்றிருக்கிறார். அதனால், "கடிதம் தராமல் அமைதியாக இருக்கும் எடப்பாடிக்கு டெல்லியிலிருந்து மோடி அரசின் முக்கியஸ்தர்களின் மிரட்டல் அதிகரித்துள்ளது' என சுட்டிக்காட்டுகின்றனர் அதிகாரிகள்.

-இரா.இளையசெல்வன்

படங்கள்: ஸ்டாலின்