கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பேக், ஜியோமென்ட்ரி பாக்ஸ், பென்சில், ஷூ, சாக்ஸ் உள்பட 11 பொருட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டன. இவற்றை தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு டெண்டர் விடாமல் ஆந்திரா, கர்நாடகா உள்பட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு டெண்டர் விட்ட விஷயம் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
முழுமையான முகவரி இல்லாமல் போலியான அட்ரஸ் மூலம் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் டெண் டர் எடுத்து தரமில்லாத பொருட்களைக் கொடுத்திருக் கின்றன இந்த நிறுவனங்கள். இதற்கு அப்போதைய கல்வித்துறை அமைச்சர், பாடநூல் கழக தலைவர் வளர்மதி, பாடநூல் மேலாண்மை இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் துணைபோயிருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் தலைவராக ஐ.லியோனியும் பொறுப்பேற்றனர். பாடநூல் மேலாண்மை இயக்குனராக இருந்த ஜெயந்தியை மாற்றிவிட்டு மணிகண்டனை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். அதைத் தொடர்ந்த ஆய்வொன்றின்போது, அமைச்சரும் பாடநூல் சேர்மனும் கிட்டங்கியில் மாணவ -மாணவிகளுக்காக இலவசமாக கொடுக்கக்கூடிய பொருள்கள் கிடப்பில் கிடந்ததைப் பார்த்தனர். ஸ்கூல்பேக்கில் முன்னாள் முதல்வர்களான ஜெ., இ.பி.எஸ். படங்கள் இருந்ததோடு, இலவசப் பொருட்கள் தரமில்லாது இருப்பதையும் கண்டறிந்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுபோயினர். "முன்னாள் முதல்வரின் படம் இருந்தாலும் பரவாயில்லை, அவற்றை அழிக்க பணம் செலவிட வேண்டாம்... பயன்படுத்திக்கொள்ளலாம்' என ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், டெண்டர் எடுத்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், புரோக்கர்கள் மொட்டை சிவக்குமார், சுப்பிரமணி மூலமாக மேலாண்மை இயக்குனர் மணிகண்டன், கொள்முதல் பிரிவில் பணிபுரியும் பரமன் ஆகியோரைச் சந்தித்து, நிலுவைத் தொகையை விரைந்து கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் நிலுவைத் தொகை 100 கோடி ரூபாயில் இலவசப் பொருட்கள் டெண்டர் எடுத்த வட மாநில கம்பெனிகளுக்கு தலா 20 கோடி ரூபாயை பட்டுவாடா செய்திருக் கிறாராம் மேலாண்மை இயக்குநர்.
வந்த பொருட்கள் தரமாக இல்லையென அமைச்சரும் சேர்மனும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டுபோயி ருக்கும் சூழலில், அவர்களைக் கலந்தா லோசிக்காமல் அதிகாரிகள் செயல்படு வது சர்ச்சையாகி யிருக்கிறது. இலவச பாடநூல் பிரிவில் இருக்கும் டெக்னிக்கல் பிரிவு எஸ்.டி.ஓ. பார் வதி, கடந்த ஆட்சியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பிரிண்டிங் வேலை கொடுத்ததோடு, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிரிண்டிங் வேலை கொடுக்க பரிந்துரை செய்தார். தற்போதும் அதே வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பிரிண்டிங் வேலைகள் கொடுக்க ஏற்பாடும் செய்துவருகிறார் என்று புகார் கிளம்பியுள்ளது.
தொடர் பிரிண்டிங் வேலைகளுக்கு 3 வருடம் ஒப்பந்தம் கையொப்பமானதால், வேறு வழியில்லை. மாறாக அவர்களைத் தவிர்த்தால், பாடநூல் நிறுவனத்தை எதிர்த்து சட்டப் பிரச்சினையை எழுப்புவார்கள் என்று அங்கிருப்பவர்கள் காதைக் கடிக்கிறார்கள்.
இதுகுறித்து பாடநூல் மேலாண்மை இயக்குநர் மணிகண்டனைத் தொடர்பு கொண்ட போது, “"டெண்டர் எடுத்து பொருட்கள் விநி யோகம் செய்தவர்களுக்கு பணம் பாக்கியிருக்கிறது. விதிமுறைப்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுத்தான் பணம் கொடுத்திருக்கிறேன்''’ என்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலகங்களைச் சேர்ந்த 58 தற்காலிக அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக மணிகண்டனால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அமைச்சரிடமும் சேர்மனிடமும் புகார் செய் திருக்கிறார்கள்.
இதுகுறித்து, "தற்காலிகப் பணியாளர்களை அரசுக்கு சப்ளை செய்ய டெண்டர் எடுப்பவர்கள் தான் நியமிப்பார்கள். அதுதான் வழக்கமாக நடைமுறையில் இருக் கிறது''” என்கிறார் மணிகண்டன். ஆனால் தற்காலிகப் பணியாளர் களோ, "இதுவரை இப்படி ஒட்டு மொத்தமாக தற்காலிகப் பணி யாளர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டதில்லை. இருபது பேரை நீக்குவார்கள். இருபது பேரை புதிதாகச் சேர்ப்பார்கள்'' என்கின்ற னர். பணிநீக்கம் செய்யப்பட்ட 58 தற்காலிகப் பணியாளர்களின் குடும்பங்களும் முதல்வரைச் சந்தித்து முறையிட இருக்கிறார் களாம்.
கல்வித்துறையில் அமைச்சர் மற்றும் சேர்மனை மதிப்பதில்லை என்ற முணுமுணுப்பு பெரிதாக எழுந்துள்ளது.