மார்ச் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை தி.மு.க.வினர் கொண்டாடிக்கொண்டிருக்க, அ.தி.மு.க., பா.ஜ.க. தரப்போ, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்காக மதுரைக்கு பிரதமர் மோடி வருகை தருவதில் பரபரப்பாயிருந்தது.
மதுரை பிரச்சாரக்கூட்டத்தின் முழுப் பொறுப்பையும் மதுரை மாஜி அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூவிடம் எடப்பாடி ஒப்படைக்க, பிரச்சார மேடையின் முகப்பில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களோடு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, 75 ஆயிரம் சேர்கள் போடப்பட்டன. பொதுக்கூட்ட இடத்தை காலையிலேயே நயினார் நாகேந்திரனோடு பியூஸ் கோயல் வந்து பார்வை யிட்டபோது, பெரியார் படத்தைப் பார்த்து அதிர்ச்சியாகவும், அதை அகற்றும்படி நயினார் சொல்ல, இந்த கூட்டம் அ.தி.மு.க.வின் ஏற்பாடு என மாஜிக்கள் இழுக்க, அதை ஏற்காததால் பெரியார் படத்தை அகற்றி தாமரை யை ஒட்டவைத்தது மீடியாவில் சர்ச்சையானது.
இந்நிலையில், முந்தைய நாள் சென்னை யில் வந்திறங்கிய மோடி, புதுச்சேரி சென்று அங்கே நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மதுரை விமான நிலையம் வந்திறங்கியதும், அங்கே, 4800 கோடி ரூபாய் அளவிளான திட்டங்களை அறிவித்தார். பின்னர் மாலை 4:30 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றதும் பூர்ண கும்ப மரியாதையை ஏற்றவர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அவருடன் ஆளுனர் ஆர்.என்.ரவி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்றனர். அங்கிருந்து மதுரை மாநாட்டு திடலுக்கு மாலை 5.30-க்கு வந்தார். அவர் வரும் வழியெங்கும் காங்கிரஸ் சார்பில் 'ஏர் இஹஸ்ரீந் ஙர்க்ண்', "திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை' மற்றும் "மதரீதியான மூளைச்சலவை வேண்டாம்' போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தமிழ்ப் புலிகளின் சார்பில், தமிழகத்திற்கு கல்வி நிதியை தரமறுத்ததையும், மதுரை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி தராததை கண்டித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே காங்கிரஸாரும், தமிழ்ப்புலிகள் அமைப்பினரும் மறியலில் இறங்க, போலீசார் கைது செய்து அகற்றினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/02/bjpmeet1-2026-03-02-18-04-33.jpg)
பொதுக்கூட்ட மேடையில் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன், அன்புமணி, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், திருமாறன் போன்றோர் இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, "எங்கள் கூட்டணியில் மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள் இணைந்துள்ளன. சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் தென்மாவட்டம், எம்.ஜி.ஆரை சட்டமன்ற உறுப்பினராக்கி முதலமைச்சராக்கியது. ஜெய லலிதா முதன்முறையாக போட்டியிட்டதும் தென் மாவட்டத்தில்தான். தென் மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம்பொருந்திய கூட்டணியாக அமைந்திருக்கிறது.
அ.தி.மு.க. தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இயக்கம். பொன்விழா கண்ட கட்சி. பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தோம்.
11 ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்தோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட கொண்டுவரவில்லை'' என்றார். "வெற்றிவேல்' எனச் சொல்லி பேசத்தொடங்கிய மோடி, தமிழில் பேச முயற்சித்து, "அனைவருக்கும் வண்க்கம்... எட்பாடி பலானச்சாமி... அம்புமணி'' என்றவர், இதேபோல் தொடர்ச்சியாகக் கடித்துக்குதறினார். பின்னர் தமிழில் பேசுவது சரிவராமல் ஆங்கிலத்துக்கு மாறினார்! "மதுரை சொந்தங்கள் என்மீது பொழிகின்ற பேரன்பு, மலேசியாவிற்கு நான் கடந்த ஆண்டு சென்றிருந்ததை நினைவூட்டுகிறது. மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறோம்'' என்றவர், காங்கிரஸை தாக்கும் மோடுக்கு மாறி, "காங்கிரஸ் கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தது. அப்போது, தி.மு.க. ஒன்றுமே செய்யாமல் மௌனமாக இருந்தது. அதுபோல் ஜல்லிக்கட்டினை தடை செய்தது. ஆனால் ஜல்லிக்கட்டு தொடர நம்முடைய அரசாங்கம் தான் அவசர சட்டத்தை பிறப்பித்தது'' என்றவர், அடுத்து திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுத்து பேசியவர், தி.மு.க.வை குறைகூறிவிட்டு, "தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் கூட்டத்தை பார்த்தபிறகு அவர்களின் கனவுகள் எல்லாம் கற்பனைக்கோட்டைகளாக, கானல் நீராக மாறிப்போய்விடும். தமிழ்நாட்டில் அடுத்த அரசாங்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தான் என்பதை நான் உங்கள் கண்களிலே காண்கிறேன்'' என்று எடப்பாடிக்கு ட்விஸ்ட் வைத்து பேசிமுடித்தார்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/02/bjpmeet2-2026-03-02-18-04-44.jpg)
எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அடுத்ததாக அ.தி.மு.க. ஆட்சியமைக்கும் என்று பேசியிருந்த நிலையில், மோடியோ, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்குமென்று சொல்லியிருக்கிறார். மதுரை எய்ம்ஸ் கட்டடத்தை மோடி திறந்துவைக்கக்கூடுமென்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதையும் திறக்கவில்லை. அதைப்பற்றி எடப்பாடியால் கேள்வி கேட்க முடியவில்லை.
அதேபோல், பொதுக்கூட்ட மேடை முகப்பில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்தை அகற்றி தாமரை படத்தை வைத்ததையும் எடப்பாடியால் தடுக்க முடியவில்லை. மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வை பொம்மை போல பா.ஜ.க. மாற்றியிருப்பதை மதுரை பொதுக்கூட்டத்தில் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது! இரவு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மதுரை ஜி.ஆர்.டி. தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஒன்றாகக்கூடி, தொகுதிப் பங்கீடு குறித்து பியூஷ் கோயலுடன் ஆலோசனை செய்தனர். அதில் எந்த முடிவுமே எட்டப்படாமல் கலைந்து சென்றது எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைந்தது!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/02/bjpmeet-2026-03-02-18-04-24.jpg)