நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என வேகம் காட்டிய தி.மு.க., தேர்தல் பிரச்சாரத்திலும் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.
தி.மு.க. சார்பில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சியில் மலையரசன் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து, மார்ச் 30-ஆம் தேதி இரவு, பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
“சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் ஆ
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என வேகம் காட்டிய தி.மு.க., தேர்தல் பிரச்சாரத்திலும் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.
தி.மு.க. சார்பில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சியில் மலையரசன் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து, மார்ச் 30-ஆம் தேதி இரவு, பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
“சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்த்து தி.மு.க.வின் தூக்கம் தொலைந்துவிட்டது என்று பேசிவிட்டுச் சென்றார். மோடி அவர்களே, உண்மையில் உங்களால் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் யார் தெரியுமா? பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால் சாமானிய மக்களும், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதால் தாய்மார்களும், ஏழைகளும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டனர்.
வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்களும், ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்துகின்றவர்களும், மூன்று வேளாண் சட்டங்களால் உழவர்களும், தொழிலாளர் விரோதச் சட்டங்களால் பாட்டாளி மக்களும், குடியுரிமைத் திருத்தச் சட்டங்களால் சிறுபான்மை மக்களும், சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டுவதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டனர்.
இப்படி பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஒட்டுமொத்த நாடுமே தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறது. பிரதமர் மோடி, இன்றைக்கு தேர்தல் பத்திர ஊழலால் தூக்கத்தைத் தொலைத்துள்ளார்'' என ஆரம்பத்திலேயே பேச்சில் காரத்தைக் கூட்டினார்.
"தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் இருக்கிறது. இங்கு எல்லோரும் சமத்துவமாக, சகோதரர்களாக ஒற்றுமையாக இருக்கிறோம். தி.மு.க. இருக்கும் வரைக்கும் உங்கள் மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது. திராவிட மாடலில் தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளை அடைந்திருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஒன்றியத்திலும் தொடர, பாசிச ஆட்சியை வீழ்த்தி, ஜனநாயகத்தைக் காக்கவேண்டும்'' என்று பேசி முடித்தார் மு.க.ஸ்டாலின்.
சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலின், கணேசமூர்த்தியின் பூந்துறை குமாரவலசு கிராமத்து வீட்டுக்கு நேராகச் சென்று அவருக்கு மலர்மரியாதை செய்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஈரோடு சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். முந்தைய நாளைப் போலவே அன்றும் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. ஈரோடு தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் கொ.ம.தே.க. வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்திலும் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.