மிழகத்தின் உரிமைகளுக்காகத் தொடர்போராட்டம் நடத்திவந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது எடப்பாடி அரசு. ஜாமீன் இன்னும் கிடைக்கவில்லை. வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாகவே அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. சிறையில் இருக்கும் வேல்முருகனை அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், வேல்முருகனிடம் சில கேள்விகளுக்கான பதில்களை பெறும்வகையில் அவரை தினமும் சந்திக்கும் வழக்கறிஞர் காந்திகுமாரிடம் கேள்விகளை கொடுத்தனுப்பினோம். நாம் முன்வைத்த கேள்விகளுக்கு வழக்கறிஞர் மூலம் பதில்களைச் சொல்லி அனுப்பினார் வேல்முருகன்.

சிறை நிலவரம் எப்படி இருக்கிறது?

நான் விசாரணைக் கைதிதான்; தண்டனை கைதி அல்ல. ஆனால், ஒரு சிறைவாசிக்கான அடிப்படை உரிமைகள்கூட எனக்கு மறுக்கப்படுகின்றன. என்னை சந்திக்க என் வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். அதிலும் பலருக்கு அனுமதி இல்லை. அனுமதி கிடைக்கும் அரசியல் தலைவர்கள்கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. என்னுடைய ரத்த சொந்தங்களுக்கும் என்னுடைய கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களுக்கும் இதுவரை அனுமதி இல்லை. சிறைவாசியின் அறையில் குடிப்பதற்காக மண்பானையில் தண்ணீர் வைக்க வேண்டும். என் அறையில் வைக்க மறுக்கின்ற னர். கழிவறை மோசமாக இருந்தால் மாற்று அறை கேட்க சிறைவாசிக்கு உரிமை உண்டு. இதிலும் என் விசயத்தில் கெடுபிடி காட்டுகின்றனர். அத்தனைக்கும் சிறை சூப்பிரன்டெண்ட் செந்தாமரைக் கண்ணன் தான் காரணம். இத்தகைய கெடுபிடிகளால் எனது மன உறுதியை குலைத்துவிட முடியாது.

உங்கள் மீதான வழக்குகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

Advertisment

velmuruganஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கும், நெய்வேலி என்.எல்.சி. முற்றுகைப் போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய தாக தொடரப்பட்ட வழக்கும் என, 2 வழக்குகள் என் மீது சுமத்தப் பட்டுள்ளன. சுங்கச்சாவடி வழக்கில் தொடர்புடையவர்கள் என 13 பேரை கைது செய்தது காவல்துறை. இந்த வழக்கில் என் பெயர் இல்லை. கைதானவர்களுக்கு விழுப்புரம் நீதி மன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், இரண்டும் மாதம் கழித்து இந்த வழக்கில் என்னை கைது செய்கிறார்கள். அதுவும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்றுவருபவர் களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற என்னை தூத்துக் குடிக்குள் நுழையவிடாமலே கைது செய்கின்றனர். அப் போதும்கூட என் மீது எந்த வழக்கை புனைவது என தெரியாமல் தவித்த போலீ ஸார், கடைசியாக, சுங்கச்சாவடி வழக்கை புனைந்தனர். எஃப்.ஐ.ஆரே இல்லாத வழக்கில் என்னை கைது செய்ததும், தூத்துக்குடிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் போய்வந்த நிலையில் என்னை மட்டும் தடுத்ததும் ஏன்? என்னை கண்டு இந்த அரசாங்கம் பயப்படுகிறதல்லவா? காவிரி பிரச்சனை யில் தமிழகத்தை மோடி அரசு வஞ்சிப்பதை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி.யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, தமிழகத்துக்கு தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு மின்சாரம் கொடுப்பதை எதிர்த்துப் பேசினேன். இந்த பேச்சு எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானது? இதற்காக தேசத் துரோக வழக்கு. தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் பேசுவதும் தேசத் துரோகம் எனில் தொடர்ந்து அதை செய்வேன். இதற்காக, எத்தனை தேச விரோத வழக்குகள் புனைந்தாலும் சட்டப்படி எதிர்கொள்ளும் துணிச்சலும் நேர்மையும் எங்களிடம் இருக்கிறது.

உங்களின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மக்களிடம் வன்முறையை தூண்டுவதாக காவல் துறையினர் குற்றம்சாட்டுகிறார்களே?

தமிழர்களின் உரிமை சார்ந்த போராட்டங்கள் எதுவும் வன்முறை கிடையாது. ஆனால், போராட்டங்களே வன்முறை என ஒரு கட்டமைப்பை அரச பயங்கரவாதம் உருவாக்கி வைத்திருக்கிறது. பொதுவாக, தமிழக வாழ்வுரிமைக்கட்சியும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பும் நடத்திய போராட்டங்கள் எதிலும் வன்முறை நடந்ததில்லை. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதுமில்லை. அரச பயங்கரவாதத்தின் அச் சுறுத்தலையும் ஒடுக்குமுறை யையும் கண்டித்து நாங்கள் பேசுவது உங்களுக்கு வன்முறையாகத் தெரிகிறது. மக்களுக்கு அது நன்முறை யாகத் தெரிகிறது. எங்களின் நடவடிக்கைகள் வன்முறையை தூண்டு கிறதா என மக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை பொதுவெளியில் அரசாங்கம் நடத்திப்பார்க்கட்டும். வன்முறையா? நன்முறையா ? என்பது தெளிவாகிவிடும். உரிமை சார்ந்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கும்போது அதனை சீர்குலைக்க, உளவுத்துறையினர் செய்யும் சதிகள்தான் வன்முறை. அதற்காகவே, கட்சிக்காரர்கள் போர்வையில் சிலரை போராட்டத் தினுள்ளே நுழைத்து, பெட்ரோல் பாம் வீசுவதையும், பொதுசொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதையும் உளவுத்துறையினர் ஏற்பாடு செய்கின்றனர். ஆக, வன்முறைகளை உருவாக்குவது அரசுதானே தவிர நாங்கள் இல்லை.

Advertisment

தமிழக மக்கள் உங்கள் போராட் டங்களை ஆரோக்கியமாகப் பார்க்க வில்லையே?

மக்களுக்கான போராட்டங்களை மட்டுமே நாங்கள் முன்னெடுக்கும் நிலையில், அவர்கள் எப்படி எங்களது போராட்டங்களை வேறுவிதமாகப் பார்ப்பார்கள்? எங்களுடைய போராட்டங்கள் அனைத்தும் வெற்றியடைவதற்கு காரணமே மக்கள் எங்களோடு இணைந்து நிற்பதுதான். அந்த ஆதரவு எப்போதும்போல் இனியும் துணை நிற்கும். ஆனால், மக்களையும் எங்களையும் பிளவுபடுத்த ஆட்சியாளர்கள் போடும் தந்திரங்களுக்கு ஊடகங்கள் பலியாகிவிடக்கூடாது. நாங்கள் நடத்தும் ஒரு போராட்டமாவது, மக்களுக்கு எதிரானது என நிரூபிக்க முடியுமா? மக்களின் சிந்தனை ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது. ஆட்சியாளர்கள்தான் அதில் விஷத்தை கலக்குகிறார்கள்.

உங்களை ஒடுக்குவதில் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக! தமிழக வாழ்வுரிமைகளுக்காகப் போராடும் தலைவர்களை குறி வைத்து அழிக்க நினைக்கிறது மோடியின் மத்திய அரசு. அதற்கு முதல் இலக்கு நான். ராணுவ தளவாட கண்காட்சியை திறந்து வைக்க சென்னை வந்த மோடிக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்பதையும், "கோ பேக் மோடி' என்கிற முழக்கத்தையும் வலிமையாக நடத்த மக்களைத் திரட்டுகிறோமென அறிந்துதான் ஆகாயமார்க்கமாகப் பறந்தார் மோடி. சென்னையில் கால் பதிக்க விடாமல் செய்திருக்கிறார்களே என கோபமடைந்த அவர், உளவுத்துறை கொடுத்த அறிக்கையை வைத்துக் கொண்டு, "யார் அந்த வேல்முருகன்?' என கேட்டிருக்கிறார். அப்போதிலிருந்துதான் எனக்கு ஸ்கெட்ச் போடப் பட்டிருக்கிறது. அதற்கேற்ப, மோடி சொல்வதை எடப்பாடி செய்கிறார். தமிழக அரசியல் தலைவர்களை பாதுகாக்கும் வலிமையான முதல்வர் தமிழகத்தில் இல்லை யென்பதால்தான் அத்தனை ஆட்டங்களையும் ஆடிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மோடிக்கு ஜால்ரா அடித்து தமிழக மக்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசை மக்கள் விரட்டியடிப்பார்கள். மோடியும் எடப்பாடியும் இணைந்து நடத்தும் அச்சுறுத்தல்களுக்கெல்லாம் பயப்படுகிறவன் நான் அல்ல!

உங்களைத் தொடர்ந்து கைதுக்கு ஆளாகும் அடுத்த தலைவர் யார்?

மோடி மற்றும் எடப்பாடி அரசில் தமிழக உரிமைகளுக்காகப் போராடும் தலைவர்கள் அனைவருக்குமே ஆபத்து சூழ்ந்திருக்கிறது. இனி ஒவ்வொன்றாக நடக்கும். ஆனா, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர்கள் அதனை முறியடிப்பார்கள்.

நீங்கள் சிறைப்பட்ட பிறகு உங்கள் கட்சியும் கூட்டமைப்பும் முடங்கி விட்டதாக தெரிகிறதே?

எப்போதும்போல வீரியமாக, ஆக்கப்பூர்வமாக கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களும், கூட்டமைப்பின் தலைவர்களும் செயல்படுகிறார்கள். கட்சியையும் கூட்டமைப்பையும் யாரும் முடக்கி விட முடியாது.

-இரா.இளையசெல்வன்

படம்: ஸ்டாலின்