நீங்கள் மொபைல் போனில் பேசிக்கொண்டிருக் கிறீர்களா?… மின்னஞ்சல் செய்கிறீர்களா? வாட்ஸ் அப் அனுப்புகிறீர்களா?… குறுஞ்செய்தி அனுப்புகிறீர்களா? இணையத்தில் தகவல்களைத் தேடிக்கொண்டிருக்கிறீர் களா?... எதுவானபோதும், நீங்கள் பேசுவதும், எழுதுவதும், தேடுவதும் அனைத்தும் அப்படியே உளவு பார்க்கப் படுகிறது. யாரோ சில அரசியல்வாதிகளின், பத்திரிகை யாளர்களின் மொபைல்போன்கள் மட்டுமல்ல… இந்தியா வின் 140 கோடி மக்களின் மொபைல் போன்களும்!
"நீங்கள் நம்ப மறுத்தாலும்… இதுதான் நிஜம்' என்கிறது லண்டனின் "பைனான்சியல் டைம்ஸ்' பத்திரிகை.
இஸ்ரேலிய ஸ்பைவேரான பெகாசஸ் மென்பொரு ளால் இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்படுவதாக 2019-லேயே புகார் எழுந்தது.
கிட்டத்தட்ட 300 இந்தியர்களின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ள தாகவும், அந்தப் பட்டியலில் தற்போது பதவியிலிருக்கும் இரு மத்திய அமைச்சர்கள், மூன்று எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், 40 பத்திரிகையாளர்கள் அடக்கம் எனவும் பிரான்சை சேர்ந்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல் 2021-ல் வெளிப் படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி தனது மொபைல் போன் உளவுபார்க்கப்படுவதாகப் புகார்சொன்னார். எனினும் இந்தத் தகவலை இந்திய அரசு மறுத்தது.
இந்த நிலையில்தான் லண்டனிலிருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை, இஸ்ரேலிலிருந்து வாங்கிய மற்றொரு மென்பொருள் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் உளவுபார்க்கப்படுவதாகத் தெரிவித் துள்ளது.
அதாவது இந்தியாவில் பேசப்படும் அனைவரின் செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் கால், இமெயில், வலைத்தளத்தில் நாம் தேடும் விவரங்கள் அனைத்தும் அரசின் கவனத்துக்குச் சென்றுகொண்டு தான் இருக்கின்றன.
இதை எப்படிச் செயல்படுத்து கிறார்கள்?
தொலைதொடர்பு நிறுவனங்கள் செயல்பட அரசின் உரிமம் பெற வேண்டுமல்லவா! உங்களுக்கு உரிமம் வேண்டுமென்றால், சம்திங் சம்திங் விஷயங்களைச் செய்தாக வேண்டுமென நிபந்தனை விதித்துவிடுகிறார்கள்.
நமக்கு சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், நமக்கு சர்வதேச இணைப்பைச் சாத்தியப்படுத்தவும், இங்கிருந்து தகவல்கள் கடல்தாண்டிச் செல்லவும் கடலுக்கு அடியில் கேபிள்களைக் கொண்டுசெல்கின்றன. இந்தக் கேபிள்கள் கரையை அடையும் இடத்தில் கேபிள் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள் லேண்டிங் ஸ்டேஷன்கள் மற்றும் டேட்டா சென்டர்களில் கட்டாயம் கண்காணிப்பு உபகரணங்களை நிறுவ தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய அரசு கட்டளையிட்டுள்ளது. இந்த கண்காணிப்பு உபகரணங்களிலிருந்து விஷயத்தைக் கறக்க, இஸ்ரேலின் செப்டியர், காக்னிட், இந்திய கண்காணிப்பு மென்பொருள் நிறுவனமான வீகியர் ஆகிய நிறுவனங்களின் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதாவது, காக்னிட், செப்டியர் போன்ற உளவு மென்பொருட்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பல கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கப்படுகிறது. பின் அவை கேபிள் லேண்டிங் ஸ்டேஷன், டேட்டா சென்டர்களில் நிறுவப்பட்டு, இந்தியாவின் எந்தவொரு தனிநபரும் பேசும், எழுதும், தேடுபொறியில் தேடும் அனைத்தையும் உளவு பார்க்கின்றன. இந்த கோடிக்கணக்கான தரவுகள் ஏ.ஐ. எனப்படும் செயற்கைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சலிக்கப்பட்டு, தேவையான தகவல்கள் அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
“"யாரும் பயப்படத் தேவையில்லை…. இவை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அரசின் அங்கீகாரத் துடனேயே செயல்படுத்தப்படுவதாகவும்'' தெரிவித்துள்ளார் ஒன்றிய உள்துறைச் செயலாளர். ஆனால் இவையெல்லாம் வெறும் சமாதான வார்த்தைகள். சந்தேகப்படுபவர்களை உளவுபார்ப்பது என்பது வேறு. ஒவ்வொரு குடிமகனையும் சந்தேகத்துடன் பார்ப்பது வேறு.
மோடி அரசின் வருகைக்குப் பின்பே, பெகாசஸ், செப்டியர் போன்ற அரசியல்வாதிகள் முதல் குடிமக்கள் வரை இடைமறித்து ஒவ்வொரு குடிமகனும் உளவுபார்க்கப்படுவது நிகழ்கிறது. இது முன்பெப்போதும் இல்லாதது.
ஒவ்வொரு நாடும் தன் மக்களைக் கண்காணிக்க உளவு மென்பொருளை தயாரித்து வழங்கும் செப்டியர் நிறுவனம், "இஸ்ரேலிய அதிகாரிகளின் கண்காணிப் பின்கீழ் சட்ட வரையறைக்கு உட்பட்டே இந்த மென்பொருளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக’'' அறம் பேசுகிறது.
பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை, இந்த உளவு மென்பொருள் பயன்பாடு குறித்து இந்திய அரசாங்கம், ரிலையன்ஸ் ஜியோ, வெகியர் ஆகியவற்றிடம் கருத்துக் கேட்டபோது அவை பதிலளிக்க மறுத்துவிட்டன. ஆனால் வோட ஃபோன், ஐடியா நிறுவனங்கள் மட்டும், “இந்திய அரசாங்கத்தின் நிபந்தனை களுக்கு இணங்க” பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, ருவாண்டா போன்றவை, தங்கள் மக்களின் ஒட்டுமொத்த செல்போன் களையும் உளவுபார்க்கின்றன. பைனான் சியல் டைம்ஸ் சொல்லும் சேதியின்படி பார்த்தால், ஆப்பிரிக்க மக்களுக்குச் சமமாக இந்திய மக்களையும் தரமிறக்கி இருக்கிறது மோடி அரசு.
மக்களை நம்பாத அரசை, குடிமக்கள் எப்படி நம்பமுடியும்?