அருணாசலப்பிரதேசத்தில், சர்ச்சைக்குரிய இந்திய- சீன எல்லையில் அத்துமீறி ஆக்கிரமித்து ஒரு குட்டிக் கிராமத்தையே கட்டி யெழுப்பியுள்ளது சீனா. இந்தியத் தரப்பிலிருந்தோ பலவீனமான எதிர்க்குரல்கள் மட்டுமே எழுந்துள்ளது.
அருணாசலப்பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தின் சாரி சூ நதிக்கரையோரம் கிட்டத் தட்ட நாலரைக் கிலோமீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமித்து 101 வீடுகளைக் கொண்ட புதிய கிராமத்தையே கட்டி யெழுப்பியுள்ளது சீனா.
அதிகாரப்பூர்வமாக இப்பகுதி இந்தியாவின் வரை படங்களில் இடம்பெற்றிருந்த போதும் 1959 முதல் சீனாவின் மேலாதிக்கத்திலேயே இருந்து வருகிறது. ஆனால் இவ்விடத்தில் சீனாவின் ராணுவக் காவல் குடில் மட்டுமே இது வரை இருந்து வந்தது. தற்போதோ ஒரு புதிய கிராமமே கட்டியெழுப்பப்பட்டுள்ளது, இந்தியத் தரப்பைக் கவலையடையச் செய்துள்ளது.
இமாலயத்தின் மேற்குப் பகுதியான லடாக்கில் அமைந்துள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். அதேசமயம் சீனத் தரப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்து அந்நாட்டு அரசு தெளிவான தகவல்களை வெளியிடவில்லை.
லடாக் எல்லை குறித்து இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், இமாலயப் பகுதியின் கிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் சுபன்சிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் சீனா புதிய ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி யுள்ளதை கவலையுடன் நோக்கு கின்றனர் இந்தியர்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமோ, ""இந்தியாவின் எல்லையுடன் இணைந்த பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளில் இறங்கியுள்ளதாக அறிக்கைகள் கிடைத்திருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே சீனா இத்தகைய அத்துமீறல்களில் இறங்கிவருகிறது'' எனத் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இந்தியா கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. அதுவே இருதரப்பிலும் பதற்றம் நீடிப்பதற்கு காரணம் எனத் தெரிவித்து நம்மை குற்றவாளியாக்கப் பார்க்கிறது சீனா. ஆனால், சீனா கட்டி யெழுப்பியுள்ள புதிய கிராமத்தின் அருகில் இந்தியாவின் சாலை, பாலம் போன்ற வேறெந்தக் கட்டுமானங்களையும் கூகுள் எர்த் காட்டவில்லை. 2019, 2020 கூகுள் எர்த் மேப் படங்களை ஒப்பிட்டாலே சீனாவின் புதிய கிராமத்தை தெளிவாகக் காணமுடிகிறது.
பா.ஜ.க. எம்.பி. தபிர் காவோ இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கவலைதெரிவிக்க, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் அருணாசலப்பிரதேச ஆக்கிரமிப்பு பற்றி கேள்வியெழுப்பியதும், அருணாசலப் பிரதேசத்தில் சீனா புதிய இடங்களை ஆக்கிரமிப்பது 1980 முதலே நடந்துவருவதுதான் என வழக்கம்போல காவோ பல்டியடித்துள்ளார். எப்போதும்போல் முந்தைய காங்கிரஸ் அரசுமீது பொறுப்பைச் சுமத்திவிட்டு நழுவப்பார்க்கிறது பா.ஜ.க.