பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சியில், 140க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படாமலேயே, போலியான ஆவணங்கள் தயாரித்து அதிகாரிகளும் சில புரோக்கர்களும் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதை நக்கீரன் விரிவாக அம்பலப் படுத்தியிருந்தது.

land

உயிருடன் இருப்பவர்கள் பெயரில் மட்டுமின்றி இறந்தவர்கள் பெயரிலும் இந்த மோசடி நடந்துள்ளது. கமலப்பன் மகன் ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. பெரிய குடும்பம். இவர் உடல் நலகுறைவால் கடந்த 14-9-2018 இறந்துவிட்டார். ஆனால் இவர் பெயரில் வீடுகட்டியதாக 4 தவணையாக பணமும் கட்டுமானப் பொருளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஜெயச்சந்திரன் பெயரிலான வீட்டிற்கான பதிவு எண் TN 2222811 (இவரது பிறந்த வருடம் 1951 என்று குறிப்பிடப்பட்டு வயது 61 என்று பதிவாகி உள்ளது) 2018 இறந்த இவரது பெயரில் ரூ 1,20,000 பணம் 4 தவணைகளாக வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது முதல் தவணை 25-2-19 தேதியில் உத்தரவு போட்டு 2-3-19 தேதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.26,029 எடுக்கப்பட்டுள்ளது, அதே போல 30-5-19 அன்று இரண்டாம் தவணை ரூ.26,7151 எடுக்கப் பட்டுள்ளது. 19-6-19 தேதியில் மூன்றாம் தவணை ரூ. 26681 பணமும், 13-7-19 தேதியில் நான்காவது தவணை ரூ.40575 பணமும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கட்டுமானப் பொருள் (கம்பி, ஜல்லி) ஆகியவை சுமார் 55,000 ரூபாய் மதிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்கு சொல்கிறது.

2018ல் இறந்தவர் கட்டிய வீட்டை 08-2-2019, 21-5-2019, 15-6-2019, 04-7-2019 ஆகிய தேதிகளில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ததாக ஆவணம் கூறுகிறது.

இத்தனை முறை ஆய்வு செய்து கட்டப்பட்ட வீடு எங்கே என்று தெரியவில்லை. 2018ல் இறந்தவரிடம் எங்கே போய் கையெழுத்து வாங்கினார்கள்? சுடுகாட்டிலா? என்று கேட்கிறார்கள் பொதுமக்களும் இந்த மோசடியை அம்பலப்படுத்தி போராடுபவர்களும்.

மோடி பெயரிலான திட்டத்தில் நடந்த மோசடி பற்றி பா.ஜ.க. வாய் திறக்காததும் ஆச்சரியமாக உள்ளது. மன்னார்குடி ஒரு சாம்பிள். தமிழ்நாடு முழுக்க இதே மோசடிதான்.

-இரா.பகத்சிங்