"புதிய பேருந்து நிலையம் அமைக்க டெண்டர் விடப்பட்டது, ஆனால் கடைகள் கட்டவில்லை. புதியதாக காய்கறி மார்க்கெட் -மீன் மார்க்கெட் கட்டப் பட்டுள்ளது. ஆனால் ஏலம் விடமுடியாமல் தடுக்கப் படுகிறது. இப்படியாக ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள் இருவரின் கோஷ்டிச் சண்டையால் எங்கள் திருவத்திபுரம் (செய்யார்) நகரம் பாதிக்கப்பட்டுள்ளது'' என நம்மைத் தொடர்புகொண்டு புலம்பினார்கள் அங்குள்ள மக்கள்.

nla

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரத்தில், பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை போடப்பட்டது. பேருந்து நிலையத்திலுள்ள கடைகளை காலி செய்யச் சொல்லி நகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. பல கடைகள் அங்கிருந்து காலி செய்தபின்பும், அ.தி.மு.க. முன்னாள் ந.செ. பூக்கடை கோபால் என்பவர் வழக்கு போட்டு கடையை காலி செய்யவில்லை. பூக்கடை கோபால் நம்மிடம், "2015ல் தான் பேருந்து நிலையக் கடைகள் சீரமைக்கப்பட்டன. பேருந்து நிலையம் இப் போதும் நன்றாக இருக்கிறது. கமிஷனுக்காக புதிய பேருந்து நிலையம் கட்ட முயற்சிக் கிறார்கள். இங்கு பல ஆண்டு களாக கடை வைத்துள்ள எங்களுக்கு என்ன மாற்று எனக்கேட்டால் பதில் இல்லை. அதனால்தான் வழக்கு போட்டேன்'' என்றார்.

நகர முக்கிய பிரமுகர் ஒருவர், "நகராட்சி சார்பில் மார்க்கெட்டில் 50 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளை ஏலம் விட ஒரு கடைக்கு 4 லட்ச ரூபாயை டெபாசிட்டாக நிர்ணயம் செய்தார்கள். அவ்வளவு தொகை கட்ட முடியாது என யாரும் ஏலம் எடுக்கவில்லை. அதன்பின் 2.5 லட்சம் என நிர்ணயம் செய்தார்கள், அப்போதும் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இப்போது 1.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு சில கோடிகள் நஷ்டம்'' என்றார்.

Advertisment

இதுபற்றி நகராட்சித் தலைவர் மோகனவேலு, "அங் குள்ள கடைக்காரர்களுக்கு, தற்காலிக பேருந்து நிலையத் தில் கடைகள் அமைத்துத் தருவதாகவும், புதிய பேருந்து நிலையத்தில் கடை ஒதுக்க முன்னுரிமை தருவதாகவும் சொல்லப்பட்டது.

அதனையேற்று கடை களைக் காலி செய்துவிட் டார்கள். ஒருவர் மட்டும், என் கடையை இடிக்கக்கூடாதென நீதிமன்றத்துக்கு சென்றார். நீதிமன்றம் ஒரு கமிஷன் அமைத்து ஆய்வுக்கு அனுப் பியது. பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து கட்டடம் உறுதியுடன் இல்லை யென்று அறிக்கை தந்ததும் இடித்துக்கட்ட உத்தரவிட்டது. அவர் மேல் முறையீடு செய் துள்ளார். இன்னும் சில நாட்களில் தடையை உடைத்து பேருந்து நிலையம் கட்டப் படும். காய்கறி மார்க்கெட்டில் 8 கடைகள், மீன் மார்க் கெட்டில் சில கடைகள் ஏலம் போயுள்ளன. மற்ற கடைகளையும் விரைவில் ஏலம் எடுப்பார்கள்'' என்றார்.

புதிய பேருந்து நிலையம், காய்கனி, மீன் மார்க்கெட் கடைகள் ஏலம் போகாமல் தடுப்பது ஆளுங்கட்சியின் மக்கள் பிரதிநிதி எனக் குற்றம்சாட்டுகிறார்கள். இதுபற்றி விசாரித்தபோது, "தன்னை மீறி நகரமன்றத் தலைவரான மோகனவேல் மீது தொகுதி எம்.எல்.ஏ. ஜோதிக்கு கோபம். நகராட்சியில் எந்த பணி நடப்பதாக இருந்தாலும் என்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமென்கிறார் எம்.எல்.ஏ., முடியாதென்கிறார் சேர்மன். நகர்ப்புற அமைச்சரை சந்தித்து 15.5 கோடிக்கு நிதி வாங்கி வந்து பணிகளைச் செய்கிறார் சேர்மன். அதில் எம்.எல்.ஏ.வுக்கான கமிஷனை சேர்மன் தரவில்லை. அதேபோல், மார்க்கெட் கடைகளை யாரும் ஏலம் கேட்காதீங்க, நான் டெபாஸிட்டை குறைக்க வைக்கிறேன் எனத் தடுக்கிறார் எம்.எல்.ஏ. தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க இடம் தருபவரையும் எம்.எல்.ஏ. ஆட்கள் தடுத்துள்ளனர். நகராட்சியில் எந்தப் பணியும் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார் எம்.எல்.ஏ.'' என குற்றம்சாட்டினார்கள்.

Advertisment

வடக்கு மா.செ. தரணிவேந்தன் எம்.பி., இருவரிடமும் பஞ்சாயத்து செய்தும் மோதல் முடியவில்லை என்கிறார்கள்.

இதுபற்றி செய்யார் தொகுதி எம்.எல்.ஏ. ஜோதியிடம் கேட்டபோது, "பேருந்து நிலையம் புதிதாகக் கட்டவேண்டுமென சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து நிதி ஒதுக்கவைத்தது நான்தான். மார்க்கெட் கடைகளுக்கு 4 லட்சம் டெபாசிட் என்பது எங்கள் நகரத்துக்கு ரொம்ப அதிகமென்று வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்தது, அதனை குறைக்கச் சொன்னேன். நான் கமிஷன் கேட்டேன் என்பது தவறான குற்றச்சாட்டு. எந்த கான்ட் ராக்டர் எனக்கு கமிஷன் தந்தாரென்று சொல்லச் சொல்லுங்கள், நான் பதில் சொல்கிறேன். நான் வேலை களைத் தடுக்கிறேன் என்பது பொய்க் குற்றச்சாட்டு. சேர்மன் மீது அதிருப்தியாகி கவுன்சிலர்கள் அமைச்சரிடம் புகார் சொன்னார்கள், அதனை மா.செ. விசாரிக்கச் சொன்னார். அவர்தான் விசாரணை நடத்தினார்'' என்றார்.

கவுன்சிலர்கள் சிலர், வைஸ்சேர்மன் பேபி ராணி உட்பட மெஜாரிட்டி கவுன்சிலர்கள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் என்பதால் நகராட்சியில் நடக்கும் வேலையில் கவுன்சிலர்களுக்கு சரியாக பங்கு தருவதில்லை சேர்மன். இதை எம்.எல்.ஏ. தட்டிக்கேட்கிறார். இதனால்தான் இருவருக்குள்ளும் யுத்தம். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள்.