விருதுநகர் மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில், ஆரம்பத்திலேயே அ.தி.மு.க. பாய்ச்சல் காட்டுகிறது. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக்கூட்டத்தில், கவரில் வைத்து அ.தி.மு.க. தருவது ரூ.2000 என்றால், தி.மு.க. கொடுப்பது ரூ.500 மட்டுமே. நிதானமாகவே தி.மு.க. காய் நகர்த்துகிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும், தங்கம் தென்னரசுவுக்கும் தரப்பட்டுள்ள முக்கிய அஜெண்டா ‘கே.டி.ராஜேந்திரபாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரைத் தோற்கடித்தே ஆகவேண்டும்.’ என்பதுதான்.
அ.தி.மு.க. உள்ளடி கிலி!
2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களின் மூலம், இத்தொகுதி தொடர்ந்து இரண்டு தடவை, ராஜேந்திரபாலாஜியை சட்ட மன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதற்குமுன், சிவகாசி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வர்களில் யாரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெறாத நிலையில், தொடர்ந்து இரண்டு தடவை, ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்துவருகிறார்.
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கியில்லாத விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திரபாலாஜி, அரசியல் மேடை யிலும் ஆன்மிகவாதியாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அதனால், சகல ஜாதியினரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளை கவர்ந்துவிட முடியும் என்று திடமாக நம்புகிறார். அதே நேரத்தில், தேவாலயங்ளுக்கும், மசூதி களுக்கும் அவ்வப்போது சென்று, கிறிஸ் தவ, இஸ்லாமியர்களிடமும் நல்லுறவைப் பேணி வருகிறார். தனிப்பட்ட முறையில், கட்சி பாகுபாடின்றி பொதுமக்களுக்கு வாரி வழங்குவதால், வள்ளலாகவும் பார்க்கப்படுகிறார். ஆக, சகலவிதத்திலும் பாதுகாப்பான தொகுதியாக சிவகாசி இருந்தாலும், முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் சாதி ரீதியிலான உள்ளடி கிலி ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த உள்ளடி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதே அ.தி.மு.க.வை பலவீனப் படுத்தி, ஒன்றியத்தை தி.மு.க.வுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.
மகனுக்காக "ரிஸ்க்" எடுக்கிறாரா வைகோ?
சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, மூன்று தடவை ம.தி.மு.க. வெற்றி பெற்றது. இரண்டு தடவை எம்.பி. ஆனார் வைகோ. தனக்கு மிகவும் பரிச்சயமான சட்டமன்றத் தொகுதி சிவகாசி என்பதால், தன் மகன் துரை வையாபுரி, தி.மு.க. கூட்டணி வேட்பாளராக, இத்தொகுதியில் போட்டியிட வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டுவதாக, தி.மு.க. தரப்பு சொல்கிறது. அதேநேரத்தில், சாத்தூர் தொகுதியும், அவரது விருப்பப் பட்டியலில் உள்ளதாம்.
சாத்தூரில் 2016 தேர்தலில் தி.மு.க.விலும், 2019 இடைத்தேர்தலிலும் குறைந்தவாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க. சீனிவாசன் மீண்டும் முயற்சிக்கிறார். பணபலம் உள்ளவர் என்பதால், சாத்தூரில் தனக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளுக்கு தேர்தல் செலவு செய்வதற்கும், அவர் தயாராகவே இருக்கிறார்.
அப்படியென்றால், நாயுடு வாக்குகள் கணிசமாக உள்ள சிவகாசியில், துரைவையா புரியை கே.டி .ராஜேந்திர பாலாஜியோடு மோதவிடுவது தானே? தி.மு.க. தரப்போ ""இரட்டை இலை வாக்கு வங்கி அதிகமாக உள்ள தொகுதி இது. கே.டி.ராஜேந்திரபாலாஜியும் பணத்தை இறைத்து வாக்குகளைக் கவர்ந்துவிடுவார். முதன் முதலில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் துரை வையாபுரி எதற்காக இத்தனை ரிஸ்க் எடுக்கவேண்டும்? விளாத்திகுளத்திலோ, கோவில்பட்டியிலோ போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும்''’ என்று வைகோ தரப்பை ‘கன்வின்ஸ்’ செய்தபடியே இருக்கிறதாம்.
தொகுதி மாறுகிறாரா ராஜேந்திரபாலாஜி?
‘சிவகாசிக்குப் பதில் விருதுநகரிலோ, ராஜபாளையத்திலோ, தொகுதி மாறி போட்டியிடுவதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி வருகிறார் ராஜேந்திரபாலாஜி. எப்படியும் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகரில் போட்டியிடுவது, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராஜா சொக்கராகத்தான் இருக்கும் என்பது ராஜேந்திர பாலாஜி கணக்கு. விருதுநகரில் ‘இலவு காத்த கிளி’ போல, கொரோனா காலத்தில் தொகுதி மக்களை வெகுவாக கவனித்த கோகுலம் தங்கராஜ், "அ.தி.மு.க. சீட் எனக்கே'’ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். ராஜேந்திரபாலாஜி அவரிடம், ‘""உங்கள் மனைவிக்குத்தான் விருதுநகர் முனிசி பாலிட்டி சேர்மன் சீட்''’என்று உத்தரவாதம் தந்து ‘கூல்’ செய்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் அமைச்சருடனே காணப்படும் எஸ்.எஸ்.கதிரவன், "பழம் நழுவிப் பாலில் விழாதா?'’என்ற எதிர்பார்ப்புடன், ‘"விருதுநகருக்கு நானே எம்.எல்.ஏ.'’ என்ற கனவில் மிதக்கிறார்.
எனக்கு ஒன்று; மகனுக்கு ஒன்று! -அண்ணாச்சி அப்படித்தான்!
விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே. எஸ்.எஸ்.ஆர், தனக்கு வயதாகி விட்டது, தேர்தலில் தன்னு டைய வாரிசு ரமேஷை. அருப் புக்கோட்டை வேட்பாளராக களமிறக்கினால் என்னவென்று சிந்தித்து வருவதாகப் பேச்சு கிளம்ப... அந்த தொகுதி தி.மு.க. வினர் ‘""அண்ணாச்சி லெவல் தெரியாம யாரோ கிளப்பிவிட றாங்க. எனக்கு ஒண்ணு; என் மகனுக்கு ஒண்ணுன்னு சீட் வாங்க நினைப்பாரே தவிர, அவராவது போட்டியிடாமல் ஒதுங்கிப் போவதாவது. அதுவும் ரமேஷ் அ.தி.மு.க.வுக்கு தாவிவிட்டு வந்தவர். அவருக்கு எப்படி தி.மு.க. தலைமை சீட் கொடுக்கும்?''’என கேட்கின்றனர்.
‘"புதிதாக, அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகியிருக்கும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ரவிச்சந்திரனை, முக்குலத்தோர் வாக்குகள் அதிகமாக உள்ள திருச்சுழியில் போட்டியிட வைத்து, தங்கம் தென்னரசுவுக்கு ‘டஃப்’ கொடுக்கலாம்...'’என்னும் சிந்தனை அ.தி.மு.க. தரப்பிடம் துளிர்த்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆளும்கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இப்போதே ‘தேர்தல் ஜுரம்’ வந்துவிட்டது.
-ராம்கி