தமிழ்நாட்டில் ஆண்டுக்காண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் அதற்கேற்ப அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் சுமார் 5,804 இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், தொடக்கப்பள்ளிகளில் 1,924 தலைமையாசிரியர்கள், 1,042 நடுநிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை யென்றும் புள்ளி விபரங்களை ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 712 பள்ளிகளில் 892 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் அதே மாவட்டத் தில் தளி ஒன்றியத்தில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரே மொத்தம் 4 பள்ளிகளுக்கு பொறுப்பு பார்க்க வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ள நிலையும் உள்ளது. இதே போல தர்மபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி போன்ற மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் அதிகமான பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. சில மாவட்டங்களில் உபரி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேல் உள்ளனர். அதாவது, தற்போது நடந்துவரும் ஆசிரியர் கலந்தாய்விற்கு முன்பே கடந்த ஆண்டுகளில் வடக்கு, மத்திய மாவட்டங்களில் பணியாற்றிய தெற்கு மாவட்ட ஆசிரியர்கள், ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கொடுத்து, தெற்கு மாவட்டத்திற்கு மாற்றலாகிச் சென்றுவிட்டனர். ஒரு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு தக்கவாறு ஆசிரியர்கள் உள்ளனரா என்பதைக் கூடப் பார்க்காமல் பணத்தைப் பார்த்ததும் ஆசிரியர்கள் அதிகமுள்ள பள்ளிகளுக்கே உபரியாக அனுப்பியுள்ளனர். இதில் பல நிர்வாக மாறுதல் ஆணைகளில் இடைத்தரகர்கள் போலிக் கையெழுத்துடன் அனுப்பியுள்ள தாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீர மங்கலம் பேரூராட்சி 1வது வார்டு காசிம் புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மங்களநாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கறம்பக்குடி ஒன்றியத்தில் கல்லுமடை, பேயாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் ஒரு மாதம் முன்பும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 6ஆம் தேதி நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்விலுமாக கூண்டோடு மாறுதலாகிவிட்டதால், கடந்த ஒரு மாதமாக ஆசிரியர்களே இல்லாமல் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து கடந்த 6ஆம்தேதி நக்கீரன் இணையத்தில் "ஆசிரியர்களே இல்லாத அரசுப் பள்ளிகள்' என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளி யிட்டிருந்தோம். இச்செய்தியை யடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் காரணம் கேட்கப்பட்டு, அறிக்கை பெறப்பட் டுள்ளது. தற்போதுவரை அந்த பள்ளிகளுக்கு எந்த ஆசிரியரும் நிரப்பப்பட வில்லை.
இதுகுறித்து அறிந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி களை முடித்துக்கொண்டு, பேராவூரணி - அறந்தாங்கி சாலையிலுள்ள ஆயிங்குடி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு திடீரென தனியாகச் சென்று, நேராக வகுப் பறைகளுக்குள் சென்று மாணவர்களைப் படிக்கச் சொல்லியும், எழுதச் சொல்லியும் பார்த்துவிட்டு, கட்டடங்களை ஆய்வு செய்தபிறகு அங்கிருந்த ஆசிரியர்களிடம் சில விபரங்களைக் கேட்டறிந்தார். அப்போது மாற்றுப்பணியிலுள்ள ஓர் ஆசிரியை, ஆசிரியர், இடைநிலை, மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியைகள், கனிணி இயக்குநர் என 5 பேர் மட்டுமே பணியிலிருந்தனர். அவர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டு அறந்தாங்கி புறப்பட்டார்.
அடுத்ததாக, அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கே பல வகுப்பறைகளிலும் பெஞ்ச், டெஸ்க் இல் லாமல் மாணவிகள் தரையில் அமர்ந்திருப் பதைப் பார்ந்து அமைச்சரின் முகம் மாறியது. மேலும் சில வகுப்பறைகளில் சாக் பீஸ், டஸ்டர் வைக்கப் பயன்படுத்தும் ஒரே டெஸ்க்கும் துருப் பிடித்துக் காணப்பட் டது. மின்விசிறியோ வெறும் கம்பியோடு தலைக்குமேல் தொங் கிக்கொண்டிருந்தது. ஜன்னல், இரும்புக் கதவுகள் துருப்பிடித்துக் காணப்பட்டன. அவற்றையெல்லாம் கண்டதும், மனம் இறுக்கமானவர், அங்கிருந்த பெற்றோர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு கிளம்பினார். அமைச்சரின் திடீர் ஆய்வும், மவுனமும், கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
நிலைமையைப் புரிந்துகொண்டதால், விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்துக்கும் அமைச்சர் திடீர் ஆய்வுக்கு வருவாரெனக் கூறுகிறார்கள் விபரமறிந்தவர்கள்.
____________
நீதிமன்ற உத்தரவிற்கு பதில் இல்லை!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படாத நிலையில், அவர்கள் டி.ஆர்.பி. போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற்றாலே பணி என்ற 2018 அரசாணை வெளியிடப்பட்டது. 2018ஆம் ஆண்டுக்கு முன்பே தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 410 பேர் வழக்கு தொடர்ந்ததில், மனுதாரர்கள் 410 பேருக்கும் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு எந்தப் பதிலும் சொல்லவில்லை. அதேபோல தற்போது நடந்த டி.ஆர்.பி. தேர்வில் 2,700 பேருக்கு பணி வழங்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் 9000 பணியிடங்கள் காலியாக உள்ளதால் அனைத்து காலிப் பணியிடங் களையும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ளன. கோரிக்கைகளை ஏற்குமா அரசு?
-செம்பருத்தி