ஓராண்டுகால தி.மு.க. ஆட்சியில், அதிகாரிகளே கொடிகட்டிப் பறப்பதாக அமைச்சர்கள் வட்டாரத்திலேயே புழுக்கம் தெரிகிறது.
நரிக்குறவர் சமுதாய மாணவிகளின் அழைப்பை ஏற்று, அவர்கள் வீட்டுக்கு நேரில் சென்று சாப்பிட்ட முதல்வர், திரும்பி வரும்போது அம்பத்தூரில் உள்ள ஒரு காவல்நிலையத்துக்கு சென்றார். அதனையறிந்து ஓடோடி வந்த, ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை வெளியே நிற்க வைத்துவிட்டார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.
உள்துறை செயலாளரான பிரபாகர் ராஜினாமா செய்யும் மனநிலையில் இருப்பதால், சி.எஸ். கேடரில் உள்ள அவருக்குப் பதில் யாரைப் போடலாம் என அதி காரத்தின் உச்சத்தில் இருக்கும் ஜூனியர் அதிகாரியிடம் ஆலோசித் திருக்கிறார் ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி.
குரூப் 1 அதிகாரிகளை நியமன ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு செய்யும் விவகாரத்திலும் கொந்தளிப்பு தெரிகிறது. பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை அரசுப் பணிகளில் ஏற்படும் காலியிடங்களை கணக்கெடுத்து குரூப் 1 அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணி உயர்வு கொடுப்பார்கள். அப்படி கடந்த மாதம் மூன்று பேரை ஐ.ஏ.எஸ். அதிகாரி களாக்கினார்கள்.
கலைஞர் காலத்தில் இப்படி பணி உயர்வில் ஐ.ஏ.எஸ். அதிகாரி களாக யாரை நியமிப்பது என்பதை கலைஞர்தான் முடிவு செய்வார். அவரது ஆட்சிக் காலத்தில் தென்மாவட்ட அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், தங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணி உயர்வு தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதில் ஒருவரை நிராகரித்துவிட்டு முன்னாள் உளவுத்துறை அதிகாரியின் உறவினரை ஐ.ஏ.எஸ். ஆக்கினார் கலைஞர்.
இந்த முறை 43 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெறும் ரேஸில் இருந்தனர். அதில் பதினைந்துபேரை தேர்ந்தெடுத்து, அவர்களில் மூன்று பேரை ஐ.ஏ.எஸ். ஆக்க முடிவு செய்த தமிழக அரசு, அதை மத்திய அரசுக்கு அனுப்பி உறுதியாக்கியுள்ளது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் பணி உயர்வு பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருபவரின் பின்னணி சமூக நீதியின் அடிப்படையிலும், ஆட்சிக்குத் துணையாக இருப்பாரா என்ற வகையிலும் ஆராயப்படும். அப்படி எந்த அளவுகோலும் தற்போது புதிதாக பணி உயர்வு பெறும் குரூப் 1 அதிகாரிகள் பெற்றிருக்கவில்லை என்கிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
பொதுவாக இப்படி பதவி உயர்வு பெறுபவர்கள், ஆர்.டிஓ. மற்றும் டி.ஆர்.ஓ. என வருவாய்த்துறையில் இருப்பவர்களாக இருப்பார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். பதவிகளை பணி உயர்வில் அடைவது இயல்பு. அந்த தகுதியும் தற்பொழுது ஐ.ஏ.எஸ். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு இல்லை. குரூப் 1 அதிகாரியாக இருந்தார்கள் என்கிற அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
மதகபாரதி, பழனி, சஜீவனி ஆகியோர் தற்பொழுது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற மாநில அரசு, மத்திய சர்வீஸ் கமிஷனுக்கு பரிந்துரைத்து அனுப்பி யுள்ளது. இவர்கள் மத்திய அரசின் இண்டர்வியூவையும் முடித்து விட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி களாக பதவியேற்கத் தயாராகி வருகிறார்கள். இதில் பழனி வணிகவரித் துறையைச் சேர்ந்தவர். திருமதி சஜீவனி, புள்ளியியல் துறையைச் சேர்ந்தவர், மதகபாரதி, நிதித்துறையைச் சேர்ந்த கருவூலக் கணக்குத் துறையைச் சேர்ந்தவர்.
இவர்களுக்கெல்லாம் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிபாரிசு செய்திருப்பதால் அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி உயர்வு கொடுக்கும் லிஸ்ட்டில் சேர்த்துவிட, அவர்களது சிபாரிசை முதல்வர் ஸ்டாலின் ஏற்று அவர்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பரிந்துரைத்திருக்கிறார். இதில் ஒருவர் கூட வருவாய்த்துறையைச் சேர்ந்தவர் இல்லை. பொதுவாக வருவாய்த்துறையை தவிர மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வருவது எப்போதாவதுதான் நிகழும் என்கிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாலசந்திரன் ஐ.ஏ.எஸ்.
பதவி உயர்வு பெறும் லிஸ்ட்டில் உள்ள சஜீவனி, தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முதல்வரின் அலுவலகப் பணியில் பொறுப் பேற்று வேலை செய்துவருகிறார். இந்த நியமன பின்னணியை விவரிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் "யார் பதவி உயர்வு பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக வரவேண்டும் என்பதை மத்திய அரசின் ஊழியர் மற்றும் அவர்களின் நலன்காக்கும் துறையை நிர்வகிக்கும் அமைச்சரகத்திற்குத்தான் அந்த ஃபைல்கள் வரும். தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் இந்த துறை அமைச்சராக இருந்தபோது, இதுபோன்று நியமன ஐ.ஏ.எஸ். பதவி பெற, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் தர பல அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். அதை ஏற்க வில்லை'' என்கிறார்கள்.
தற்போதைய பதவி உயர்வு, கோட்டை அதி காரத்தின் வலிமையைக் காட்டியுள்ளது என்கிறார் கள் கட்சியினர்.