தமிழகத்திலுள்ள சிறு துறைமுகங்களை எல்லா வகையிலும் மேம்படுத்துவது குறித்து ஆராய, சிங்கப்பூர் சென்றிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. இதற்காக அங்குள்ள துறைமுகத்துறை அதிகாரிகளையும் துறைமுக நிபுணர்களையும் சந்தித்து அவர் ஆலோசித்து வருகிறார்.
இந்தியாவில் உள்ள 9 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கணக்கிட்டால் 7,517 கிலோமீட்டர் தூரத்துக்கு கடற்கரை உள்ளது.
இதில் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் 12 பெரிய துறைமுகங்களும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் 187 சிறிய துறைமுகங்களும் உள்ளன. நம் தமிழ்நாடு என்று எடுத்துக்கொண்டால் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி என மூன்று பெரிய துறைமுகங்களும், 21 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவற்றில் 7 துறைமுகங்களை தமிழ்நாடு அரசும், மற்ற 14 துறைமுகங்களை தனியார் நிறுவனங்களும் நிர்வகித்து வருகின்றன.
இந்த நிலையில் மாநில அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறிய துறைமுகங்களை, ஒன்றிய அரசு, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிவு செய்து மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதற்காக இந்திய துறைமுகங்கள் சட்ட மசோதா வரைவை 2021 ஜூன் 10 ஆம் தேதியே ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் மாநில அரசின் பராமரிப்பிலுள்ள சிறிய துறைமுகங்களை ஒன்றிய அரசு தனது நிர்வாகத்தில் எடுக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதன்படி சிறிய துறைமுகங்கள் ஒன்றிய அரசின் கீழ் சென்றால் கடற்கரை பகுதியில் உள்ள மாநிலத்தின் உரிமைகள் முழுவதும் பறிபோகும். சிறிய துறைமுகங்கள் மூலமாக மாநிலத்துக்கு வரும் வருவாயும் முழுதுமாக டெல்லிக்குச் சென்றுவிடும். சிறிய துறைமுகங்கள் குழுமத்தின் சேர்மன்களாக இருக்கும் மாநில அமைச்சர்களும், இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது சேர்மன் பதவிகளை இழந்து சாதாரண உறுப்பினர்களாகி விடுவார்கள்.
இந்த மசோதா குறித்து, ஒன்றிய அரசின் கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம், கடற்கரை ஓரமுள்ள மாநில அரசுகளிடம் கருத்து கேட்டபோது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, மற்ற 8 மாநில முதல்வர்களுக்கு இதன் ஆபத்து குறித்து கடிதம் எழுதி எச்சரித்தார்.
கடலூர், பாம்பன், குளச்சல் துறைமுகங்கள் டெவலப் செய்யப்படாமல் தேக்க நிலையில் உள்ளது. இவைகளை மேம்படுத்தி அரசுக்கு வருவாய் வரவைக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியபின், தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிங்கப்பூர் துறைமுக ஆணையம், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் அமைச்சரான எ.வ.வேலு, சிங்கப்பூருக்கு வருகை தந்து, அங்குள்ள துறைமுகத்தை பார்வையிட வேண்டும் என அழைப்பு விடுத்தது.
அந்த அழைப்பை ஏற்று செப்டம்பர் 27ஆம் தேதி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான எ.வ.வேலு, துறை செயலாளர் பிரதீப் யாதவுடன் சிங்கப்பூர் சென்றிருக்கிறார்.
சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய தூதரகத் தின் முதன்மை செயலா ளர் பிரபாகர், அமைச்சர் வேலுவை மகிழ்வோடு வரவேற்றார். அதிகாரி களுடன் சிங்கப்பூர் துறை முகத்தின் பி.எஸ்.ஏ நிர்வகிக்கும் சரக்குப் பெட்டக முனையத்தை முதலில் அமைச்சர் வேலு பார்வையிட்டார். இது பன்னாட்டு துறைமுக முனையங்களில் முதன் மையானதாகக் கருதப் படுகிறது.
சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் வரை நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் சரக்குப் பெட்டங்களைக் கையாளும் திறன் கொண்டது என்றும், 2023 ஆம் ஆண்டு இந்த துறைமுகம் மட்டும் 37 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளது என்றும், இதற்கு அது கையாளும் நவீன தொழில் நுட்பமே காரணம் என்றும் அமைச்சர் வேலு விடம் அங்குள்ள நிபுணர்கள் விளக்கிக் கூறினர்.
சிங்கப்பூர் துறைமுக நிறுவன அலுவலர் களிடம் அமைச்சர் வேலு உரையாடும்போது “"தமிழ்நாட்டில் மட்டும் 1,076 கிலோமீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது. கடலூர் மற்றும் நாகப்பட்டணம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்திருக்கின்றன”என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்தினார். பின்னர், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை நவீன தொழில் நுட்பத்துடன் மேம்படுத்துவது குறித்து விரிவாக அவர்களிடம் அமைச்சர் வேலு ஆலோசித்தார். தமிழ்நாட்டில் சிறு துறைமுகங் களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்களிடம் கலந்துரையாடினார் . அமைச்சரின் இந்த சிங்கப்பூர் பயணம், தமிழகத் துறைமுகங் களை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள், இங்குள்ள துறை அதிகாரிகள்.
"தனியார் பங்களிப்புடன் தமிழகத்தில் உள்ள சிறிய துறைமுகங்களை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழ்நாடு அரசு' என்கிறார்கள் துறை அதிகாரிகள்.