சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளைக் கடந்தும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் பெரும் பாலானோர் நிலமற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்த நிலையைப் போக்க போராட்டங்கள் தொடரும் நிலையில், கொடுத்த பட்டாவையே அரசு பிடுங்கிக்கொள்ளும் கொடுமை அரங்கேறியுள்ளது.
1995ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் 1,100 பேருக்கு, வீடுகட்டி குடியிருப்பதற்காக தர்மபுரி மாவட்ட சோகத்தூர் ஊராட்சி ரெட்டிஅள்ளி கிராமத்தில், கோல்டன் நகர் தொடங்கி, எம்.ஜி.ஆர். நகர் வரையில் 33 ஏக்கர் நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இன்றுவரை பயனாளிகளுக்கு நில வரையறையை ஒப்படைக்காமல் அலட்சியம் செய்துவந்தது நிர்வாகம். இதுதொடர்பான வழக்கில், நிலத்தை மூன்றே மாதத்தில் பயனாளிகளிடம் ஒப்படைக்கு
சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளைக் கடந்தும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் பெரும் பாலானோர் நிலமற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்த நிலையைப் போக்க போராட்டங்கள் தொடரும் நிலையில், கொடுத்த பட்டாவையே அரசு பிடுங்கிக்கொள்ளும் கொடுமை அரங்கேறியுள்ளது.
1995ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் 1,100 பேருக்கு, வீடுகட்டி குடியிருப்பதற்காக தர்மபுரி மாவட்ட சோகத்தூர் ஊராட்சி ரெட்டிஅள்ளி கிராமத்தில், கோல்டன் நகர் தொடங்கி, எம்.ஜி.ஆர். நகர் வரையில் 33 ஏக்கர் நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இன்றுவரை பயனாளிகளுக்கு நில வரையறையை ஒப்படைக்காமல் அலட்சியம் செய்துவந்தது நிர்வாகம். இதுதொடர்பான வழக்கில், நிலத்தை மூன்றே மாதத்தில் பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு 2015, பிப்ரவரியில் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதையும் மீறி, இந்த நிலத்தில் பேருந்துநிலையம் கட்டுவதற்காக பல்வேறு அடக்குமுறைகளில் ஈடுபட்டார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். தற்போது அவரது இடத்தை மிகச்சிறப்பாக நிரப்பியிருக்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் என்று புலம்புகிறார்கள்.
இந்நிலையில், கடந்த பிப்.07ந்தேதி மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்படுவதாக, சோகத்தூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதைக் கண்டு பயனாளிகள் அதிர்ந்து போயினர். மாவட்ட ஆட்சியரும் இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதைத் தவிர்த்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பாண்டியன் கூறுகையில், ""எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு அருகில் பேருந்துநிலையம் வருவதால், எங்களை மிரட்டி காலிசெய்ய வைக்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப் பையும் மதிக்க வில்லை. அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் எங்கள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுகிறார்'' என்றார் விரக்தியான குரலில்.
புதிய பேருந்துநிலையம் கட்டுவதற்காக டி.என்.சி. கும்பலுடன் எடப்பாடியும், மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் ஒப்பந்தம் போட்டுள்ளனர். மேலும், இங்கு அமையவுள்ள கடைகள், ஓட்டல்கள் என 17 ஆண்டுக்கான குத்தகையும் டி.என்.சி. கும்பலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வீட்டுமனைப் பட்டா உள்ளவர்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டித்தரும் டெண்டர் மாவட்ட ஆட்சியர் மலர்விழியின் கணவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில், தனக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கரை மட்டும் பேருந்து நிலையத்திற்காக கொடுத்திருப்பது தான், டி.என்.சி. கும்பலின் சாமர்த்தியமே. இவர்களின் ஆதாயத்திற்காக அப்பாவி மக்களை விரட்டுகிறார்கள்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மக்கள் அதிகாரம் தர்மபுரி மாவட்ட பொருளாளர் கோபிநாத், ""ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கொடுக்கணுமா? என்ற கொடூர எண்ணத்துடனே இந்த வேலையை செய்கிறார்கள். இந்த மக்களுக்கு ஒதுக்குவதாக சொல்லப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான டெண்டர் ஆட்சியரின் கணவருக்குக் கிடைக்கும். இதில் டி.என்.சி.க்கும் லாபமிருக்கிறது. அமைச்சருக்கும் கட்டிங் கிடைக்கும் என்பதால் கூட்டுமுயற்சியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய வேண்டும்'' என்றார் ஆத்திரத்துடன்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பேச மாவட்ட ஆட்சியர் மலர்விழி மறுத்துவிட்டார். அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது, ""பட்டா கொடுத்த காலத்தில் இருந்து வீடு கட்டாதவர்கள், இப்போது நிலத்தின் மதிப்பு தெரிந்ததும் ஓடிவருவது நியாயமல்ல. இவர்கள் யாரும் வீடு இல்லாதவர்கள் கிடையாது. ஒருவேளை வீடு இல்லையெனில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும். தற்போதைய முயற்சியால் சுற்றுவட்டாரத்தில் ஏழு கிராமங்களின் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். இதைக் கெடுக்கவே, சிலர் இவர்களை ஏவிவிட்டு பிரச்சனை செய்கிறார்கள். மேலும், அரசுக்கு பட்டா கொடுக்கவும், கொடுத்த பட்டாவைத் திரும்பப் பெறவும் அதிகாரம் இருக்கிறது'' என்றார்.
நிலமற்றவர்களிடம் நிலம் போய்ச்சேர முயற்சி செய்யவேண்டியது அரசின் கடமை. இங்கோ எல்லாமே தலைகீழாக நடக்கிறது.
-அ.அருண்பாண்டியன்