மிழகத்தில் கொரோனா தாக்குதல் ஆரம்பித்த நேரத்தில், முதல்வர் எடப்பாடிக்கு தனது பலத்தைக் காட்டும் விதமாக, சமுதாயரீதியில் சடுகுடு ஆடிப் பார்த்தார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையென்றாலும், எடப்பாடியே சற்று மிரண்டுபோய், தற்காப்புக் காய்களை நகர்த்த, அமைச்சரவையில் தன் பொசிஷனை ஸ்ட்ராங்க் ஆக்கிக்கொண்டார் விஜயபாஸ்கர்.

vv

வாழும் போதிதர்மராக தனது ஐ.டி. டீம் மூலம் மீம்ஸ் புரமோஷன் செய்த அமைச்சர், இப்போது தேர்தல் மூடுக்கு வந்துவிட்டார். மற்ற அமைச்சர்களும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதிக்குள்ளும் மாவட்டத்திற்குள்ளும் ரவுண்டு அடித்து தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை கட்சி மேலிடத்திற்கு நிரூபிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டனர். இதில் முதல்ஆளாக களத்தில் இறங்கியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.

மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து நீதிமன்றம் வரை அனைத்து முக்கிய அலுவலகங்களையும் தலைநகரான புதுக் கோட்டைக்குப் பதில் தனது தொகுதியான விராலிமலைக்கு கொண்டுசென்றார் விஜயபாஸ்கர். இந்த கொரோனா கஷ்டகாலத்தில் தனது தொகுதி மக்களை தேடித் தேடிப் போய் உதவி செய்தார். ஆனாலும் அமைச்சரின் மனசுக்குள் வெற்றி பற்றிய சந்தேகம் சம்மணமிட்டு உட்கார்ந்துள்ளது. "தேர்தல் நேரத்து அலையில் வெற்றிவாய்ப்பு திசைமாறிப் போய்விடும். எனவே மாற்று ஏற்பாடாக புதுக்கோட்டை தொகுதியையும் கணக்குப் போட்டு காய் நகர்த்தினால்தான் சரிப்படும்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார்போல.

Advertisment

விராலிமலையில் போட்டியிட்டால் தனக்கு எதிராக வலுவான போட்டியாளரை தி.மு.க. களமிறக்கும். புதுக்கோட்டை என்றால் தனக்கு நெருக்கமான தி.மு.க. புள்ளி ஒருவர்தான் நிற்பார். அவருக்கும் சேர்த்து செலவு செய்வது மாதிரி செய்து, தனது வெற்றியை எளிதாக்கலாம் என்ற புதுக்கணக்குடன் புதுக்கோட்டையைக் குறிவைத்துள்ளார்.

இதன் முன்னோட்டமாகத்தான் கடந்த வாரத்தில் தொடர்ந்து இரு நாட்கள் புதுக்கோட்டை தொகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் விழாவை நடத்தி கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

அமைச்சரின் புதுக்கணக்கு பயணத்தில் நாமும் கலந்துகொண்டோம். "புதுக்கோட்டை ஒன்றியம் ஏ.குளவாய் பட்டி கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடையைத் திறந்து வைக்க வருகை தரும் நியாயவானே வருக, நீதிமானே வருக' என்ற ரேஞ்சுக்கு விஜயபாஸ்கரை வரவேற்று ஃப்ளக்ஸ் பேனர்கள் வைத்து தூள்கிளப்பினார்கள் ர.ர.க்கள்.

Advertisment

vvv

அமைச்சர் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே கலெக்டர் உமாமகேஸ்வரியும் அரசு உயர்அதிகாரிகளும் மேடைக்கு வந்துவிட்டனர். விழா திடலுக்கு அமைச்சர் வந்திறங்கியதுமே பெண்கள் கூட்டம் பூமழை பொழிந்தது. மேடையேறியதும் நடமாடும் ரேஷன் கடைக்குப் பட்டனை அழுத்தினார், அத்துடன் அரசுவிழா முடிந்தது. அதன் பின் மாற்றுக் கட்சியிலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்தவர்களுக்கு மூன்று கரைவேட்டி, துண்டுகளை வழங்கிவிட்டு, மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் விஜயபாஸ்கர். தனக்கு புதுக்கோட்டை தொகுதி கண்டிப்பாக கிடைக்கும், இல்லேன்னா தனது விசுவாசியான ந.செ. பாஸ்கருக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜயபாஸ்கர்.

"அமைச்சர் இந்த ரூட்ல கணக்குப் போட்டா, நாங்க வேற ரூட்ல போடுவோம்' என முண்டா தட்டுகிறது விஜயபாஸ்கருக்கு எதிர் கோஷ்டி. அந்த கோஷ்டியில் முக்கியமானவர்களான கார்த்திக் தொண்டமான், ராஜசேகர், மாஜி எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் ஆகியோர் "ஓ.பி.எஸ். மூலம் சீட் வாங்கி, விஜயபாஸ்கருக்கு ஆப்பு வைக்கலாம்' என ரூட் போடுகின்றனர். இதில் கார்த்திக் தொண்டமானுக்கு சீட் கிடைக்கவில்லை யென்றால், அவரை சுயேட்சையாக களமிறக்கி, கதிகலக்கும் ஐடியாவில் ஒரு டீம் ரெடியாக இருக்கிறது.

-செம்பருத்தி