(3) வரலாறு ரொம்ப முக்கியம்! 

1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம்... தமிழ்நாடு கர்நாடகா செய்தித்தாள்களில் முக்கிய செய்தி ஒன்று மக்களை அதிரவைத்தது. "சரணடைகிறேன் வாருங்கள் என்று அழைக் கப்பட்டு கர்நாடக வனத்துறை உயரதிகாரி ஸ்ரீநிவாஸ், வீரப்பனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது தலை வீரப்பனால் எடுத்துச்செல்லப்பட்டது. ஸ்ரீநிவாஸ் அந்தப்         பகுதி மக்களின் வாழ்க்கையை சீர்திருத்த பெரும்பாடுபட்டவர். வீரப்பனுக்காக வேலை செய்தவர்கள் மீது வழக்குப் பதியாமல் அவர்கள் திருந்த வாய்ப்பளித்தவர்' -இது போலீஸ் மற்றும் அரசின் "நேரேட்டிவ்'. 1993-ல் நக்கீரன் டீம் முதன்முதலில் வீரப்பனை பேட்டி எடுத்து, போலீசிடமே இல்லாத வீரப்பனின் புகைப் படத்துடன் வெளியிட்டது. 

Advertisment


அதில், "ஸ்ரீநிவாஸ் என்ற அதிகாரி, அவளது ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த என் தங்கச்சி மாரியம்மாளை கணவனிடமிருந்து பிரித்து அழைத்து வந்து வாழவிடாமல் செய்தார். என் தங்கச்சி தற்கொலை செய்துகொள்ள அவர்தான் காரணம்; ஊர்க்காரர்கள் பலரை கைது செய்து, வழக்கும் போடாமல், வெளியேயும் விடாமல் அவர்கள் வாழ்க்கையை கெடுத்தார். என் தம்பி அர்ஜுனன் மூலமாக என்னை வரவழைத்து கொல்லலாம் என்று திட்டமிட்டார். அதனால்தான் அவர் சொன்னபடியே சரணடைவதாகச் சொல்லி வரவழைத்துக் கொன்றேன்' என்றார் வீரப்பன். இது வீரப்பன் கோணத்தின் "நேரேட்டிவ்'. 

Advertisment

ஒரு சம்பவம், கதை அல்லது வரலாறு, எந்தப் பார்வையில் அல்லது யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது என்பதுதான் "நேரேட்டிவ்'. "சிங்கம் எழுதக் கற்றுக்கொள்ளும் வரை வரலாறு வேடனின் புகழ் பாடும்' என்பது ஆப்பிரிக்க பழமொழி. அப்படித்தான் உலகின் பல வரலாறுகளும் வேடன்களாலேயே எழுதப்பட்டு வந்தன. இந்த "நேரேட்டிவ்'வை யார் கட்டுப் படுத்துகிறார்களோ அவர்கள் எதிர்காலத்தை கட்டுப்படுத்தலாம், மக்களை கட்டுப்படுத்தலாம் என்பது "வார் ரூம்' அரசியல் அடிப்படை விதிகளில் ஒன்று. அந்தக் காலத்தில் இருந்தே வரலாறு வலியவர்களின் பார்வையில் எழுதப்பட்டு நேரேட்டிவ்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், நவீன காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் படிப்படியாக நேரேட்டிவ்கள் உருவாக்கப்பட்டதும், அவற்றை ஆழமாக, அகலமாகப் பரப்ப இணையம், ஊடகம் என அனைத்தும் பயன்படுத்தப்பட்டதும் 2010க்குப் பிறகுதான்.

2014 தேர்தலை முன்னிட்டு முதலில் "பா.ஜ.க. என்றால் வளர்ச்சி அரசியல், காங்கிரஸ் என்றால் வம்ச அரசியல்' என்ற எளிய நேரேட்டிவ்வைத்தான் உருவாக்கியது மோடி -பா.ஜ.க. டீம். அதற்கு முன்பே வைக்கப்பட்ட ஒரு முழக்கம், குற்றச்சாட்டுதான் இது. அதை மெல்ல நாடு முழுவதும் பேசவைத்து, பின்னர் அதற்கு அடுத்தபடிக்குச் சென்றது அந்த டீம். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால்தான் இந்தியா அடைய வேண்டிய வளர்ச்சியை அடையாமல்போனது என்று கருத்துரு வாக்கம் செய்ய ஆரம்பித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய சீசன் ஒன்றில் "எல்லாம் இந்த பரணி பயலாலதாங்கய்யா' என்று கஞ்சாகருப்பு சொல்லிக்கொண்டேயிருப்பது போல எல்லாவற்றுக்கும் நேருவை இழுத்தார்கள். இன்னொரு கருத்துருவாக்கமும் நடந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா தனது பாரம்பரிய பெருமையை இழந்திருந்தது. அது பா.ஜ.க. ஆட்சியில்தான் மீட்கப்படுகிறது என்பது தான் அது. இப்படிப் பட்ட கருத்துருவாக்கங் களுக்கு ஒரு செயல்முறை இருக்கிறது. யாராவது ஒருவரால் ஒரு பேட்டி யிலோ, செய்தியாளர் சந்திப்பிலோ சொல்லப் படும். அது சமூக ஊடகங்களில் ஏற் கனவே இவர்களுக் காகவே உருவாக்கப் பட்டுள்ள பல அரசியல் பக்கங்களில் விவாதிக்கப் படும். ஆயிரக்கணக்கான போலி அல்லது ஆதரவு கணக்குகள் அந்தக் கருத்து களுக்கு லைக் போடும், ஷேர் செய்யும். அறிவாளிகள், சிந்தனையாளர்கள் என்ற அடையாளம் பெற்றவர்கள், இதற்கு சார்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவா திப்பார்கள். இப்படி தொடர்ந்து பார்க்கும், கேட்கும் ஒருவரை "இதுதான் உண்மையோ' என்றே யோசிக்க வைத்துவிடும்.    

Advertisment

"நேரேட்டிவ்' கொஞ்சம் வேலை செய்துவிட்டால் அடுத்தகட்டத்துக்குச் செல்வார்கள். அதில் ஒரு செயல்பாடு பெயர்களை மாற்றுதல். அலகாபாத், ப்ரயாக்ராஜாக மாறும். உண்மையில் இந்தப் பெயர் அரசியல், பெரிய அரசியல். இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அரசியல். 2003ல் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது ஈராக்கில் அமெரிக்க நடத்திய ராணுவ நடவடிக்கைகளை பிரான்ஸ் எதிர்த்தது. அதை கண்டிக் கும் வகையில் அமெரிக்கா என்ன செய்தது தெரியுமா? ஜார்ஜ் புஷ் அங்கம் வகித்த குடியரசுக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் பெயர் அரசியலை கையிலெடுத்தனர். அதன் காரணமாக, பல உணவகங்களில் "ஃபிரென்ச் ஃப்ரைஸ்' எனப்படும் உருளைக்கிழங்கு உணவின் பெயரில் "ஃபிரென்ச்' நீக்கப்பட்டு "ஃப்ரீடம் ஃப்ரைஸ்' என்றானது. பயங்கரமான எதிர்ப்பு தானே? இப்போது ட்ரம்ப்பும் பெயர் மாற்றும் படலத்தில் இருக்கிறார். பல பெயர்கள் மாறியிருக்கின்றன. பொதுவாகவே, உண்மையான முக்கியத்துவத்துடன் கவனிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போது மக்களின் உணர்வை தூண்டிவிடுவதில்தான் இவர்கள் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த "நேரேட்டிவ்'களின் ஸ்பெஷலே ஓரளவேனும் உண்மையும், மக்களின் உணர்வும் இருந்தால்தான் அவை நிலைக்கும் என்பதுதான்.

சரி, தமிழ்நாட்டுக் கட்சிகள் நேரேட்டிவ் செட் செய்தது இல்லையா? 

ஏன் இல்லை? "அம்மா இட்லி சாப்பிட்டார்' என்பதே நாம் கண்ட அரியதொரு நேரேட்டிவ்தான். "ஜெயலலிதாவுக்கு எதுவும் தெரியாது, சசிகலாதான் அவரை தவறாக வழி நடத்தினார். ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல்கள், முறைகேடு களுக்கு சசிகலாதான் காரணம்' என்பதும் ஒரு தரப்பு உரு வாக்கிய நேரேட்டிவ்தான். "நாடகக் காதல்' என்ற கருத்துரு வாக்கம் பா.ம.க.வின் ஒரு நேரேட்டிவ்தான். நாம் தமிழர் கட்சி உருவாக்க முயலும் நேரேட்டிவ் பெரியாருக்கு எதிரானது. 

warroom1

இந்தியா விடுதலை பெற்ற சில ஆண்டுகளிலிருந்தே ஒன்றிய அரசால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் என்ற கருத்தும் அரசியலும் இருக்கிறது. அதன் வெற்றிதான் மாநிலக் கட்சிகளின் எழுச்சி. இன்றுவரை வரி வருவாய் பங்கீடு, ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தி வைக்கப்படுவது, நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை மறுசீரமைப்பு என பல உரிமைகள் பறிக்கப்படும் வாய்ப்பு இருந்துகொண்டேயிருக்கின்றது. 

நவீன காலத்தில் முறையாக, அரசியலுக்காக, எதிர் காலத்துக்கும் பயன்படும் வகையில் தி.மு.க. உருவாக்கியுள்ள வலிமையான நேரேட்டிவ் "திராவிட மாடல்' என்பது. "ஒன்றிய அரசு' என்ற சொல்லாடலில் இருந்து "இந்தி தெரியாது போடா' என்ற முழக்கம்வரை எல்லாம் இதன் அங்கம். மேலே சொன்னபடி உண்மையும், மக்களின் உணர்வும் இருந்தால் அந்த நேரேட்டிவ் நிலைக்கும். நீங்களே தெரிந்துகொள்ளலாம்.                                         

கடந்த பகுதியில், செய்தி ஊடக உலகில் "நேரேட்டிவ்' என்பது கெட்டவார்த்தையாக இருக்கவேண்டுமென்று கூறியிருந்தேன். ஏனெனில் நடந்த சம்பவத்தில் உண்மை ஒன்றுதான் இருக்க வேண்டும். அதை நேர்மையாகப் பதிவுசெய்ய வேண்டும். யூ-டியூப் உலகில் பலரும் பல கட்சிகள் சார்பாக ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து  பேசும் பேச்சாளர்கள் ஆகிவிட்டார்கள். பலர் ஒன்றுகூடி பேட்டிகள் மூலமும், சமூக ஊடக பதிவுகள் மூலமும் குறிப்பிட்ட ஒருவருக்கு சாதகமாக நேரேட்டிவ்வை உருவாக்குவார்கள். நீங்கள் உற்றுக் கவனித்தால் சில உண்மைகள் புலப்படும். 

முந்தைய மாநாட்டில், "மாநாட்டில் தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை, தொண்டர்கள் மயக்கம் போட்டனர்! -பெரும் அநீதி, அலட்சியம்!' என்று வந்த செய்தி, அடுத்த மாநாட்டில் "மாநாட்டு வெயிலில் வெள்ளமென திரண்ட தொண்டர்களில் சிலர் வெயில் தாளாமல் மயங்கினர். அவர்களை பார்க்க பதறிக்கொண்டு மருத்துவமனை சென்றார் செயலாளர். "என்ன மனசுப்பா' என்று மாறுகிறதென்றால் நேரேட்டிவ் மாறுகிறதென்று பொருள், வார் ரூம் வேலை செய்கிறதென்று பொருள். 

(தொடரும்)