"ஹலோ தலைவரே, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசின் நிவாரண அறிவிப்புகள், ஓரளவு ஆறுதல் ஒத்தடத்தைத் தருவதாக அமைந்திருக்கிறது.''”
"ஆமாம்பா, எதிர்பாராத பாதிப்புகளும் இழப்புகளும் மக்களை நிலைகுலைய வைத்திருக் கும் நிலையில், அவர்களுக்கு நிவாரண உதவிகள் மூலம் தெம்பைத் தர முயன்றிருக்கிறது அரசு.''”
"உண்மைதாங்க தலைவரே, என்னதான் பாதுகாப்புக்கான போர்க்கால நடவடிக்கைகளை எடுத்தபோதும், மிகக்கடுமையாக மழை, வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது முதல்வர் ஸ்டாலினை ரொம்பவே கவலைப்பட வைத்துவிட்டதாம். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களையும் மழை வெள்ளம் பெரிதும் மிதக்க வைத்துத் திகைக்க வைத்துவிட்டது. இந்த நிலையில் முதல்வரும் அமைச்சர்களும் களத்தில் இறங்கிய அளவிற்குக் கூட ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும், கவுன்சிலர்களும் இறங்கவில்லை என்கிற அதிருப்தி மக்களிடம் பெரிய அளவில் எழுந்திருக்கிறது. இது குறித்த உளவுத்துறையின் ரிப்போர்ட்டைப் பார்த்த ஸ்டாலின், மேலும் கவலை அடைந்தாராம்.''”
"ம்...''”
"அதனால்தான் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஆலோசித்துவிட்டு, நிவாரண அறிவிப்புகளை அவர் வெளியிட்டி ருக்கிறார். 2015-ல் இதேபோல் கடும் வெள் ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டபோது, அப்போதைய ஜெ.’அரசு, ரேசன்கார்டு களுக்குத் தலா 5 ஆயிரம் வீதம் கொடுத்தது. அதனால், அதைவிடக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று தான், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக் குத் தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதேபோல் இழப்பீட்டிற்கு ஆளான பயிர்களுக்கும், கால் நடைகளுக்கும் மீன்பிடிப் படகுகளுக்கும், வலை களுக்கும் கூட நிவாரணத் தொகை அறிவிக்கப் பட்டிருக்கிறது. வீடுகளை இழந்தவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டப்படுவதோடு, துயரத்தை ஏற்படுத்திய உயிரிழப்புகளுக்கும் நிதி உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது.''”
"கடும் மழை வெள்ளப் பாதிப்பை சந்தித் திருக்கும் தமிழகத்திடம், ஒன்றிய அரசு ஓர வஞ்சனை காட்டுவதாக அதிருப்திக் குரல்கள் எழுந்திருக்கிறதே?''”
"மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூபாய் 5,060 கோடியை ஒதுக்கும் படி ஒன்றிய அரசிடம், தமிழக அரசு வேண்டு கோள் வைத்திருந்த நிலையில், அதிகம் பாதிப்பிற்கு உள்ளான தமிழகத்துக்கு 450 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கிய ஒன்றிய அரசு, இந்த அளவிற்குப் பாதிப்பு இல்லாத ஆந்திராவுக்கு 500 கோடியை ஒதுக்கி, அரசியல் காழ்ப்பைக் காட்டியிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மழைப் பாதிப்புகளை பார்வையிட வந்த ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் கிடம் தமிழக அரசுத் தரப்பு, இங்குள்ள நிலையை எடுத்துச்சொல்ல, அவர் டெல்லியிடம் கலந்து பேசிவிட்டு, பேரிடர் நிதியில் இருந்து 510 கோடியை ஒதுக்கித் தந்திருக்கிறார். எனினும் ஒன்றிய அரசின் நிதி போதாது என்கிற பரிதவிப்பே இங்கு இருக்கிறது.''
"வெள்ள நிவாரண நிகழ்ச்சி மூலம் அ.தி.மு.க. உயிர்ப்பலி வாங்கிவிட்டதாக வட சென்னை மக்கள் குற்றம்சாட்டுகிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை கொருக்குப் பேட்டை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் எடப்பாடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை அ.தி.மு.க. மா.செ.வான ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். 1500 பேருக்கு உதவிப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்த அவர், மாஸ் காட்டுவதற்காக 5 ஆயிரம் பேருக்கு மேல் அங்கே கூட்டத்தைத் திரட்டியிருந் தார். அதனால் நிவாரணப் பொருட்கள் தங்களுக் குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று கூட்டத் தினர் முண்டியடிக்க ஆரம்பித்தனர். இந்தக் கூட் டத்தில், துப்புரவுத் தொழிலாளி வேலு என் பவரின் மகளான யுவஸ்ரீ என்கிற 9ஆம் வகுப்பு மாணவி சிக்கிக்கொண்டார். நெரிசலில் நசுங்கி, மிதிபட்ட அவர், வாயில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்தார். இதைக்கண்டு கொதித்துப்போன வடசென்னைவாசிகள், அ.தி.மு.க. நிவாரணப் படு கொலை செய்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் இதுகுறித்து அ.தி.மு.க. தரப்பு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை தொடங்கிய நிலையில், கவனக்குறைவாகக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அ.தி.மு.க. ராஜேஷ், அமைச்சர் ஒருவர் மூலம் தப்பிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.''”
"இந்த மழை வெள்ள நேரத்திலும் காங்கிரஸுக்குள் புகார்கள் வெடித்திருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தின் மழை வெள்ளப் பாதிப்புகளை, தொலைக்காட்சிகளில் பார்த்து கவலையடைந்த ராகுல்காந்தி, நவீன வசதி கள் கொண்ட சென்னை மாநகரிலேயே தண்ணீர் தேங்கியது எப்படி? என்று கட்சி எம்.பி.க்களிடம் ஆதங்கத்தோடு விசாரித்திருக்கிறார். அதற்கு பதில் சொன்ன எம்.பி.க்கள், சென்னையில் இருந்த ஏரிகள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்பு களாக மாறிவிட்டன. நீர் வடிகால் பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டிடங்களைக் கட்டிவிட்டனர். அதனால்தான் சென்னையே தண்ணீரில் தெப்ப மாய் மிதந்தது என்று விளக்கிச் சொன்னதோடு, ’இந்தப் புகாரில் நம்ம கட்சி எம்.எல்.ஏ.வான ரூபி மனோகரனும் சிக்கி இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் இறங்கியிருக்கும் அவர், நீர்பிடிப்புப் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளை ஏகத்துக்கும் கட்டி, மக்களிடம் விற்றிருக்கிறார். அதனால் அவராலும் நமக்குக் கெட்ட பெயர்’ என்று சந்தடி சாக்கில், ரூபியையும் போட்டுக் கொடுத்தார்களாம்.''”
"இந்தப் பேரிடரை வைத்து காசு பார்த்ததாகவும் காங்கிரஸ் தரப்பின் மீது புகார் கிளம்பியிருக்கே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, இந்த மழை வெள்ளத்தால் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய வேண்டும் எனக் கூறி, பிரபல தொழில் நிறுவனங்களிடமும், வியாபாரி களிடமும் அரசியல் கட்சியினர் சிலர் பணமும் பொருளுமாக அதிக அளவுக்கு வசூலித்திருக் கிறார்கள். குறிப்பாக, சென்னையில் உள்ள காங் கிரஸ் கவுன்சிலர்கள் பலரும் இப்படிப் பட்ட வசூலில் ஜரூராக இறங்கினார் களாம். பொருளாக வந்ததை நிவா ரணத்துக்கு அனுப்பிவிட்டு, வசூலான பணத்தை எல்லாம் அவர்கள் தங்கள் பையில் வைத் துக் கொண்டார்களாம். இது குறித்த புகார்களும் காங்கிரஸின் டெல்லித் தலைமைக்குப் போயிருக் கிறது. அதேபோல் வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல். ஏ.வான அசன்முகமது, மழைவெள்ள நேரத்தில் தலையையே காட்டாமல் இருந்துவிட்டு, தண்ணீர் வடிந்த நிலையில் வெளியே வர, அவரைத் தொகுதி மக்கள் முற்றுகையிட்டு, கொதிப்புடன் தாக்க முனைந்தனர். இதுவும் காங்கிரஸுக்கு மைனஸ் பாயிண்ட்டாக ஆகியிருக்கிறது. இதுகுறித்த புகாரும் டெல்லிக்குப் பறந்திருக்கிறதாம்.''”
"தென்னிந்திய மாநிலங்களின் மீது பா.ஜ.க.வுக்கு திடீரென்று கரிசனப் பார்வை ஏற்பட்டிருக்கிறதே?''”
"ஐந்து மாநிலத் தேர்தல் நடந்துமுடிந் திருக்கும் நிலையில், கொஞ்சம் தெம்பாகியிருக்கும் பா.ஜ.க., தென்னிந்தியாவில் இருக்கும் சின்னச் சின்ன அரசியல் கட்சிகளையும் கூட தங்கள் பக்கம் வளைக்கும் திட்டத்தில் இருக்கிறது. இதற்காக ராமர்கோயில் திறப்பு விழாவை மையமாக வைத்து அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தெலுங்கானாவில் இருந்து சந்திரசேகர் ராவ், கர்நாடகாவில் இருந்து குமாரசாமி, தமிழகத்தில் இருந்து எடப்பாடி உள்ளிட்டவர் களை ராமர்கோயில் திறப்புவிழாவிற்கு அழைத்து, அவர்களைத் தங்களின் அன்புப் பிடியில் வைத்துக்கொள்வதுதான் பா.ஜ.க.வின் சிறப்பு அஜெண்டாவாம். இந்த நிலையில், தெலுங்கானா வில் பா.ஜ.க.வை எதிர்த்துப்போட்டியிட்ட சந்திரசேகர்ராவ், உடல்நலம் சரியில்லாத நிலையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததைக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி, கரிசனம் வழிய அவரைத் தொடர்புகொண்டு உடல் நலம் விசாரித்தாராம். இதையெல்லாம் பார்த்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ’இந்தியா’, பா.ஜ.க.வின் இந்தப் பாச்சாவெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் பலிக்காது என்கிறது.''”
"கவர்னர் ஆர்.என்.ரவியின் நியமன உத்தரவு ஒன்று உயர்கல்வித் துறையில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்குதே?''”
"சர்ச்சை நாயகரான கவர்னர் ரவி, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பெலிக்ஸ் என்பவரை நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த அறிவிப்பு, உயர்கல்வித் துறையில் குழப்பத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. காரணம், பல்கலைக் கழகங்களின் வேந்தராக இனி கவர்னருக்கு பதில் முதல்வர்தான் இருப்பார் என்று, தமிழக அரசு ஒரு சட்ட மசோதாவை இரண்டாம் முறையாகவும் நிறைவேற்றி அண்மையில்தான் கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிலையில் கவர்னர், இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப்படி தன்னிச்சையாக ஒரு நியமன உத்தரவைப் பிறப்பித்து சலசலப்பையும், சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறார். அதேசமயம், கவர்னரின் இந்த நியமனத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் இதுவரை எதிர்க்கவுமில்லை; மறுக்கவும் இல்லை. இது உயர்கல்வித் துறையை மேலும் குழப்பி வருகிறதாம்.''”
"நிவாரணப் பணிகளில் பிரபல நடிகர்களின் பங்களிப்பு அதிகம் இல்லாத நிலையில் நடிகர் விஜய் தரப்பு மட்டும் வட சென்னையில் சபாஷ் வாங்கியிருக்குதே?''”
"அரசுடன் இணைந்துதான் வெள்ள நிவாரண பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால் இந்த முறை, ஒரு சில இடங்களைத் தவிர, தன்னார்வலர்கள் தரப்பில் வேகத்தைப் பார்க்க முடியவில்லை. எனினும், அரசின் அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் முடிந்த அளவுக்கு மக்களுக்கான உதவிகளை செய்யுங்கள் என்று நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தினருக்கு கட்டளை இட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இவர்களிடம் வடசென்னையில் மட்டும் சற்று விறுவிறுப்பைப் பார்க்க முடிந்தது. எர்ணாவூரில் எங்கிருந்தோ வெளியான ரசாயனக் கழிவுகள், தெருக்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்தன. இதில் கர்ப்பிணிப் பெண்மணி ஒருவரும், முதியவர்கள் சிலரும் சிக்கிக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஓடிச்சென்று, அவர்களை மீட்டு, ஏரியாவாசிகளிடம் பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார்கள்.''”
"இந்த நேரத்தில் மழை வெள்ளம் தொடர்பான குளறுபடிகளுக்குக் காரணமானவர் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் மீது விமர்சனச் சூறாவளி கிளம்பியிருக்கிறதே?''”
"மழை வெள்ள நிவாரண விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருக்கும் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். மீது பலமாகக் குற்றச்சாட்டு பல தரப்பிலிருந்தும் எழுந்திருக்கிறது. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை, அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த இதே கார்த்திகேயன்தான் கையாண்டார். அந்தத் திட்டத்தில் நடந்த மெஹா ஊழல் விவகாரத்தால் தான் சென்னையின் மையப்பகுதியான தி.நகர் ஏரியாவில் தண்ணீர் அதிகம் தேங்கியதாக அதிகாரிகள் தரப்பே குற்றச்சாட்டை வைக்கிறது. மேலும், சென்னையின் வடிகால்களைப் புனரமைப்பது குறித்த திருப்புகழ் கமிட்டி அப்போது கொடுத்த அறிக்கையையும் மறைத்து, அதைச் செயல்படவிடாமல் இவர் தடுத்ததால்தான் இந்தமுறை சென்னை தண்ணீர் கண்டத்தில் கடுமையாகச் சிக்கியது என்றும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட இவர்தான் இந்த தி.மு.க. ஆட்சியிலும், மழை நீர் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 4000 கோடி ரூபாயையும் கையாண்டிருக் கிறார். இதிலும் குளறுபடிகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், இந்தத் திட்டம் குறித்துதான் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுத்து வருகின்றன.''”
"சென்னை மாநகரக் காவல்துறை மீது ஆளும் தரப்புக்கே அதிருப்தி என்கிறார்களே?''”
"சென்னையில் மழை வெள்ளம் தொடர்பான பிரச்சினை களை காவல்துறை சரியாக நிர் வகிக்கவில்லை என்கிற அதிருப்தி தற்போது ஆளும் தரப்பிலேயே எழுந்திருக்கிறது. காரணம் சென்னை யின் பல பகுதிகளிலும் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்கள், மறிய லில் தீவிரமாகக் குதித்தனர். மழை நீரைப் பார்வையிடச் சென்ற அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் ஆவேச மாக முற்றுகையிட்டுத் திகைக்க வைத்தனர். இந்தப் போராட்டங் களை எல்லாம் அங்கங்கே இருக்கும் அ.தி.மு.க.வினர்தான் ஒருங் கிணைத்து, அரசுத் தரப்புக்கு ஷாக் கொடுத்தனர். ஆனால் இதுகுறித்து முன்கூட்டியே தெரிந்துகொண்டு நிலைமையை சமாளிக்கும் முயற்சியில், காவல்துறை ஈடுபட வில்லை என்பதுதான், அதன் மீது அரசுக்கு எழுந்திருக்கும் அதிருப்தி யாகும். இதையெல்லாம் கூர்ந்து கவனித்திருக்க வேண்டிய சென்னை மாநகரக் காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவு டி.சி.யான அரவிந்த், இந்த விசயத்தில் அதிக அக்கறை காட்டாததால்தான் இத்தனை பிரச்சினை என்கிற டாக், காவல்துறையிலேயே இருக்கிறது.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், தலைமை செயலக பணியாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்குவார்கள்னு அறிவித்தார். ஆனால், இவர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டாமல் தன்னிச்சையாக இதை அறிவித்துவிட்டார் என்று, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த மழை வெள்ளத்தில் தலைமைச் செயலக அரசுப் பணி யாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்ப தால், அவர்களால் எப்படி நிதி வழங்க முடியும் என்ற குரலும் இதற்கிடையே எழுந்திருக்கிறது. இப்படியாக நிவாரண நிதி வழங்குவதில், தலைமைச் செயலக பணியாளர்களிடம் இருவேறு கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.''
____________
இறுதிச் சுற்று!
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத சம்பளம் மற்றும் கட்சி நிதியுடன் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை 11-ந் தேதி திங்கள் கிழமை காலை தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் வழங்கினார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ. உடன் தலைமை நிலைய செயலாளர் துரை.வையாபுரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, டிசம்பர் 11, திங்களன்று தீர்ப்பளித்தனர். நாடே எதிர்பார்த்த பரபரப்பான இந்த தீர்ப்பில், "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டம் தற்காலிகமானதே, அச்சட்டத்தை நீக்கியது செல்லும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டுமென்றும், அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தவேண்டும்' என்று காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
-கீரன்