30 வருடங்களுக்கு முன்பாகவே இலங்கையிலிருந்து அகதியாக வந்த தர்மராஜ்- சகுந்தலா தம்பதியர் நெல்லையை ஒட்டியுள்ள சுத்தமல்லி பகுதி சத்யா நகரில் குடியேறினர். கணவர் தர்மராஜூடன் கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது மகன்களான பிரசாந்த் மற்றும் பிரதீப் இருவருடன் வசித்து வரும் சகுந்தலா, கட்டுமானக் கூலி வேலைக்குப் போய் வருபவர். மகன்களிருவரும் பெயிண் டிங் தொழிலில் இருப்பவர்கள்.
இந்த நிலையில் கொரோனா லாக்டவுண் நேரத்தின் போது பிரதீப் தன் எதிர் வீட்டிலுள்ள பெண்ணுடன் காதலை வளர்த்திருக்கிறார். பெண் வீட்டாரின் புகாரின் பேரில் பாலியல் தொந்தரவு செய்ததாகப் பிரதீப் போலீசால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார். உள்ளே சென்றவர் கடந்த மாதம் வெளியே வந்திருக்கிறார்.
இந்தச் சூழலில் கடந்த 03-11-2020 அன்று சுத்தமல்லிப் பகுதியிலுள்ள ஓய்வு பெற்ற ஆர்மிக்காரரின் வீட்டை உடைத்து 13 பவுன் நகை, மற்றும் லேப்டேப் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், சுத்த மல்லிப் போலீசார் அன்புராஜ், அருள்ராஜ் இருவரையும் விசாரணைக்காகக் கொண்டுவந்திருக்கிறார்கள். விசாரணையில் இவர்களோடு பிரதீப்புக்கும் தொடர்பிருப்பதாகச் சொல்லி அவனைப் போலீசார் வளைக்க முற்படுகிறார்கள்.
சகுந்தலாவின் வீட்டுக்கு வந்த போலீசார், பிரதீப்பை விசாரணைக்காகப் இழுத்துச் செல்ல முற்பட்டபோது "தன் மகனுக்கும் திருட்டுக்கும் சம்பந்தமில்லை' என்று சொல்லி தாய் தடுத்தும், அவனைப் போலீசார் இழுத் துக்கொண்டு போயிருக்கிறார்கள்.
விசாரணைக்குப் பின்பு நவம்பர் 24-ந் தேதி நடு இரவு சகுந்தலாவின் வீட் டிற்கு இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா தலைமையில் வந்த போலீசார், வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும், லேப்டாப்பும் இருக்கின்றன. சோதனை போட வேண்டுமென்று சொன்ன வர்கள், அங்கிருந்த பிரதீப்பின் அண்ணன் பிரசாந்தை விசாரணைக் காக இழுத்தபோது கதறி அழுதுள்ளார் தாய் சகுந்தலா.
"ஐயா எம்புள்ளைகளுக்குத் தொடர்பில் லைய்யா... விட்டுருங்கய்யா' என்று அவர்களின் காலில் விழுந்து கும்பிட்டு அழுதிருக்கிறார். அப்போது தங்களைத் தடுத்த சகுந்தலாவைப் போலீசார் தாக்கியுள்ளனர். அதனைத் தடுக்க வந்த அவரது தம்பி பாலாவை நெட்டித்தள்ளிய போலீசார், பிரசாந்தை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு வர முயற்சித்த போது அவமானத்தால் நொறுங்கிப் போன சகுந்தலா அடுத்த நொடியில் வீட்டிலுள்ள மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றித் தீ வைத்திருக்கிறார்.
நடு இரவின்போது தாயின் உடலெங்கும் பற்றிய நெருப்பையும் அவரது கதறலையும் கேட்டுப் பதறிய பிரசாந்த், காப்பாற்றவதற்காக போலீசின் பிடியிலிருந்து விடுபடத் திமிறிய போது அவரை விடாமல் அமுக்கிக் கொண்டது போலீஸ். அதே நேரத்தில் சகுந்தலா தீயில் எரிவதைத் தடுத்து அவரைக் காப்பாற்றக் கூட முயற்சி செய்யவில்லையாம் இன்ஸ் குமாரி சித்ரா தலைமையிலான போலீஸார்.
இத்தனைக்குப் பிறகும் பிரசாந்த்தை போலீசார் இழுத்துச் சென்ற ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக உடம்பு முழுவதும் தீயில் வெந்து அங்கேயே கரிக்கட்டையாகியிருக்கிறார் சகுந்தலா.
பொழுது விடிந்தபோது பெண் ஒருவர் பலியான சம்பவம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. தகவலறிந்து காவல்நிலையம் வந்த மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் விசாரணையை மேற்கொண்டார்.
சகுந்தலா தீ வைத்துக்கொண்டு பலியான சம்பவம் சத்யா நகரையே உலுக்கியெடுத்த நேரத்தில்... விடிந்த பிறகே சகுந்தலாவின் வீடு வந்த போலீஸ், சடலமான அவரது உடலைப் போஸ்ட்மார்ட்டத்திற்காக பாளை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஸ்பாட்டிலிருந்த சகுந்தலாவின் தம்பி பாலாவிடம் பேசியபோது. ""பிரதீப்பிற்கும் இந்த கேசுக்கும் சம்பந்தமில்லை. எந்த வம்புக்கும் போகாதவன். அந்தப் பெண்ணும் பிரதீப்பும் லவ் பண்ணவுகதாம், அவுக வீட்டுக்குத் தெரிஞ்சி சமாதானமாயிட்டாக. அதுலயிருந்து எந்தக் கேசுனாலும், பிரதீப்ப புடுச்சிட்டுப் போறதிலயே குறியாயிருந்தாக. போலீசு வந்து என்ன எடுத்தாங்கன்னு தெரியல. ஆனா மாரியப்பன் எஸ்.ஐ.தான் எங்க அக்காவ அடிச்சது. அவமானம் தாங்க மாட்டாம எங்கக்கா கதறுச்சு. பாத்ரூம் போயிட்டு வர்ற துக்குள்ள மண்ணெண்ணய ஊத்தி தீ வைச்சுக்கிட்டு இறந்திட்டாக'' என்றார் வேத னையோடு.
இவர்களின் உறவினரான சின்னமாரியோ. ""ஆ... ஊன்னா அவன அடிக்கிறாக. இழுத் திட்டுப் போயி கேஸ் போடு றாக. விசாரிச்சு உண்மைன்னா அடிக்கிறதுதான ஞாயம். விசாரிக்காம என்ன அடி. அவம் லவ்பண்ண சம்பவத்திலிருந்தே, அந்த பொண்ணு வீட்டார் பேச்சக் கேட்டு கிட்டு நடக்குது போலீசு. பிரதீப்போட பைக்க, செல்ல புடுங்குறது, கேஸ் போடுறது மாயிருக்காக'' என்றார் ஆவேசமாக.
இது குறித்து நாம் மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணனிடம் கேட்டதில், ""கொள்ளைப் பொருளில் பைக் வாங்கியிருக்கிறான். 13 பவுன் நகையும் ஒரு லேப்டாப்பும் திருடு போயிருக் கிறது. லேப்டாப்பை ரெக்கவரி செய்ய வீட்டுக்குப் போலீசார் போயிருக்கிறார்கள். அவர்களது தாயே லேப்டாப்பை எடுத்துக் கொடுத்திருக்கிறார். மனதொடிந்து வீட்டினுள்ளே போனவள், மன அழுத்தத்தில் தீவைத்துக் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்'' என்றார் எஸ்.பி.
பிரதீப் இப்படிக் குறிவைக்கப்படுவதற்கு காரணம், ஸ்டேஷன் போலீஸ் ஒருவருக்கும் பிரதீப்பிற்குமிடையேயுள்ள தனிப்பட்ட பகையின் உள்நோக்கம் என்ற தகவலும் றெக்கை கட்டுகிறது.
உண்மை என்ன என்பது விசாரணையில் தெரிந்துவிடும். பறிபோன உயிர் திரும்பி வருமா?
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்