இட்லி விற்றால் குற்றம்! கஞ்சா விற்பனை அமோகம்!
"பூட்டு' என்றதுமே நினைவுக்கு வந்துவிடும் திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தங்களின் வீடுகளை உள்பக்கமாக பூட்டுப்போட்ட நேரத்தில் வலம் வந்தோம்…-ஹி ஹி மிட்நைட்டில்!
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள டீக்கடையில் நின்று சூடான டீயை வாங்கியபடி பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று, கல்லூரி மாணவர்களின் கூட்டம் ஓரிடத்தை நோக்கி டூவீலரில் பறக்கிறது. ஒரு சிறிய தெருவுக்குள் நுழைகிறார்கள். திடீரென்று வந்த அந்த இளைஞர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எதையோ திணித்துவிட்டு கெத்தாக சென்றதை பார்க்கமுடிந்தது. இளைஞர்கள் இந்த நேரத்தில் அங்கு சென்றது கஞ்சா வாங்குவதற்குத்தான் என்பது தெரியவந்தது. ‘
வீரம்மாள், ஜீவான்னு ரெண்டு கஞ்சா வியாபாரிகள் இருக்காங்க. இவங்கதான் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கஞ்சா சப்ளை பண்றது. இதனால, ஸ்கூல் பசங்ககூட கெட்டுப்போறாங்க. போதைத் தடுப்புப்பிரிவுக்கு போன் பண்ணி சொன்னா… கஞ்சா வியாபாரிகளை புடிக்கும்போது நாமளும் கூட இருக்கணுமாம். இன்ஃபர்மேஷன்தான் தரமுடியும். நாமளும் கூட இருந்தா ஜாமீன்ல வர்ற கஞ்சா வியாபாரி சும்மா இருப்பானா? அதனாலேயே, பொதுமக்களும் போதைத் தடுப்புப்பிரிவுக்கு தகவல் கொடுக்க பயப்படுறாங்க'' என்று புலம்புகிறார் பக்கத்தில் கடை வைத்திருப்பவர்.
அப்படியே, சிறுமலை செட் வழியாக மாணவியர் விடுதிப் பக்கம் வந்தபோது அருகிலுள்ள டாஸ்மாக்கிலிருந்து ப்ளாக்கில் சரக்கு வாங்கிக்கொண்டு வந்து குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“இந்த மாணவியர் விடுதியில வார்டன்கள் இல்லாததால பொம்பள பிள்ளைங்களுக்கு பாதுகாப்பே இல்ல. ஹாஸ்டலை ஒட்டியே மாணிக்கங்குறவன் ப்ளாக்குல சரக்கு விற்குறான். எல்லாரும் குடிச்சிட்டு இங்க வந்து கலாட்டா பண்றானுங்க. போதாக்குறைக்கு, பொம்பள புள்ளைங்கள பார்க்குறதுக்கு பாய்ஃப்ரண்டுங்க வந்துடுறானுங்க. இதனால, எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு யோசிக்கவேண்டியிருக்கு''’ என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.
அங்கிருந்து, பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்தோம். ப்ளாட்ஃபார்மில் விற்கப்பட்ட ஆவி பறக்கும் இட்லியை வாங்கி சாப்பிட ஆரம்பித்தபோது, "சீக்கிரம் சாப்பிடுப்பா' என்ற குரல் வந்தது. "இவ்ளோ சூடா இருக்கிற இட்லியை எப்படிங்க சீக்கிரமா சாப்பிடமுடியும்?' என்று நாம் கேட்டால்…""போலீஸ் வந்துடும் சார். வயித்து பொழப்புக்குத்தான் கடை வைக்கிறோம். 11 மணிக்கு மேல கடை வெச்சிருந்தா மாமூல் கொடுக்கணும் சார்'' என்று நம்மை அவசரப்படுத்தினார் கடைக்காரர்.
பேருந்துநிலையத்தை உற்றுநோக்கியபோது… புதுப்பிக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. எத்தனை நாட்களாக நடந்துவருகிறது என்று நாம் யோசித்தோம். இதனால் கடைகளும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் வியாபாரிகளுக்கும் பிரச்சனை. அந்த இரவு நேரத்தில் பெண்கள் நின்றுகொண்டு வேறு வியாபாரத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். விடுதிப் பக்கம் மிகவும் மோசமாக இருக்கிறது இவர்களின் கூட்டம். இவர்களுக்கு வயிற்றுபிழைப்பு ஓ.கே. ஆனால், படிக்க வேண்டிய மாணவர்களின் எதிர்காலத்தை அல்லவா இவர்கள் சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால், பல மாணவர்கள் ஹெச்.ஐ.வி. போன்ற நோய்த்தொற்றுகளுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது, சைரன் புல்லட்டில் வந்த போலீஸ்காரர் நம்மிடம் பேச்சு கொடுக்க... ஒரு கட்டத்தில் நாம் யார்? எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் அறிமுகப்படுத்திக்கொண்டோம். ""திருட்டு, ரவுடிசத்தை ஒழிக்கணும்ங்குறதுக்காகத்தான் சீக்கிரம் கடையை மூடச்சொல்றாங்க உயரதிகாரிகள். ஆனா, திருட வர்றவன், ரவுடிஸம் பண்றவன்லாம் சைரன் சப்தம் கேட்டதுமே எஸ்கேப் ஆகிடுறானுங்க. சைரன் இல்லாமல்… சைலண்டா வாட்ச் பண்றதுக்காக டீம் போட்டாத்தான் திருட்டை ஒழிக்கமுடியும். எங்களை கண்காணிக்கவேண்டிய அதிகாரிகள் ஏதாவது ஒரு இடத்துல உட்கார்ந்துக்கிட்டு மைக்குல பேசிக்கிட்டு உயரதிகாரிகளை ஏமாத்திடுறாங்க. இதனால், தங்கும் விடுதிகளில் அந்த தொழில் கொடிகட்டிப் பறக்குது. அதிகாரிகளுக்கு தெரிந்தும்கூட கண்டுக்காம விட்டுட்டு மாமூல் வசூல் பண்றாங்க’என்று அவர் புலம்பிவிட்டு போனதை பார்த்துவிட்டு அப்படியே மார்க்கெட் பக்கம் வந்தோம்.
வியாபாரிகள் காய்கறிகளை எடுத்துக்கொண்டு வியாபாரத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குடிதண்ணீருக்காக பெண்கள் அந்த நேரத்திலும் பதறியடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பார்க்கும்போதே பரிதாபமாக இருந்தது.
(பயணிப்போம்)
ரவுண்ட் அப்- சக்தி
தொகுப்பு: மனோ