ஜவுளி நகரில் "மாமூல்' வாழ்க்கை!
பகுத்தறிவு தலைநகர்,…தமிழகத்தின் ஜவுளி சந்தை,… மஞ்சள் மாநகரம் என்ற முப்பெருமை கொண்டது "ஈரோடை' என்கிற "ஈரோடு' மாநகரம். தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது முதன்முதலாக மக்கள் வசிப்பிடங்களுக்கே குடிநீரை குழாய் மூலம் கொடுத்து தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்ததும் இங்குதான் என்ற பல நினைவுகள் கொசுவத்தி சுருள் புகையில்லாமல் ஃப்ளாஷ்பேக்காய் சுழல "ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே' என்று இரவு நேரத்தில் நமது ரவுண்ட் -அப்பை தொடங்கினோம். சைக்கிளில் அல்ல… மோட்டார் சைக்கிளில்.
பிரப் சாலை, பெருந்துறை சாலை மற்றும் மேட்டூர் சாலையை ‘இணைக்கும் மேம்பாலப் பணி இரவிலும் நடந்துகொண்டிருக்க, இதற்காக வெட்டப்பட்ட குழிகள் வாகன ஓட்டிகளைப் பார்த்து வாய்பிளந்து காத்திருக்கின்றன. ஆட்டோகிராஃப் சேரனைப்போல வானத்தையே அண்ணாந்து பார்த்து ஃப்ளாஷ் பேகிக்கொண்டே டூவீலரை ஓட்டியிருந்தால் குழிக்குள் விழுந்து பேக் போர்ன் வீக் போர்ன் ஆகியிருக்கும். எச்சரிக்கையாக பயணித்தபோது… இரவு 11 மணி. பேருந்து நிலையத்தையொட்டியே கையேந்திபவனில் "ஹி ஹி' தள்ளுவண்டி உணவகத்தில்தான் ஆவி பறக்கும் சூடான இட்லி-தோசைகளை பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள் பரபரப்பாக!
நாமும், தோசையை ஆசையாய் வாங்கிக்கொண்டே பேச்சுக்கொடுத்தபோது,
""வயித்து பொழப்புக்குத்தான் கடை போட்டிருக்கோம். போலீசுக்கு மாமூல் கொடுத்து கொடுத்து முடியலீங்க'' என்று பரபரப்பான சூழலிலும் புலம்பியவரிடம், "அதான்… மாமூல் கொடுக்கறீங்களே… எதுக்கு நேரமாயிடுச்சுனு பயப்படுறீங்க?' என்றோம். ""சாயங்காலம் போலீஸ் புரோக்கர் ஒருவர் வந்து ஒரு கடைக்கு நூறு ரூபாய் மாமூலா வசூலிப்பார். இரவு 11 மணிக்கு மேல கேஸ் போடுவோம் என ஐநூறு ரூபாய் கேட்பாங்க. ஈரோட்டில் மட்டும் சுமார் 200 தள்ளுவண்டிகளுக்கு இதான் நிலைமை''’’என்று நம்மையும் சூடாக்கினார்.
சாப்பிட்ட பிறகு நமது டூவீலரை பஸ் ஸ்டேண்டுக்குள் விட்டோம். அப்போது சீருடை அணியாமல் கையில் லத்தியுடன் வந்த இரண்டு நபர்கள் தூரமாய் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஏதோ பேசிவிட்டுச் சென்றார்கள். இனிப்பு இருக்கிற இடத்துலதான் ஈ மொய்க்கும்’ என்ற டவுட் வர, நம் கண்களை ஸூம் பண்ணினோம். லேசாக புன்னகைத்து கண் சிமிட்டினார். அவள் அருகே சென்றோம். ""ம் ஊருக்கு புதுசா? லாட்ஜும் இருக்கு. வீடும் இருக்கு. எது வசதி?'' என்று பொசுக்கென்று அழைக்க,… ""ஐயோ போலீஸ் தொந்தரவு அதிகம்னு என் ஃப்ரெண்டு சொன்னானே'' என வார்த்தைகளை கிளறினோம். ""உங்க ஃப்ரெண்டு பேச்ச கேட்காதீங்க. அஞ்சு லாட்ஜ் இருக்கு. மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோட்டில் அது தவிர வில்லரசம்பட்டி, வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சூரம்பட்டி வலசு இங்கெல்லாம் எங்களுக்கு தனித்தனி வீடே இருக்கு. போலீஸ் எட்டிக்கூட பாக்க மாட்டாங்க. சும்மாவா வாரம் ஒரு எடத்துக்கு பத்தாயிரம் கொடுக்கிறோம். எங்க லீடரா இருந்த பூங்கொடி மீது கேஸ் போட்டாங்க.
ஆனா, அவுங்க ஈசியா ஜாமீன்லே வெளியே வந்தாங்க. புதுசா வந்த டி.எஸ்.பி. சார் இருக்குறவரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவருக்கு மட்டும் எங்க மூலமா மாசம் ஒரு லட்சம் போகுதுங்க'' என்றவர், "லாட்ஜ்க்கு போறீங்களா? தனி வீட்டுக்கு போறீங்களா?' என மீண்டும் விஷயத்துக்கு வந்தார்.
"நான் தனியா என் வீட்டுக்கே போயிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு அவளிடமிருந்து தப்பித்து வேறு இடத்துக்கு ஓடிவந்து வண்டியை நிறுத்த, "அங்கயெல்லாம் கொள்ளையடிக்கறாங்க, போனா எல்லாத்தையும் இழந்துட்டு வர வேண்டியதுதான்' என நமக்கு எச்சரிக்கை செய்தார்கள். என்னவா இருக்கும்? என்று நைஸாக பேச்சுக்கொடுத்தபோது, “""ஈரோட்டுல 7 இடத்துல ஜெகஜோரா சீட்டாட்டம் நடக்குது. இதுக்குன்னே ரெண்டு லாட்ஜ் இருக்கு. நம்ம டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் வந்த பிறகு சீட்டாட்டங்ளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். சும்மாவா? நீங்க சத்தி ரோட்டுலயும் மேட்டூர் ரோட்டுலயும் அந்த பேமசான லாட்ஜ்க்கு போங்க'' என்றார்கள். நாம் நேராக சூரம்பட்டி வலசு சென்றோம். ஒரு இருட்டான பகுதி. இரவு 12:30. மூன்று பேரில் இரண்டு பேர் சரக்கும் கையுமாக நின்றார்கள். நாம் போய் வண்டியை நிறுத்தியதும் "சார், சார் அனுப்பி விட்டாரா?' என்றபடி உளற ஆரம்பித்தார்கள்.
""டிபார்ட்மெண்ட்ல இருக்கீங்க. உங்களுக்கு தெரியாததுபோல பேசறீங்க. ஈரோட்டுல மட்டும் 18 இடத்துல ப்ளாக்குல சரக்கு விக்குது. உயரதிகாரிக்கு, மாசம் ரெண்டு லட்சம் இதுல வருமானம்ங்க'' என்றார்.
இரவுநேரத்தில் எதேச்சையாக எதிர்ப்பட்ட நமது காக்கி நண்பர்களோ, ""சார் இப்ப நான் நைட் ரவுண்ட்ஸுக்கு போறதே இல்லை. எல்லா இன்ஸ்பெக்டர்களையும் வசூல் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர் வேலைக்கு மாத்திட்டாங்க உயரதிகாரிகள். முன்னாள் அமைச்சரும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கத்திற்கு 25 எல் கொடுத்திட்டு இங்க வந்தாராம் இந்த டி.எஸ்.பி. இப்ப மாசம் 25 எல் வசூலாகணும்னு குறியாய் இருக்காரு. கஞ்சா, குட்கா பிசினஸ் இந்திரா நகர், பெரியார் நகருலே வெளிப்படையா விக்குது, சீட்டாட்ட கிளப்பு, பாலியல் தொழில், கடை மாமூல், ப்ளாக்கில் சரக்கு, கட்டப் பஞ்சாயத்து என எல்லாமே இவர் நேரடி டீலிங்தான். இவர் மேலே ஏராளமான புகார் காவல் துறை மேலிடத்திற்கு போயுள்ளது. எந்த நடவடிக்கையும் இல்லே...''’தலைசுற்றவைக்கிறார்கள் காக்கிகளே!
முப்பெரும் நகரமான ஈரோட்டிற்கு மாமூல்நகரம் என்னும் பெயரையும் சூட்ட ஆரம்பித்திருப்பது நைட் ரவுண்ட்ஸில் கண்டுபிடிக்க முடிந்தது.
- ஜீவாதங்கவேல்