வந்த செய்தி: தொகுதியை ரவுண்ட் கட்டும் ரஜினி மக்கள் மன்றம். கண்காணிக்கும் பா.ம.க.
விசாரித்த உண்மை: வேலூர் மாவட்டம் அரக்கோணம் எம்.பி. தொகுதி, பா.ம.க. வலுவாக உள்ள தொகுதி. அதிலும் அத்தொகுதிக்குள் அடங்கிய சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் கூடுதல் வலுவாக உள்ளது. இத்தொகுதியின் காவேரிப்பாக்கம் ஒன்றியம், நெரிஞ்சந்தாங்கல் கிராமம்தான் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மா.செ. சோளிங்கர் ரவியின் சொந்த ஊர். இந்த கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியின் கட்டடம் மிகவும் சிதிலமடைந்துவிட்ட தகவலை பள்ளியின் ஆசிரியர்கள், சோளிங்கர் ரவியிடம் தெரிவித்தனர். உடனே தனது சொந்தப் பணம், 3 லட்சத்தை செலவு செய்து, கட்டடத்தை புதுப்பித்து, சுற்றுச்சுவருக்கு வர்ணம் பூசி, குழந்தைகள் விளையாடுவதற்குத் தேவையான ஊஞ்சல், ராட்டினம் இவற்றையும் ஏற்படுத்தியதோடு, கழிப்பறை வசதியையும் ஏற்படுத்தி ஜமாய்த்துவிட்டார் ரவி. முறைப்படி பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் விழாவை கடந்த 06-ஆம் தேதி ஏற்பாடு செய்து, விழாவுக்கு பா.ம.க. மா.செ. கிருஷ்ணனையும் உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர்களையும் அழைத்து வந்தார். இதேபோல் போளிப்பாக்கம், பிள்ளையார்குப்பம், அய்யந்தாங்கல் கிராமங்களின் பள்ளி ஆசிரியர்களும் சில கோரிக்கைகளை வைத்தபோது, ஆவன செய்வதாக உறுதி அளித்திருக்கிறாராம் ரவி. இவையனைத்தையும் தீவிரமாக கண்காணிக்கிறது பா.ம.க. தலைமை.
-து.ராஜா
வந்த செய்தி: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்களை வளைக்கும் டி.டி.வி.தினகரன்.
விசாரித்த உண்மை: ஜெ. இருந்தபோது கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் பலர் இப்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பால் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர். அப்படி ஓரங்கட்டப்பட்டவர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தினகரன். முதலில் வளைக்கப்பட்டிருப்பவர் சரவணபெருமாள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிள்ளைமார் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர் சரவணபெருமாள். கடந்த 05-ஆம் தேதி வ.உ.சி. பிறந்தநாள் விழாவுக்காக திருச்சி வந்திருந்தார். அதே நாளில் திருச்சியில் இருந்த தினகரனிடம், செந்தில் பாலாஜி, பழனியப்பன், செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் சரவணபெருமாளை அழைத்துச் சென்றபோது, சில வாக்குறுதிகளைக் கொடுத்து, அ.ம.மு.க.வில் சேரும்படி கூறியுள்ளார் தினகரன். இதேபோல் ஓ.பி.எஸ். டீமை சேர்ந்த நிர்மலா பெரியசாமியும் விரக்தியில் இருப்பதைத் தெரிந்து, அவரையும் வளைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது தினகரன் டீம்.
-அருண்பாண்டியன்
வந்த செய்தி: கட்சித் தொண்டனை மதித்து, முதல்முறையாக சிறையிலிருந்து வாழ்த்துக் கடிதம் அனுப்பிய சசிகலா.
விசாரித்த உண்மை: அ.ம.மு.க.வின் தென்சென்னை வடக்கு மாவட்டத் துணைச் செயலாளராக இருப்பவர் வைத்தியநாதன். இவரின் மகள் தீபிகாவின் திருமணம், செப். 12-ஆம் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் நடக்கிறது. மகளின் திருமணப் பத்திரிகையை பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் அனுப்பியிருந்தார் வைத்தியநாதன். இதைப் பார்த்த சசிகலா, வைத்தியநாதனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
-இளையர்
வந்த செய்தி; அப்பல்லோவுக்கு சீல்? ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி.
விசாரித்த உண்மை: ஜெ. மரண மர்மத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அப்பல்லோ நிர்வாகம் எந்தவித ஒத்துழைப்பும் தருவதில்லை. சிகிச்சையில் ஜெ. இருந்தபோது எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வீடியோவில் இருக்கும் அறையை இப்போது மாற்றி அமைத்திருப்பது ஏன் என ஆணையம் எழுப்பிய கேள்விக்கு பதில் தரவில்லை அப்பல்லோ. அதேபோல், ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார்கள் அப்பல்லோ டாக்டர்கள். இதனால் ரொம்பவே டென்ஷனாகிவிட்டார் நீதிபதி ஆறுமுகசாமி. எனவே இப்போது, அப்பல்லோவில் சி.சி.டி.வி. கேமரா இருந்ததா, ஜெ. அட்மிட் செய்யப்பட்டபின் கேமராக்கள் அகற்றப்பட்டனவா? அகற்றச் சொன்னது யார்? என்பதான கேள்விகளை சம்மனாக அனுப்பியுள்ளது ஆணையம். இவற்றிற்கும் சரியான பதில் இல்லை என்றால், அப்பல்லோவுக்கு சீல் வைக்க உத்தரவிட, நீதிபதி உத்தேசித்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-பிரகாஷ்
வந்த செய்தி: 1. சமத்து சமந்தா -சந்தோஷத்தில் தயாரிப்பாளர்கள். 2. விழாவில் கமல் சர்ச்சை.
விசாரித்த உண்மை: 1. நாகசைதன்யாவுடன் திருமணம் ஆனபிறகும் தெலுங்கு, தமிழ்ப் படங்களில் செம பிஸியாக இருக்கிறார் சமந்தா. "இரும்புத்திரை'யில் விஷாலுடன் ஜோடி போட்ட சமந்தா, சுந்தர் சி. டைரக்ட் பண்ணப்போகும் விஷால் படத்திலும் ஜோடி சேரப் போகிறார். இப்போது வினாயகர் சதுர்த்திக்கு ரிலீசாகப் போகும் சிவகார்த்திகேயனின் ’"சீமராஜா' விலும் சூப்பராக பெர்ஃபாமென்ஸ் பண்ணியிருக்கிறாராம். "சீமராஜா'வின் ஆடியோ ரிலீஸ் விழா மதுரையில் நடந்தபோது, எந்தவிதமான பந்தாவோ, ஓவர் கண்டிஷன்களோ இல்லாமல் மதுரைக்கு வந்தாராம். அதேபோல் "யு டர்ன்'’என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கும் எக்ஸ்ட்ரா சார்ஜ் எதுவும் கேட்கவில்லையாம். இதெல்லாம் தயாரிப்பாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. கடந்த 09-ஆம் தேதி ‘"மரகதக்காடு'’ என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. 45 ஆண்டுகளாக தயாரிப்புத் துறையில் இருக்கும் ரகுநாதனின் 18-ஆவது படம் இது. கமலை வைத்து "பட்டாம்பூச்சி'’படம் எடுத்தவர் என்ற முறையில்’"மரகதக்காடு'’டீசர் வெளியீட்டு விழாவுக்கு கமலிடம் தேதி கேட்டு பலமுறை அலைந்தும் பலனில்லையாம். இதுபற்றி விழாவில் ரொம்பவே வருத்தப்பட்டுப் பேசினார் தயாரிப்பாளரும் டைரக்டருமான சுரேஷ் காமாட்சி.
-பரமேஷ்
வந்த செய்தி: அமைச்சரை வரவேற்று ஃப்ளக்ஸ் பேனர்கள். எம்.பி., எம்.எல்.ஏ. நேரடி மோதல்.
விசாரித்த உண்மை: சமீபத்தில் தென்காசி தொகுதியிலுள்ள பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியின் திறப்பு விழாவுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கடந்த 07-ஆம் தேதி வந்தார். அமைச்சரை வரவேற்று, தொகுதி எம்.எல்.ஏ.வும் பாவூர்சத்திரவாசியான செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஊரெங்கும் ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட புறநகர் மா.செ.வும் நெல்லை எம்.பி.யுமான பிரபாகரன், தனது ஆட்களை உசுப்பேற்றி, எம்.எல்.ஏ. வைத்த பேனர்களை மறைத்து, வரிசையாக தனது பெயரிலான பேனர்களை வைத்துவிட்டார். இதனால் ஆத்திரமான எம்.எல்.ஏ. ஆட்கள்... விழாவுக்கு முதல்நாள் இரவு, எம்.பி.யின் பேனர்களை கிழித்தெறிந்துவிட்டனர். தகவல் கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த எம்.பி.யின் ஆட்களுக்கும் எம்.எல்.ஏ. ஆட்களுக்கு கைகலப்புவரை போனது. கோபத்தின் உச்சிக்குப் போன செல்வமோகன்தாஸ் பாண்டியன், "என்னலே நினைச்சுக்கிட்டிருக்காரு அவரு. மாவட்டம்னா அவர் ஏரியாவோட நின்னுக்கணும். நம்ம ஏரியாவுக்குள்ள வந்தா சரிப்பட்டு வராது'’என தனது ஆட்களிடம் வெடித்திருக்கிறார். எம்.பி. பிரபாகரனோ, "ஏலே இதென்ன அவரு வீட்டு விழாவா, கவுர்மெண்டு விழாலே. என்ன வரவேண்டாம்னு சொல்றதுக்கு அவரு யாருலே'’என தனது ஆட்களிடம் சவுண்ட் விட்டாலும் பாவூர்சத்திர விழாவைப் புறக்கணித்துவிட்டார்.
-பரமசிவன்