திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவில் இயங்கி வருகிறது ஜெயின் ஜூவல்லரி. இதன் உரிமையாளர் நரேந்திரகுமார். இவருக்கு ஜித்தேஷ், ஹரிஹந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவை சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ். இவர் அடகுத் தொழில் செய்துவருகிறார். ஜித்தேஷ், ஹரிஹந்த், ஹன்ஸ்ராஜ் மூவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் மட்டுமல்லாமல் தாய்லாந்து பட்டாயாவுக்கு சென்று அங்குள்ள க்ளப்புகளில் எல்லாம் விளையாடி, விளையாடி நட்டம் அதிகமானதால் வெளியே வட்டிக்கு வாங்கியுள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி இரவு அசலியம்மன் கோவில் வீதியிலுள்ள நகைக்கடையை மூடிவிட்டு ஜித்தேஷ் மற்றும் ஹரிஹந்த் இருவரும் இருசக்கர வாகனத்தில் தங்களது வீடமைந்துள்ள ஐயங்குளம் தெருவுக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு 10:23 மணிக்கு பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களை மறித்துத் தாக்கி, பக்கத்தில் வந்துகொண்டிருந்த காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். நீண்ட நேரமாகியும் மகன்கள் வீட்டுக்கு வரவில்லை, செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் குடும்பத்தினர் பயந்துபோயினர். அப்போது நரேந்திரகுமார் வீட்டுக்கு ஹன்ஸ்ராஜ் வந்துள்ளார். "உங்க மகன்களை நான்தான் கடத்தி வச்சிருக்கேன். உங்க மகன்கள் 70 லட்ச ரூபாய் தரணும். அந்தப் பணத்தை தந்தால் விட்டுடறேன்'' எனச் சொல்ல அதிர்ச்சியடைந்துள்ளனர். "உங்க மகன்கள் வாங்கிய கடனை நீதான அடைக்கணும்? பணம் கேட்டால் இல்லைங்கற? அறுத்துப் போட்டுட்டு போயிடுவானுங்க, ஜாக்கிரதை'' என மிரட்டியுள்ளான். "இப்போ எங்கிட்ட 10 லட்சம்தான் இருக்கு, இப்போ இதை வச்சிக்க, மீதிய நாளைக்கு பேசிக்கலாம்'' என்றுள் ளார் நரேந்திரகுமார். "நாளை பணம் வந்துடணும்'' எனச் சொல்லிவிட்டு 10 லட்சத்தோடு வெளி யே வந்தவன், மகன்களை திருக்கோவி லூர் ரோடு நகராட்சி அலுவலகத் தினருகே விட்டுவிடச் சொல்ல, அதன் படி விட்டுச் சென்றனர். கடத்தல் கும்ப லுக்கு 5 லட்சம் பணம் தந்து அனுப்பி வைத்த ஹன்ஸ்ராஜ், மீதிப் பணத்தோடு தனது வீட்டில் போய் படுத்துள்ளார்.
இதற்குள்ளாக, இளைஞர்களைக் காரில் கடத்திச் செல்வதைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர் போலீஸ் எஸ்.பி. அலுவலகத்துக்கு தகவல் சொல்லியுள்ளார். அத்தகவல், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் வரை சென்றுள்ளது. அவர் இதுபற்றி வேலூர் டி.ஐ.ஜி., திருவண்ணாமலை எஸ்.பி. இன்ஸ்பெக் டர் தயாளனிடம் கேட்டதும், திரு வண்ணாமலை நகர டி.எஸ்.பி. ரவிச் சந்திரன் களத்திலிறங்கி விசாரித்ததில், கடத்தியவர்களின் ஒரு டூவீலர் சிக்கியிருக்கிறது. உடனே அந்த வண்டி உரிமையாளரான நரேந்திரகுமார் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார். அப்போது கடத்தப்பட்ட மகன்கள் வீட்டிலிருக்க, தொழில் போட்டியால் கடத்தல் நடந்ததாகக்கூறி விவகாரத்தை அமுக்கி யுள்ளனர்.
இதுபற்றி ஐ.ஜி.யிடம் தெரிவித்தபோது, "அவங்களை கஸ்டடிக்கு கொண்டுவாங்க, மாவட்ட எல்லையை சீல் பண்ணுங்க, கடத்தல் கும்பலை பிடிங்க, வழக்கு போட்டு அரஸ்ட் செய்ங்க'' என உத்தரவிட்டுள்ளார். இரவோடு இரவாக ஹன்ஸ்ராஜை தூக்கினர். செங்கம் டி.எஸ்.பி. தேன்மொழி தலைமையிலான டீம், பணத்தோடு பெங்களூரூ நோக்கி போதையில் சென்றுகொண்டி ருந்த கடத்தல் டீமை மடக்கிப் பிடித்து கஸ்டடிக்கு கொண்டுவந்தனர்.
அதன்பின் நடந்தவற்றை போலீஸ் தரப்பில் கேட்டபோது, "ஹன்ஸ்ராஜ் மூலமாக திருவண்ணா மலை நகரத்தில் கந்துவட்டி தொழில் செய்யும் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியின் நிர்வாகியான கிங் பெயர் கொண்டவரிடம் கொஞ்சம், கொஞ்சமாக லட்சக்கணக்கில் பணம் வாங்குவதும், தருவதுமாக இருந்துள்ளனர் சகோதரர்கள். ஒரு கட்டத்தில் வட்டி சரியாக வரவில்லை, அசலும் வராததால் ஹன்ஸ்ராஜை அந்த நபர் நெருக்கியுள்ளார். அந்த பணத்தை வாங்கவே ஆட்களை வைத்து கடத்தி யுள்ளான் ஹன்ஸ்ராஜ். கைது செய்யப்பட்டுள்ள கூலிப் படை, பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடி பில்லா என்கிற காசியோட ஆட்கள். திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு ரவுடி மூலமாக பில்லாவோடு நட்பாகியுள்ளான் ஹன்ஸ்ராஜ். அவன்தான் கடத்தலுக்கு விக்ரம், மனோ என்கிற கபாலி மற்றும் வாசிம் ஆகியோரை அனுப்பியிருக்கான். அவனுங்க இவர் களைக் கடத்தி, தச்சம்பட்டு காட்ல வச்சிருக் கானுங்க. பணம் வாங்கியாச்சுன்னதும் அவனுங்க, வந்து விட்டுட்டு 5 லட்சம் வாங்கிட்டு சரக்கு சாப்பிட்டுட்டு கிளம்பிட்டதா சொன்னானுங்க. இவனுங்களுக்கு துணையா திருவண்ணாமலை பறையம்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவீன், அண்ணா மலை, சீனு, ராஜ்குமார் ஆகியோர் இருக்கானுங்க. அவனுங்கள தேடிக்கிட்டு இருக்கோம்'' என்றார்கள்.
நகைக்கடை வட்டாரத்தினரோ, "வழக்க மாக மார்வாடி, சேட், ஜெயின் சமூகத்தினர் வெளிநபர்களிடம் கடன் வாங்கமாட்டார்கள். இவ்வளவு பெரிய தொகையை வாங்கியிருப்பதால் ஹவாலா சம்பந்தப்பட வாய்ப்புள்ளது. போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும்'' என்கிறார்கள்.
சமுதாயரீதியாக ஹன்ஸ்ராஜ் மீது புகார் தர நரேந்திரகுமார் மறுக்க, போலீஸோ எப்.ஐ.ஆர். போடும்வரை விடவில்லை. கூலிப் படையினரை பிடிச்சுக்கோங்க, ஹன்ஸ்ராஜை விட்டுடுங்க எனச் சொன்னவர்களை, ஐ.ஜி.யிடம் பேசுங்க எனச்சொல்ல, அமைதியாகிவிட்டனர். ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலரிடம் பேச, அவர்களும் பின்வாங்கியுள்ளனர். ஆக, கமுக்கடியாக நடந்த கடத்தலை அதிரடியாகப் பிரித்துமேய்ந்துவிட்டது போலீஸ்!