சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளார். இவருடைய மகன் சுதர்சன்பாபு, மருமகள் சுதா. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். சேலம் சின்ன கொல்லப் பட்டியில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இதே வீட்டின் தரைத்தளத்தில் சுதர்சன்பாபுவின் தாயார் மீனாட்சி தனியாக வசிக்கிறார்.
நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த சுதா, பல்லாண்டுகளாக மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், ஜனவரி 31ஆம் தேதி, வீட்டில் மயங்கி விழுந்தவரை, பக்கத்து வீட்டினர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். சுதாவின் உடல்நிலை மோசமாக, சேலம் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரியவந்தது. இதையறிந்த சுதாவின் தம்பி பரமசிவம், அக்கா கவிதா மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அன்றைய தினம், மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்த மேயர் ராமச்சந்திரனுக்கு இந்தத் தகவல் சொல்லப்பட, அவரும் அரசு மருத்துவ மனைக்கு விரைந்தார். மருமகளின் இறப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், சில நிமிடங்களில் அங்கிருந்து விருட்டென கிளம்பிச் சென்றுள்ளார்.
சுதாவின் தம்பியும், அக்காவும் நம்மிடம், "சுதாவுக்கு உடல்நலப் பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனாலும் அவ ருடைய கணவரும், மேயரின் மனைவி மீனாட்சியும் சரியாக சாப்பாடு போடாமல் பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்திய தால்தான் இறந்துவிட்டார். அவருடைய கணவருக்குக் குடிப்பழக்கமும், வேறு பெண் ணுடன் தொடர்பும் இருக்கிறது. சுதா இறந்தபின்னும் மேயர் குடும்பத் தினர் மருத்துவமனைக்கு வராமல் ஓடிவிட்டனர்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவரை யும் கைது செய்ய வேண்டும்'' எனக் கூறி, உடற்கூராய்வுக்கூடம் முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். மற்றொருபுறம், மேயர் தரப்பில் சுதாவின் உடலைப் பெற்றுக்கொண்டு, இறுதிக் காரியங்களைச் செய்து முடித்தனர். கன்னங்குறிச்சி காவல்துறையினர், சுதாவின் இறப்பை சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.
நக்கீரன் கள விசாரணையில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. சுதாவின் கணவர் சுதர்சன்பாபு, சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் தணிக்கைப் பிரிவில் மேலாளராக இருக்கிறார். பணி நிமித்தமாக ஜனவரி 31ம் தேதி சென்னைக்குச் சென்றுகொண்டிருந்தவர், மனைவி இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்த பிறகு, அன்றிரவுதான் சேலம் வந்திருக்கிறார்.
ஜனவரி 30ஆம் தேதியே சுதாவுக்கு காய்ச்சல் இருந்திருக்கிறது. இதற்காக சுதர்சன்பாபு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். மறுநாள் காலையில் அவர், சுதாவின் அக்கா கவிதாவிடம், மனைவிக்கு உடல்நலம் சரியில்லை, உங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று பார்த்துக் கொள்ளுங்களென்று செல்போனில் சொல்-விட்டு பணி நிமித்தமாக சென்னைக்குக் கிளம்பியிருக்கிறார். கவிதா வந்து பார்த்தபோது, சுதா மூச்சுப் பேச்சின்றி கிடந்திருக்கிறார்.
மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ''என் மருமகளுக்கும், மகனுக்கும் சின்னச்சின்ன பிரச்னைகள் இருந்தன. என் மனைவி அவர்கள் விவகாரத்தில் தலையிடுவதே கிடையாது. நான் என் மகளுடன் தோட்டத்து வீட்டில் வசிக்கிறேன். இந்நிலையில் நாங்கள் எப்படி மருமகளை கொடுமைப்படுத்த முடியும்? மருமகளுக்கு புகையிலை போடும் பழக்கம் இருக்கிறது. அவர்தான் சரியாக சாப்பிடாமல் உடலைக் கெடுத்துக் கொண்டார். ஏதோ உள்நோக்கத்துடன் அவருடைய உறவினர்கள் எங்கள் மீது புகார் அளித்துள்ளனர். எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
சுதர்சன்பாபுவோ, "சுதா வீட்டில் வசதியில்லாததால் நாங்கள்தான் திருமணச் செலவை ஏற்றுக் கொண்டோம். என் மனைவிக்கும், மகளுக்கும் என் தந்தை, 50 பவுனுக்கு மேல் நகைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நகைகளில் 28 பவுன்வரை அவரது வீட்டாரிடம் கொடுத்தது தெரிய வந்து பிரச்சனையானது. என் மனைவி 4 மாத கர்ப்பமாக இருந்த போது, எனக்குத் தெரியாமலேயே கருக்கலைப்பு செய்துள்ளனர். இந்த விவகாரங்களுக்குப் பிறகு எங்களுக்குள் 'உடல்ரீதியான' எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு திருமணத்திற்கு முன்பிருந்தே புகையிலை போடும் பழக்கம் இருந்தது. சில பற்கள்கூட அரித்து விழுந்துவிட்டன. அல்சர், நீரிழிவு, ரத்த அழுத்தம் என உடல் ரீதியான பிரச்னை களால் பாதிக்கப்பட்டு இருந்தார். இஷ்டத்துக்கு தூக்க மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு உறங்குவார். எனக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சையின்போது கொடுத்த மாத்திரைகளைக்கூட அவர் விழுங்கியிருக்கிறார். நிலைமை இப்படியிருக்க, எங்கள் மீது பழி சொல்கிறார்கள்'' என்றார். அவருடைய வீட்டில் 2 கிலோவுக்கும் மேல் புகையிலையும், நிறைய மாத்திரைகளும் இருப்பது தெரியவந்தது.
சுதாவுக்கும், சுதர்சன்பாபுவுக்கு மிடையே பிரச்சனையாகி, கன்னங்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ், அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தும் பயனில்லை என்கிறார்கள். இந்நிலையில், சுதாவின் உட-ல் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், கல்லீரல், குடல் பகுதிகள், 'விஸ்ரா' பரிசோதனைக்குப் பின் கிடைக்க மூன்று மாதங்கள் ஆகலாமெனத் தெரிகிறது.
மேயர் குடும்பத்தின் மீதான சந்தேக மரண வழக்கு, ஆளுங்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.