சுதந்திர தின விழாவை முடித்த கையோடு, சேலம் தி.மு.க. மேயர் ராமச் சந்திரன் தலைமையில், அங்குள்ள ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் குடும்ப சகிதமாக கேரளாவுக்கு ஜாலி டூர் பறந்தனர். இது அங்கே பல்வேறு யூகங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 15 ஆம் தேதி இரவு, இரண்டு சொகுசு பேருந்துகளில் அவர்கள் கேரளாவுக்குப் புறப்பட்டனர். இந்த டூரில் தி.மு.க.வில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஜெயக்குமார், "சக்கரை' சரவணன், சேலம் மத்திய மா.செ. ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வால் ஓரங்கட்டப்பட்ட மூத்த கவுன்சிலர் கலையமு தன் ஆகியோர் தவிர மற்ற ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். மற்றவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் இந்த டூரில் காங்கிரஸ் கவுன்சிலர் கிரிஜா மட்டும் சேர்ந்து கொண்டார். கவுன்சிலர்களின் குடும்பத்தினரும் சேர்ந்துகொண்டதால் ஏறத்தாழ 100 பேர் இந்த டூரில் இருந்தனர். கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழை, மூணார் ஆகிய இடங்களுக்குச் சென்ற இந்த டீம், அங்கே படகு சவாரி உட்பட மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அம்சங்களில் திளைத்துவிட்டு, அனைவரும் 18 ஆம் தேதி இரவு அங்கிருந்து கிளம்பி மறுநாள் அதிகாலையில் சேலம் வந்துசேர்ந்தனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சேலம் தாதகாப்பட்டி பா.ஜ.க. கிளைத்தலைவர் சிவராமன், "சேலம் மாநகராட்சியில் பணியாற்றிவரும் அனைத்து வகை ஊழியர்களுக்கும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் சம்பளப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பலகோடி ரூபாய் பி.எஃப். தொகை, இன்னும் செலுத்தப்படாமல், அதில் ஊழல் நடந்துள்ளது. ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் நிதிப்பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் செலுத்துவதற்காக ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த 12 கோடி ரூபாயை இதுவரை சங்கத் தில் செலுத்தவில்லை. இதுபற்றி "நக்கீரன்' இதழிலும் விரிவாக செய்தி வந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லிவிட்டு, பல பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக மரண சாலையாக மாறிக் கிடக்கிறது. இவ்வளவு பிரச்னை களுக்கு மத்தியில் இந்த ஜாலி டூர் தேவையா என்பதை மேயரும், ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் சிந்திக்க வேண்டாமா?'' ”என்றார் காட்டமாக.
சுற்றுலாவுக்குச் செல்லாத ஆளுங்கட்சி கவுன் சிலர்கள் இருவர் கூறுகையில், "தமிழ்நாட்டிலேயே மிகவும் வயதான மேயர் என்றால், அவர் சேலம் மாநகராட்சி மேயர்தான். ஆனாலும் அவருக்கு கேளிக்கையான சில சமாச்சாரங்களில் இப்போதும் ஈர்ப்பு அதிகம். மேயர் அடிக்கடி கேரளாவுக்கு தனிப்பட்ட முறையில் சென்று வருவது உண்டு. அவருக்கு நன்கு பரிச்சயமான இடம் என்பதால் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்திருக்கக் கூடும். இந்த பயணத்திற்கான மொத்த செலவையும் மேயர் ராமச்சந்திரனே ஏற்றுக் கொண்டதாகச் சொல்கின்றனர். ஆனால், திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு சேலம் மாநகராட்சியில் துப்புரவுப் பணிகள் தொடர்பான ஒப்பந்தம், ஆண்டுக்கு 61 கோடி ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம்தான் கேரள சுற்றுலா வுக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்ட தாகவும் ஒரு தகவல் கசிகிறது'' என்கிறார்கள்.
சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தியோ "இந்த சுற்றுலாவுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் மேயர் அழைப்பு விடுத்தார். மதுரை எழுச்சி மாநாட்டு வேலைகள் இருந்ததால் நாங்கள் நாகரிகமாக ஒதுங்கி விட்டோம். அரசே ஏற்பாடு செய்யும் பட்டறிவுப் பயிற்சிப் பயணமாக இருந்திருந்தால் நாங்களும் சென்றிருப்போம். சொத்து வரி உயர்வு, முடிவுறாத திட்டப் பணிகள் என பல பிரச்னைகள் இருக்கும்போது இதுபோன்ற உல்லாச பயணம் தேவையற்றது. பேரறிஞர் அண்ணா சொன்னதை சற்று மாற்றிச் சொல்ல வேண்டுமானால், "கும்பி எரியுது குடல் கருகுது... குளு குளு சுற்றுலா ஒரு கேடா?' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது'' என்றார் எரிச்சலாக.
இந்த சர்ச்சைகள் குறித்தெல்லாம் மேயர் ராமச் சந்திரனிடம் நாம் கேட்டபோது... ”"சேலம் மாநக ராட்சியில் புதிதாக வரிவிதிப்பு மற்றும் மேல்முறை யீட்டுக் குழு உறுப்பினர்கள் 9 பேர், கடந்த மாதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போ திருந்தே அவர்கள் எங்காவது சுற்றுலா செல்லலாம் என என்னிடம் கேட்டு வந்தனர். அப்படி முடிவு செய்யப்பட்டதுதான் கேரள சுற்றுலா பயணம். வரி மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களை மட்டும் சுற்றுலா அழைத்துச் சென்றால் மற்ற கவுன்சிலர் களிடம் பகைமையைச் சம்பாதிக்க நேரிடும் என்று கவுன்சிலர் குமரவேல் சொன்னார். அதன் பிறகு தான் கட்சி பேதமின்றி அனைத்து கவுன்சிலர்களை யும் சுற்றுலாவுக்கு அழைத்தோம். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட இரு கவுன்சிலர்கள் உள்ளிட்ட மூன்றுபேரை தவிர மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுற்றுலாவுக்கு வந்திருந்த கவுன் சிலர்கள், அவர்களின் குடும்பத்தினருடன் வந்து மகிழ்வாக இருந்தனர். திருப்தியான உணவு, பாது காப்பான தங்குமிடம் என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தேன். இந்த பயணத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவானது. எல்லாமே என் சொந்த செலவுதான். அதை மகிழ்ச்சியுடன்தான் செய்தேன். இதற்காக யாரிடமும் ஸ்பான்சர் பெறப்படவில்லை'' என்றார் அழுத்தமான குரலில்.
ஆளுந்தரப்பிலேயே அதிருப்தியை உருவாக்கி யுள்ள இந்த சுற்றுலா பயணம் குறித்து மேயரிடம் தி.மு.க. மேலிடமும் விளக்கம் கேட்டிருக்கிறதாம். எப்போதும் மத்திய மா.செ. ராஜேந்திரனின் கண் அசைவுக்கேற்ப இயங்கி வரும் மேயர் ராமச்சந்தி ரன், அவருக்கு எதிராக தனி கோஷ்டியை உரு வாக்குகிறாரோ என்ற பேச்சும் கிளம்பியதால், இந்த விவகாரம் மாங்கனி மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுன்சிலர்களின் குளுகுளு சுற்றுலா, அங்கே தகிப்பைத் தூண்டியுள்ளது.