சிங்களவர்களின் இனவெறி வன்முறையால் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வரலாற்றை இலங்கை பலமுறை பார்த்திருக்கிறது. இம்முறை அதே சிங்களவர்களின் வன்முறை, அதிகார வர்க்கத்தினருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுதான் வரலாற்றுத் திருப்பம். தமிழீழப் பகுதியில் பிறந்து, தமிழகத்தில் பயின்று, பத்திரிகையாளராகி, நூலகம் தீக்கிரையானதை, எரியும் நினைவுகள் எனும் தலைப்பில் ஆவணப்படம் எடுத்தவரும், திரைப் படைப்பாளியுமான சோமிதரன், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்த விரிவான பார்வையை நக்கீரனிடம் பகிர்ந்து கொண்டார்.
கட்டமைக்கப்பட்ட ராஜபக்ஷே பிம்பம்
"2009 போருக்குப் பிறகு, 2010 -15 காலகட்டத்தில் ராஜபக்ஷே குடும்பத்தின் அரசியல் செயல்பாடுகள்தான் இன்றைக்கு சிங்கள மக்களின் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரண மாக இருக்கிறது. 2009-ம் ஆண்டில் முள்ளிவாய்க் காலில் கொத்துக் கொத்தாகத் தமிழர்களைக் கொன்று குவித்து, விடுதலைப்புலிகளை வீழ்த்திய பின்னர், ராஜபக்ஷே குடும்பத்துக்கு மிகப் பிரமாண்டமான பிம்பம் கட்டமைக்கப்பட்டது. பிரபாகரனிடமிருந்த ஈழப்பகுதியை மீட்டு, ஒரே இலங்கையை உருவாக்கியதாக ராஜபக்ஷேவை சிங்களவர்கள் கொண்டாடினார்கள். சிங்கள மக்களிடம், பௌத்த சிங்கள தேசியத்தை வடிவமைத்துள்ளதாகக்கூறி, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒருங்கே தூண்டிவிட்டனர்.
2010-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்தலில் ராஜபக்ஷே குடும்பம் பெரிய வெற்றியைப் பெற்றது. மஹிந்த ராஜபக்ஷே மீண்டும் அதிபரானார். அவரது அண்ணன் சமல் ராஜபக்ஷே சபாநாயகரானார். தம்பி கோத்தபய ராஜபக்ஷே பாதுகாப்புத்துறை செயலாளரானார். இன்னொரு தம்பி பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரானார். மஹிந்த ராஜபக்ஷேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினரானார். கிட்டத்தட்ட 70% முக்கிய பொறுப்புகள் ராஜபக்ஷே குடும்பத்தின் வசமானது. பிறகென்ன, அதிகார போதையில் பல்வேறு முறைகேடுகளில் ராஜபக்ஷே குடும்பம் ஈடுபட்டது. தங்களை விமர்சிப்ப வர்கள் மீது தாக்குதல் நடத்து வது, கைது செய்வது, கடத்தி காணாமலாக்குவது போன்ற அராஜகங்களில் ஈடுபட்டனர்.
ராஜபக்ஷேக்கு ஜோதிட நம்பிக்கை அதிகம் உண்டு. பவுத்தராக இருந்தாலும், இந்தியாவிலுள்ள இந்துக் கோவில்களான திருப்பதி, குரு வாயூர் கோவில்களுக்கெல்லாம் ராஜபக்ஷே வந்துசென்றார். பதவியேற்பு உள்ளிட்ட எந்த வொரு அரசியல் செயல்பாடாக இருந்தாலும் ஷாமன் ஞானக்கா என்ற பெண் ஜோதிடரிடம் ஜோதிடம் கேட்டுத்தான் ராஜ பக்ஷே குடும்பத்தினர் முடி வெடுப்பார்கள். அதனால்தான், தற்போது ராஜபக்ஷே எதிர்ப் பாளர்கள் ஞானக்காவின் வீட்டையும் தேடிப் பிடித்துக் கொளுத்தியுள்ளார்கள்.
ஊழல்... கமிஷன்... சீரழிவு
இந்தக் காலகட்டத்தில், போருக்குப் பிறகு இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதாகக்கூறி எக்குத்தப்பாகக் கடன்களை வாங்கிக் குவித்தார்கள். அப்படி வாங்கப்பட்ட கடன்களை வைத்து நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காகத் திட்டமிட்டுச் செயல்படாமல், தங்களது சுயதம்பட்டத்துக்காகப் பல்வேறு கட்டடங்களை உருவாக்கினார்கள். உதாரணமாக, ஒரு விமான நிலையமே போதுமென்ற நிலையில் அம்பாந்தோட்டையில் தங்கள் தந்தையின் பெயரில் ஒரு விமான நிலையத்தைக் கட்டினார்கள். அது தற்போது பெரிதும் பயனற்றுக் கிடக்கிறது. போர் முடிவுக்குப் பிறகும் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பற்றி சிந்திக்கவே யில்லை. முழுக்க முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் மட்டுமே ஈழப்பகுதிகளை வைத்திருந்தது, முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாக இல்லை. அதேபோல, இலங்கையில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம் அதிக அளவில் கமிஷன்களை வசூலித்ததால், முதலீடுகள் இலங்கைக்கு வருவது குறைந்தது. பொருளாதாரம் பெருத்த பின்னடைவைச் சந்தித்தது. கமிஷனாக சுருட்டிய பணத்தை வெளிநாடுகளில் பதுக்கினர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் புதிய ஆட்சி நிலைக்க வில்லை. மீண்டும் ராஜபக்ஷே குடும்பமே ஆட்சிக்கு வந்தது. போருக்குப் பிறகான சூழலில், இலங்கை மக்கள் நுகர்வுக் கலாச் சாரத்துக்கு அடிமையானார்கள். அளவுக்கதிகமாக வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால் பணச்சுழற்சி வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கியதும் இலங்கைக்குப் பாதகமாக அமைந்தது. அதன்பின்னர் வந்த கொரோனா முடக்கம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சிதைத்தது.
ஈஸ்டரில் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல், இலங்கையின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதையும்கூட இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கட்டமைத்தது ராஜபக்ஷே குடும்ப அரசியல்.
மக்கள் போராட்டம்
பொருளாதாரச் சீரழிவால் உணவுக்குத் தட்டுப்பாடு, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு, மின்சாரத்துக்குத் தட்டுப்பாடு, மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என்று தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியான பின்பே ராஜபக்ஷே குடும்பத்தினர் கட்டமைத்த பொய்யான பிம்பம் சிங்கள மக்களுக்கு தெரியத் தொடங்கியது. அரசின் தவறான போக்குக்கு எதிராக சிங்கள இடதுசாரிகளும், சிங்கள லிபரல் களும் 31 நாட்களுக்கு மேலாக காலி முகத்திடல் என்ற இடத்தில் அமைதியான வழியில் போராடி வருகிறார்கள். அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் பெருவாரியாக இந்தப் போராட்டத்துக்கு ஆத ரவு தெரிவிக்கத் தொடங்கினர்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம், குண்டர்களை வாகனங் களில் அழைத்துவந்து இறக்கி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. எனவே ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும் எதிர்ப் பாளர்களுக்குமிடையே வன் முறை வெடித்தது. ராஜபக்ஷே ஆதரவு வி.ஐ.பி.க்களின் வீடு களாகத் தேடித்தேடிக் கொளுத் தத் தொடங்கினார்கள். ராஜ பக்ஷே ஆதரவு எம்.பி. மீதான தாக்குதலில் அவரது உயிர்பறிக் கப்பட்டது. ஆம், ராஜபக்ஷே குடும்பத்தினரின் இனவாத, மத வாதத்தால் தீட்டப்பட்ட கத்தி, தற்போது அவர்களை நோக்கியே திரும்பியிருக்கிறது. அவர்களால் லும்பன்களாக மாற்றப்பட்ட சிங்கள சமூகத்தின் ஒரு தொகுதி தான் தற்போது அரசுக்கெதிரான கலவரங்களில் ஈடுபடுகிறது.
ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு
இலங்கையிலுள்ள ஈழத் தமிழர்கள், ஏற்கனவே இலங்கை அரசின் அடக்குமுறை காரண மாக, மின்சாரம், பெட்ரோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பலவும் இல்லாத சூழலிலும், உணவுப்பொருட்கள் தட்டுப் பாடான சூழலிலும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். அதனால் இப்போதுள்ள பொருளாதாரச் சீரழிவு அவர்களுக்குப் பெரி தாகத் தெரியவில்லை. அதனால் தற்போது நடைபெறும் கலவரங் களை வேடிக்கை பார்ப்பவர் களாக மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். 2009-ம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க் காலில் கொத்துக்கொத்தாகத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, தென்இலங்கையில் சிங்களவர்கள், பட்டாசு வெடித்தும், பால்ச் சோறு சமைத்தும் கொண்டாடி னார்கள். தற்போது வரலாறு திரும்பியுள்ளது. இலங்கை முழுவதும் சிங்களவர்களுக் கிடையே வன்முறை வெறி யாட்டம் நடக்கிறது. கொழும்பு நகரில் ராணுவத்தின் டாங்கி கள் அணிவகுக்கின்றன. தற் போதுள்ள சூழல், எனது 'கறுப்பு ஜூலை' குறித்த டாக்கு மென்டரி யில் நான் காட்டியிருந்த சம்பவங் களை நினைவுபடுத்துவதாக உள் ளன. இலங்கையின் தற்போதைய நிலைக்கு, அமெரிக்கா, இந்தியா, சீனாவின் வல்லாதிக்கப் போட் டிக்கும்கூட தொடர்பிருக்க வாய்ப்புள்ளது'' என்றார்.