பி.மணி, குப்பம், சித்தூர்
நீட் தேர்வு விசயத்தில் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சித்து வருவது ஏற்புடையதுதானா?
ஏற்கவே முடியாது. தொடர்ந்து வஞ்சிக்க என்ன காரணம் என்ன என்பதை அடுத்த கேள்வி-பதிலில் கவனியுங்கள்.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
"நரேந்திர மோடி அவர்களே... எனக்கு உங்கள் புகழ்ச்சி வேண்டாம். மகாதய நதிநீர்ப் பிரச்சினையை தீர்த்து வையுங்கள்'’என்று கர்நாடகத் தேர்தலின்போது முன்னாள் பிரதமர் தேவகவுடா, இந்நாள் பிரதமரை நோக்கிச் சொன்னது பற்றி?
எல்லாமே அரசியல் கணக்குதான் என்பதை முன்னாள் பிரதமரும் இந்நாள் பிரதமரும் அறிவார்கள். தனது தயவு அவர்களுக்குத் தேவை என்றால், தனக்குப் பெயரும் அரசியல் லாபமும் தரும் கோரிக்கையை வைத்து காரியம் சாதிக்க வேண்டும் என்பதில் கணக்காக இருக்கிறார் முன்னாள் பிரதமர். இந்த அரசியல் கணக்கு, தமிழ்நாட்டு முதல்வருக்குத் தெரியவில்லை.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் மோடி 9-வது இடம் பிடித்துள்ளார்' என்கிறதே "ஃபோர்ப்ஸ்' இதழ்?
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்த சோனியா காந்தியை, உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக அதே ஃபோர்ப்ஸ் இதழ் பலமுறை குறிப்பிட்டுள்ளது. மாநில முதல்வராக இருந்தால், டாக்டர் பட்டம் கிடைப்பதும், பிரதமராகவோ ஆளுங்கட்சியின் தலைவராகவோ இருந்தால் உலகளாவிய "தகுதிகள்' கிடைப்பதும், அரசியலில் சகஜமப்பா.
ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்
கர்நாடக அரசியல் களத்தில் வருமான வரித்துறையினரால் கோடி கோடியாக பணம் கைப்பற்றியதைப் பார்த்தால் தமிழ்நாட்டுத் தேர்தலைப் போல் ஓட்டுக்கு நோட்டு என்ற நோய் தொற்றிக்கொண்டுவிட்டது போலத் தெரிகிறதே?
ஓட்டுக்கு நோட்டு என்பது ஏதோ தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல்வாதிகளின் கண்டுபிடிப்பு என்பது போன்ற போலித்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில், 21 வயது நிரம்பிய ஆண்-பெண் இருவருக்கும் வாக்குரிமை எனத் தீர்மானிக்கப்பட்டபோதே, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பதும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. பணப்புழக்கம் அதிகரித்த பிறகு, ஓட்டுக்கான நோட்டுகளின் எண்ணிக்கையும் கூடிவிட்டன. தமிழ்நாடு அதனை வெளிப்படையாக செயல்படுத்தி அவமானப்பட்டது. கர்நாடகா போன்ற மாநிலங்கள் இப்போதுதான் அம்பலப்படுகின்றன.
எஸ்.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்
எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலத்திற்குப் பின்பு வந்த கதாநாயக நடிகர்களின் ஆளுமைப் பண்பில் சந்தேகம் இருந்ததால்தான் டி.எம்.எஸ். போன்ற கம்பீரக்குரலை ஓரங்கட்டிவிட்டு, நளினத்துடன் பாடும் பின்னணிப் பாடகர்களை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தேர்ந்தெடுத்தனரோ?
கலை ரசனை என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். எம்.கே.தியாகராஜ பாகவதர்-பி.யு.சின்னப்பா போன்றவர்கள் சொந்தக்குரலில் பாடியபோது அதில் நளினம் இருந்தது. எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவரும் இரவல் குரலுக்கு வாயசைத்தவர்கள். அப்போது ஒரு மாற்றுக் குரலாக டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் குரல் பயன்பட்டது. தலைமுறை மாறிய நிலையில் ரஜினி-கமல் இருவரும் செல்வாக்குமிக்க நட்சத்திரங்களானபோது கம்பீரம் மட்டுமின்றி, கதையமைப்புக்கேற்ப நளினம்-குழைவு ஆகியவையும் பின்னணிக் குரலில் தேவைப்பட்டன. அப்போது எஸ்.பி.பி., யேசுதாஸ் போன்றவர்களை ரசிகர்கள் விரும்பினர். இன்றைய திரைத் தொழில்நுட்பமும் இசைக்கோ(ர்)ப்பும் குரல் வளம் கொண்ட எவரையும் எப்படியும் பாட வைத்து ரசிகர்களை ஈர்க்கச் செய்கின்றன.
வி.கார்மேகம், தேவகோட்டை
ஜெயலலிதா நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைய உள்ளதாமே?
ஊழல் சாம்பலிலிருந்து மீண்டும் மீண்டும்... உயிர்த்தெழுந்து மீண்டும் மீண்டும்... ஊழல் செய்து வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவருக்குப் பொருத்தமான வடிவம்தான்.
ஆன்மிக அரசியல்!
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பவுத்த விகாரங்களை இடித்து தரை மட்டம் செய்யப்பட்டபின்தான், இதர மத கோவில்கள் கட்டினார்கள் என்பது உண்மையா?
இந்திய நிலப்பரப்பில் அதிகாரம் செலுத்திய வேத மரபிற்கு அது வலியுறுத்திய வருணாசிரம தருமத்திற்கு, அதன் காரணமாக உருவான சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கும் மாற்றாக உருவானதே பவுத்த மதம். வருணாசிரம -வேத மரபுக்கு மாற்றாக சமண மதமும் தோன்றியது. தமிழ்நாடு உள்பட பல இடங்களிலும் சமணப் பள்ளிகள் அமைக்கப்பட்டு, துறவிகள் வாழ்ந்தனர். அதுபோலவே பவுத்த விகாரங்களும் கட்டப்பட்டு புத்த நெறி பரப்பப்பட்டது. இல்லற வாழ்வா -துறவற வாழ்வா எது சிறந்தது என சமயத் துறவிகள் தங்கள் கருத்துகளை முன்வைத்த நிலையில் புத்தரின் போதனைகள் இல்லறம் -துறவறம், உடல் -மனம், இன்பம் -துன்பம் இவற்றுக்கிடையிலான உறவை விளக்கி, மத்திய நிலையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியது. பவுத்த நெறிக்கு அசோகர் உள்ளிட்ட பல அரசர்கள் பெரும் துணையாக நின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட விகாரங்கள் பலவும் பிற்காலத்தில் வேதமரபைக் கடைப்பிடித்த மன்னர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, கோவில்களாகின. இப்போது இலங்கையிலும் மியான்மரிலும் பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்து புத்தவிகார்களை உருவாக்கும் பவுத்த துறவிகளின் மதவெறி போல!