கே.பாலசுப்ரமணியம், சோமையம்பாளையம், கோவை
சபாநாயகரின் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடாது என்றால், பின் யார்தான் தலையிட்டு சரி செய்வது?
சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்துக்கும், அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா என்பதற்குமான சர்ச்சை நெடுங்காலமாக நீடிக்கிறது. இது சரி செய்யப்படாவிட்டால், ஜனநாயகத்தின் தூண்கள் ஆட்டம் கண்டுவிடும்.
எஸ்.பூவேந்த அரசு, பொன்நகர், சின்னதாராபுரம்-639 202
தந்தை கலைஞர் போல, கேட்போரின் உள்ளங்களில் ஊடுருவி, சிந்தையைத் தட்டி எழுப்பும் வண்ணம் உரையாற்ற தனயன் ஸ்டாலினுக்கு இன்னும் கைவரவில்லையோ?
கலைஞரின் பிள்ளைகளில் யாருமே கலைஞரைப் போன்ற பேச்சாற்றலோ எழுத்தாற்றலோ கலையாற்றலோ கொண்டவர்கள் அல்ல. ஸ்டாலினைப் பொறுத்தவரை இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, கலைஞரைப் போல கட்சிக்கான உழைப்பை வெளிப்படுத்தி, கலைஞராலேயே பாராட்டுப் பெற்றிருக்கிறார். அண்மைக்காலத்தில் அவர் முன்னெடுத்த பல போராட்டங்கள் தமிழக அளவில் பெரும் வெற்றி பெற்றுள்ளன. அதற்கு தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பும் முழுமையாகக் கிடைத்தது. எனினும், அவற்றால் மத்திய-மாநில அரசுகளிடம் எந்தத் தாக்கமும் ஏற்படாத நிலையில், செயல் தலைவரான ஸ்டாலினிடம் மக்கள் எதிர்பார்ப்பது கலைஞரைப் போன்ற பேச்சை அல்ல, தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் செயலைத்தான்!
ஆர்.கார்த்திகேயன், அயனாவரம், சென்னை
ரூ.8 கோடி சம்பளம் வாங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, "நான் கையில் கட்டியது தாலியில்லை; திருஷ்டி கழிக்கும் பாசி; எனது திருமணம் ரகசியமாக நடக்காது' என்று தகவல் அனுப்பினாரே?
ஓ... 8 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை என்றால், கையில்கூட தாலி கட்டிக் கொள்ள முடியுமோ!
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
இன்றைய தமிழக தலைமுறையினருக்கு "வாசிப்பு ஆர்வம்' எந்த அளவு உள்ளது?
ஆண்-பெண் என்ற பேதமின்றி, சமத்துவத்துடன், எல்லா நேரத்திலும், எந்த இடத்திலும், வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல், விரல் தேயும் அளவுக்கு வாட்ஸ்ஆப் செய்திகளை வாசிக்கும் அளவுக்கு ஆர்வம் உள்ளது.
உமரி பொ.கணேசன், மும்பை-37
தேசிய திரைப்பட விழாவில் ஜனாதிபதி ஒரு சிலருக்கு மட்டும் விருது வழங்கிவிட்டு, மற்றவர்களுக்கு வழங்காதது ஏன்?
திரைப்பட நடிகைகள், தொழிலதிபர்கள் போன்ற ஒருசிலரை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர், காவிரி பிரச்சினைக்காக தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு நேரம் ஒதுக்காதது ஏன்?
பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர்
ஒருவர், தான் செய்யும் சாதனைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம்தான் விருது. அதுதான் அவரை மேலும் ஊக்கப்படுத்தும். அந்த விருதை உயிருடன் இருக்கும்பொழுது வழங்காமல், மறைந்தபின் வழங்குவதால் அவருக்கும் விருதுக்கும் என்ன பயன்?
அவருக்குப் பயன் இல்லை. ஆனால், மறைந்தும்கூட அந்த நபர், தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் என்பதால் விருதுக்குப் பெருமை.
அ.குணசேகரன், புவனகிரி
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் -புதுவை ஆளுநர் கிரண்பேடி ஓர் ஒப்பீடு செய்க.
கிரண்பேடி, புதுவையின் புரோகித். புரோகித், தமிழகத்தின் கிரண்பேடி. மத்திய அரசின் பிரதிநிதிகளான இருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதில் போட்டி போட்டு செயல்படுகிறார்கள். இடையிடையே, தனது பேச்சை மொழிபெயர்க்குமாறு புதுவை முதல்வரை கேட்டுக்கொள்ளும் கிரண்பேடி, எதிர்க்கட்சித் தலைவரை ராஜ்பவனுக்கு அழைத்து விளக்கம் தரும் புரோகித் என ஜனநாயக முகமூடிகளும் அணிந்துகொள்கிறார்கள்.
-----------------------
ஆன்மிக அரசியல்
வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17
இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களும் சரி, ஆண்ட கட்சிகளும் சரி.... "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற இறைவழிப்படித்தானே ஆட்சி செய்தும், செய்துகொண்டும் இருக்கிறார்கள். இதில் எங்கே ரஜினி கூறும் ஆன்மிக அரசியல்?
தமிழகத்தை ஆட்சி செய்தவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும்கூட தங்களுக்கென தனி குல தெய்வ வழிபாடு, ஊர் கோவில் திருவிழா எனத் தனித்தனியாகக் கொண்டாடினாலும், அடுத்தவர்களின் வழிபாட்டையும் மதித்து, எல்லாக் கடவுளும் ஒன்றே என்ற பண்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறார்கள். சிவ நெறியைப் பின்பற்றி, சிதம்பரம் நடராசரைப் பாடிய திருமூலர் சொன்ன வார்த்தைகள்தான், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதாகும். அதைத்தான் அறிஞர் அண்ணா, தேர்தல் அரசியல் களத்தில் தன் கொள்கையாக முன்வைத்தார். தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் -செய்பவர்கள் நாத்திகர்களாகவோ, ஆத்திகர்களாகவோ இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை மதித்ததுடன், தமிழ்நாட்டின் மண்ணுக்கே உரிய பண்பாட்டுடன் பக்திக்கான பாதையை வகுத்தார்கள். எனவேதான், வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கம் மிகுந்திருப்பதுடன், அவரவர் சமய நம்பிக்கையும் வழிபாட்டு முறையும் பிற சமயத்தவர்களால் மதிக்கப்படுகிறது. இதுதான் உண்மையான -சரியான ஆன்மிக அரசியல். இதைக் கடந்து ரஜினி சொல்லும் ஆன்மிக அரசியல் என்ன என்பது யாருக்கும் புரியவில்லை. ஒருவேளை, அவருக்கே புரியவில்லை என்பதால்தானோ என்னவோ, ஆன்மிக அரசியலுக்கான கட்சியைத் தொடங்குவதில் காலதாமதம் செய்கிறார் போலும்.