மா.சந்திரசேகர் மேட்டுமகாதானபுரம்

"கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வகுப்புவாதிகளுக்கு "லாலிபாப்' கொடுக்கிறது. பா.ஜ.க.வோ மக்களுக்கு வளர்ச்சியை மட்டுமே கொடுக்கிறது' என்கிறாரே பிரதமர்?

நாடு முழுவதும் தனது அரசு என்ன தருகிறதோ அதை கர்நாடகாவில் மட்டும் காங்கிரஸ் தருகிறது என ஒப்புக்கொள்கிறாரோ பிரதமர் மோடி!

அ.குணசேகர், புவனகிரி

Advertisment

தினகரனை ஓட ஓட விரட்டிய ஆர்.கே.நகர் மக்கள், ஊழல்வாதிகளை எப்போது அப்படி விரட்டுவார்கள்?

அப்படியென்றால் தினகரன் கொடுத்த டோக்கன் என்பது ஊழலன்றி, ஊழியமா? இன்றைய அரசியலில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஊழலில் டிரெய்னிங் எடுக்கும் கட்சிக்காரர்கள் ஏராளம். தினகரனுக்கு எதிரான ஆர்.கே.நகரின் கொந்தளிப்பு என்பது தன்னெழுச்சியானதல்ல; அதில் ஆளுங்கட்சியின் உபயமும் உண்டு.

mavalianswers

Advertisment

ஏழாயிரம் பண்ணை எம். செல்லையா, சாத்தூர்

என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம்,கே.ஏ.தங்கவேலு-எம்.சரோஜா, ஏ.கருணாநிதி-டி.பி.முத்துலட்சுமி, நாகேஷ்-மனோரமா, நாகேஷ்-சச்சு, வடிவேலு-கோவை சரளா. நகைச்சுவை ஜோடி என்றதும் நினைவில் நிற்பது எந்த ஜோடி?

தமிழ்த் திரையுலகில் ஹீரோக்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் மதிப்பு, காமெடியன்களுக்கும் காலம்தோறும் இருக்கிறது. ஜோடி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்திரபாபு, சுருளிராஜன், கவுண்டமணி, விவேக், சந்தானம் என... பலரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். நகைச்சுவைக் காட்சிகளில் இணைந்து நடித்த ஜோடிகளுக்கும் இந்தப் பெருமை உண்டு. அதில், திரையிலும் வாழ்விலும் ஜோடியாக இருந்து சமூகப் பங்களிப்பிலும் முத்திரை பதித்த கலைவாணர் என்.எஸ்.கே-டி.ஏ.மதுரம் ஜோடியே நம்பர் 1.

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக சேரும் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்ற கிராம மக்களின் அறிவிப்பு எப்படி?

ஓட்டுக்குப் பணம் கொடுத்து பழக்கப்பட்ட மாநிலத்தில், படிப்புக்கு பரிசுகள் தரப்படுவதில் எந்தத் தப்பும் இல்லை. அதுவும் அரசு நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளை புறக்கணிப்பதே கௌரவம் என நினைக்கும் மக்களிடம், ஊக்கத்தொகை மூலமும் தங்க நாணயம் மூலமும் மனமாற்றத்தை ஏற்படுத்த முடிகிறதென்றால், அது வரவேற்புக்குரியது. படிக்கப் போகும்போதே தங்கம் கிடைக்கிறதே, படித்து முடித்து வேலைக்குப் போனபிறகு, என்னென்ன கிடைக்கும் என லஞ்சக்கணக்கு போடாதவரை எல்லாம் நன்மைக்கே.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

உலகில் சுற்றுச்சூழல் மாசு படிந்த 20 நகரங்களில் 14 இந்திய நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றனவே?

உலகமே பிரம்மாண்ட பாலிதீன் குப்பைக்கவராக மாறியிருக்கிறது. இதில் இந்தியாவின் நகரங்கள் மட்டும் தப்பிக்க முடியுமா? புனிதமான கங்கையை சுத்தப்படுத்த போட்ட திட்டங்களும் -ஒதுக்கப்பட்ட கோடிகளும் ஊழல் மாசுபடிந்த நிலையில், மற்றவற்றின் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ப.பாலா(எ) பாலசுப்ரமணி, பாகாநத்தம்

சமீபகாலமாக நீதித்துறையில் நீதிபதிகள் மீது நீதிபதிகளே புகார் கூறுவது பற்றி?

நீதிதேவதையின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் கறுப்புத்துணி, கந்தலாகிவிடாதபடி அடிக்கடி மாற்றப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

ஆன்மிக அரசியல்

girivalam

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலமா? மங்கலதேவி கண்ணகி கோட்டமா? ஆன்மிக அரசியல் எந்தப் பக்கம் நிற்கிறது?

20 லட்சம் பக்தர்களுக்கு மேல் கிரிவலம் வந்தார்கள் என்கிறது அரசு புள்ளி விவரம். 20 ஆயிரம் பேருக்கு மேல் போக முடியாத சூழலில் இருக்கிறது கண்ணகி கோட்டம். மாதந்தோறும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் போக முடியும். கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு சித்திரை மாத பவுர்ணமி நாளில் மட்டும்தான் தமிழர்களுக்கு அனுமதி. கிரிவலம் என்பது புராணத்தில் தொடங்கி, சித்தர்கள் வழி வந்து, யோகா மகத்துவம் வரை பல கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. கண்ணகி கோட்டம் என்பது தமிழரின் தொல்மரபு வழிபாட்டு முறை. கிரிவலப்பாதைக்கு அரசாங்கமே வசதி செய்து கொடுக்கிறது. திரையுலகப் பிரபலங்கள் போன்ற ஆன்மிக அன்பர்களும் கூடுதல் உதவிகளைச் செய்கிறார்கள். கண்ணகி கோட்டத்திற்கு செல்வது என்பது சட்டரீதியாகப் பெற வேண்டிய உரிமை. அதில் அரசாங்கமே கவலைப்படாதபோது, தனிப்பட்ட ஆன்மிக அன்பர்களால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது. கிரிவலப்பாதையின் மையப்புள்ளியாக உள்ள அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரம், திருப்பணியின்போது விரிசல் விட்டது பெரும் விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. விரிசலடைந்து-சிதிலமாகிக் கிடக்கும் கண்ணகி கோவிலுக்குத் திருப்பணி செய்யும் அறிகுறியே இல்லை. கிரிவலம் என்பது வசதியான தரைப்பாதை. கண்ணகி கோட்டம் என்பது கடினமான மலைப்பாதை. கடினமானதை எளிமையாக்கும் சக்தி கொண்ட அரசியலே மக்களிடம் செல்வாக்கு பெறும். ஆன்மிக அரசியலுக்கும் அது பொருந்தும்.