எஸ்.மந்திரமூர்த்தி, புவனகிரி
ஜார்கண்டில் பா.ஜ.க. ஆட்சியமைந்தால் ஊழல்வாதிகளை தலைகீழாகத் தொங்கவிடுவோம் என்று அமித்ஷா கூறியிருக்கிறாரே?
அதிருக்கட்டும். முதலில் பிற கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் சேர்ந்தவர்கள் பலர் மீதும் மிகப் மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர்களை அமித்ஷா என்ன செய்தார் என்பதை விளக்கிவிட்டு, ஜார்கண்ட் ஊழல்வாதிகளை தலைகீழாகத் தொங்க விடட்டும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
இளம்வயதினர் கட்டிப்பிடித்து முத்தமிடுவது குற்றமில்லை என உயர்நீதிமன்றம் கூறியிருக் கிறதே?
காதலிக்கும்போது தன்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பழகிவிட்டு பின் தன்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக பெண் ணொருவர், தூத்துக்குடி இளைஞர் ஒருவர் மீது, உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த கருத்து. அத்தை பெண்ணை காதலித்திருந்தால்கூட அப்பா- அம்மாவுக்குப் பிடிக்கவில்லை எனில் வேறொரு பெண்ணைக் கட்டிவைத்த காலத்திலிருந்து, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பழக்கத்திலேயே காதலிக்கும் வேறொரு காலகட்டத்துக்கு வந்திருக்கிறோம். அதற்கேற்ப உலக மதிப்பீடுகளும் மாறத்தானே செய்யும். ஒருவேளை பாலியல் உறவுவரை போயிருந்தால், நீதிபதியின் கருத்து மாறுபட்டி ருக்கலாம். விரல்களைக்கூட தொடாமல் காதலிக்க இதென்ன பாகவதர் காலத்துக் காதலா!
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
58 வயது மைக் டைசனும் 27 வயது ஜேக் பாலும் மோதிக்கொண்ட குத்துச்சண்டை போட்டியைப் பார்த்தீர்களா?
பார்க்கவில்லை. ஆனால் அதுபற்றிய செய்திகளை நிறைய வாசித்தேன். தற்போது மைக் டைசன் -ஜேக் பால் சண்டையே முன்கூட்டி திரைக்கதை எழுதி வைக்கப்பட்டு ஜேக் பாலிடம் மைக் டைசன் தோற்றார் என ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், உறுதியான ஆதாரங்கள் எதுவும் வரவில்லை. டைசனின் வயதில் பாதிதான் ஜேக் பாலுக்கு. ஆனால், வெற்றிபெற்ற ஜேக் பாலுக்கு 320 கோடி. டைசனுக்கு 160 கோடி. கிட்டத்தட்ட நெட்பிளிக்ஸில் நேரலையின்போது மட்டும் 28 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். நெட்பிளிக்ஸும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கணிசமான லாபம் பார்த்திருப்பார்கள். வரிந்து கட்டிக்கொண்டு பார்க்கவும், பேசவும் செய்த நமக்குத்தான் சில்லறை ஆதாயம்கூட இல்லை.
தே. மாதவராஜ், கோயம்புத்தூர்
மணிப்பூர் கலவரத்தை ஒடுக்க இந்தியாவில் யாருமே இல்லையா?
ஏற்கெனவே வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர் போன்றவை சென்சிட்டிவானவை. அங்கே இத்தனை பெரிய பிரச்சனை கிளம்ப சம்பந்தப்பட்ட மாநில அரசும் ஒன்றிய அரசும் அனுமதித்திருக்கக்கூடாது. கலவரத்துக்குப்பிறகும் கடந்த இரண்டு வருடங்களாக அந்த விவகாரம் சரிவரக் கையாளப்படவில்லை.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு தரவேண்டுமென்ற கோரிக்கை பற்றி?
எதற்கு என்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள் என்றால் சிறப்பாயிருந்திருக்கும்! மோடியின் குஜராத் ஆட்சிக் காலத்தில் நடந்த கலவரத்துக்காகவா? காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டு, அம்மாநிலத்தின் பெரும்பகுதி மக்களை கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளே சிறை வைத்திருந்ததற்காகவா?, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்போது நாடு முழுவதும் போராடிய மக்களை ஒடுக்கியதற்காகவா?, இரண்டு கட்ட விவசாயிகள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தபோதும், அவர்களது போராட்டத்தின் அடிப்படைக் கோரிக் கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத தற்காகவா?
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
குப்பையை விற்றதில் 2,364 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றுள்ளாரே அமைச்சர் ஜிதேந்திர சிங்?
அது குப்பையில்லை. அலுவலக பயன்பாட்டுக் கழிவுகளில் வேண்டாதவை. அதில் தேவையற்ற காகிதங்கள், கோப்புகள் போன்றவை இருக்கும். இது மூன்றாண்டுகளில் கிடைத்த வருமானம். நல்ல முயற்சிதான். குப்பையில் கோடி பார்க்கும் அதே அரசுதான், அரசு நிறுவனங்களின் பங்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக விற்று மெல்ல மெல்ல தனியார்மயமாக்கப் பார்க்கிறது. குப்பையில் வருமானம் பார்க்கத் தெரிந்த அரசுக்கு, அரசு நிறுவனங்களை வைத்து மட்டும் ஏன் வருமானம் பார்க்கத் தெரியவில்லை?
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தமிழர்களிடம் பறிக்கப்பட்ட நிலம் அவர் களிடமே ஒப்படைக்கப்படும் என்கிறாரே இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக?
அது இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக செய்யப்பட்ட அறிவிப்பாயிருக்கும். இப்போது அனுரகுமார திசநாயக கட்சியின், ஹரிணி அமர சூரியா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் அல்லவா! இனி எத்தனை வேகமாக ஜனாதிபதி, தமிழக மக்களிடம் நிலங்களை ஒப்படைக்கிறார் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!