ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
"காவிரி பிரச்சினைக்காக எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணியாது' என்று சபாநாயகர் தம்பிதுரை கூறுகிறாரே?
டெல்லிவரை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ""பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை'' என்று டெல்லியிலிருந்தே சொல்லியிருக்கிறார். நேரம் வாங்கக்கூட திறனும் மதிப்பும் இல்லாமல் எப்போதோ அடிபணிந்து விட்டவர்கள், காவிரி பிரச்சினைக்காக புதிதாக அடிபணிய மாட்டோம் என்ற அர்த்தத்தில் சபாநாயகர் சொல்லியிருப்பாரோ!
சி.கார்த்திகேயன், சாத்தூர்
மாநிலக் கட்சிகளை மோடி ஒன்றுசேர்த்து விடுவார் போலிருக்கிறதே?
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளால் உரிமைகள் பறிக்கப்படும் மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகள், ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு வலிமைபெற்று பலன் தர வேண்டுமென்றால், தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்துவிட்டு, மாநிலக் கட்சிகள் உருவாக்கும் அணியால் பலன் கிடைக்காது. அது தேசிய அளவிலான மக்கள் நலக்கூட்டணியாகிவிடும். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி கட்சியே ஆட்சி அமைக்கும். அதைத்தான் மோடியும் விரும்புகிறார்.
வி.கார்மேகம், தேவகோட்டை
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தண்ணீர் இல்லை என்று கைவிரிக்கிறாரே கர்நாடக முதல்வர் சித்தராமையா?
அதே உச்சநீதிமன்றம் 6 வார கெடு கொடுத்தும் மேலாண்மை வாரியமும் அமைக்காமல், ஸ்கீம் என்றால் என்னவென்றே "தெரியாமல்', வரைவு அறிக்கையும் தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என யோசித்திருப்பார் சித்தராமையா. அதனால்தான் தனக்கு முந்தைய ஜனதாதள முதல்வர் தேவகவுடா, பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா ஆகியோர் வழியையே பின்பற்றுகிறார் காங்கிரஸ் முதல்வரான சித்தராமையா. காவிரியில் தமிழ்நாட்டிற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமையை உச்சநீதிமன்றம் கையிலெடுத்து செயல்படாவிட்டால் மோடியும் சித்தராமையாவும் தமிழக விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
உலக அழகி டயானா ஹெய்டன் குறித்து திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் விமர்சனம் செய்திருக்கிறாரே?
திரிபுராவை ஆளும் முதல்வர் யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறார்? அரசாங்கத்திடம் வேலை கேட்கும் இளைஞர்கள் அதற்குப் பதிலாக மாடு வளர்க்கலாம், பன்றி மேய்க்கலாம் என்றார். தனக்கு எதிராகச் செயல்படுபவர்களின் நகத்தை நறுக்குவேன் என்றார். மகாபாரத காலத்தில் இன்டர்நெட், வைஃபை இருந்தது என்றார். அந்தக் காலத்துப் பெண்கள் ஷாம்பூ போடவில்லை என்றும் மண்ணைப் பூசி குளித்து அழகாக இருந்தார்கள் என்றும், தற்போது தெருமுனைக்கு ஒரு பியூட்டி பார்லர் இருப்பதாகவும் சொன்ன திரிபுரா முதல்வர், உலக அழகிப் போட்டி என்பதே வணிகச் சந்தைக்கான மோசடி என்றும், இந்தியாவைச் சேர்ந்த டயானா ஹெய்டனெல்லாம் உலக அழகியாவார் என்றும் நீங்கள் எதிர்பார்த்தீர்களா என்று விமர்சித்திருக்கிறார். வாயை மூடுங்கப்பா என்று மோடி தலைப்பாடாக அடித்துக்கொண்டும் வம்பிழுக்கிறார். மக்களைப் பற்றிச் சிந்தித்த எளிமையின் சிகரம் மாணிக் சர்க்கார் ஆட்சி செய்த மண்ணில், அவரையடுத்து இப்படி ஒரு பிப்லப்.
உமரி பொ.கணேசன், மும்பை-37
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திசைமாறிச் செல்கிறதே?
தெரிந்ததுதானே என்கிறார்களாம் சம்பந்தப்பட்டவர்கள்.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
வரும் காலத்தில் நிர்மலாதேவியும் அரசியல் கட்சி ஆரம்பித்துவிடுவாரா?
அதற்கான தகுதிகள் அனைத்தும் உள்ளன. ஆனாலும், கட்சி ஆரம்பிக்காமலேயே அதிகார மையத்தில் காரியம் சாதிப்பது எப்படி என்பது நிர்மலாதேவிகளுக்குத் தெரியும்
---------------------------------------------
ஆன்மிக அரசியல்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஆன்மிக அரசியல் மூலம் ஏழை-பணக்காரன் என்கிற பாகுபாடற்ற தரிசனம் ஆலயங்களில் ஏற்படுத்தப்படுமா?
ஏழைக்கு ஒரு வரிசையில் தரிசனம், பணக்காரர்களுக்கு இன்னொரு வழியில் தரிசனம், உயர்குலத்தாருக்கு கருவறை வரை அனுமதி, பிற குலத்தாருக்கோ பிரகாரத்துக்கு வருவதே பெருமை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் என்றால் கோவில் இருக்கும் தெருவிலேயே நடக்க அனுமதியில்லை என்ற பாகுபாடெல்லாம் காலம் காலமாக இருந்து வந்த ஆன்மிக அரசியல்தானே! இதனை உடைத்து நொறுக்க பக்தியாளர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவாளர்களும் தீவிரமாகப் பாடுபட்டார்கள். தொன்றுதொட்டு வரும் புனிதமான வழக்கம் என்ற பெயரில் ஆன்மிக நடைமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அரசியல் செய்தால் ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்ற பாகுபாடு தொடர்ந்துகொண்டே இருக்கும். அனைவரையும் சமமாக ஆண்டவன் படைத்திருக்கிறார் என்றால், அவர் முன்னாலேயே ஏன் இந்த பாகுபாடு என்ற கேள்வி, காஞ்சி மடத்திற்குள் நுழையும்போதும் எவர் மனதில் தோன்றுகிறதோ, அவரால்தான் பாகுபாடற்ற தரிசனத்தை வலியுறுத்தும் ஆன்மிக அரசியலைக் கையில் எடுக்க முடியும். பக்தி -பரிகாரம் -யோகம் -தியானம் -ஜோதிடம் இவை மட்டுமே ஆன்மிகம் என நம்பி அரசியல் செய்பவர்களால் கடவுள் சன்னதியில் காட்டப்படும் ஏற்றத்தாழ்வை மாற்ற முடியாது.