சி. கார்த்திகேயன், சாத்தூர்
பிரியங்கா காந்தி வசமாகுமா வயநாடு?
அதைத் தீர்மானிக்கவேண்டியது வயநாடு தொகுதி மக்கள். இரண்டு தொகுதியில் போட்டியிட்ட ராகுல், ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, வயநாடு தொகுதியில் பெற்ற வெற்றியைக் கைவிட்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ஜ.க.வும் வயநாட்டை ராகுல் கைகழுவிவிட்டதாக பிரச்சாரம் செய்யும். ராகுலும் அசராமல், "இனி வயநாடுக்கு இரு எம்.பி.க்கள். ஒருவர் அதிகாரப்பூர்வமானவர். மற்றவர் அதிகாரப்பூர்வமற்றவர். நாங்கள் இருவரும் வயநாட்டின் மேம்பாட்டுக்காக வேலைசெய்வோம்'’ என சென்டிமெண்ட லாகப் பேசியிருக்கிறார். மக்கள் என்ன நினைக்கிறார் களெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
வாசுதேவன், பெங்களூரு
2027-ல் விண்வெளி சுற்றுலாவிற்கான முதல் பயணத்தின் ஒரு டிக்கெட்டின் மதிப்பு ஒரு கோடியே 77 லட்ச ரூபாயாமே..?
தீபாவளி நேரத்தில் தனியார்ப் பேருந்துகள் கேட்கும் பேராசைத் தொகையைக் கட்டியே நம்மால் ஊர் போகமுடியவில்லை. தேஜஸ் போன்ற ரயில்களின் மும்மடங்குக் கட்டணத்தைப் பார்த்துவிட்டு, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் கோச் கிடைத்துவிடாதா என ஏங்குகிறோம். 30 லட்சமிருந் தால் ஒரு ப்ளாட் வாங்கிவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகி விடலாமென நினைப்பவர் கள்தான் அதிகம். நமக் கெல்லாம் விண்வெளி சுற்றுலா கனவில்மட்டும் தான். அதெல்லாம் அதானி, அம்பானி மாதிரி கோடீஸ்வரக் குடும்பங்கள் காணவேண்டிய கனவு.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
மொழி அரசியலிலிருந்து தி.மு.க.வினர் வெளியே வரவேண்டும் என்கிறாரே தமிழிசை?
பா.ஜ.க. இந்துத்துவ அரசியலிலிருந்து வெளியே வந்துவிட்டதா? பிறகென்ன உரிமையில் மொழி அரசியலிலிருந்து தி.மு.க.வை வெளியேறக் கேட்கிறார் தமிழிசை. தவிரவும், தமிழ்த்தாய் வாழ்த்தின் பாட்டு வரிகளைக் கத்தரித்து மொழி அரசியல் பண்ணியவர்களிடம் வைக்கவேண்டிய விண்ணப்பத்தை, இடம்மாறி வைத்திருக்கிறார் தமிழிசை. யார் அவருக்கு எடுத்துச்சொல்வது?
எச்.மோகன், மன்னார்குடி
தமிழ்நாட்டில் இனி ஜாதிக் கட்சிகளின் நிலை என்ன ஆகும்?
இப்பவும் பெரிய கட்சிகள், எந்தத் தொகுதியில் எந்த ஜாதிக்கு வலு அதிகம் என்று பார்த்துதானே வேட்பாளர்களை நிறுத்துகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, அரசியலில் சாதிகளின் செல்வாக்கு வலுவிழக்கும் நாள் தென்படவில்லை. அப்படியொரு சாதனை இருக்கிறதா என்ன? எல்லா சாதனைகளும், அதனை மிஞ்ச இன்னொரு சாதனையாளர் வரும் வரைதான்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
நான் சராசரி நடிகைதான் என்று நடிகை சமந்தா கூறுவது சரியா?
தன்னடக்கத்துக்காகக் கூறியிருப்பார். உண்மையிலும் வணிக வெற்றிப் படங்களில்தான் சமந்தா நடித்திருக்கிறாரே தவிர, காலத்தை வென்று நிற்கக்கூடிய படங்களில் நடித்ததில்லை. தன்னுடைய ஸ்கின் பிரச்சனைகளுக்கு நடுவில் மனம்தளர்ந்துவிடாமல் நம்பிக்கையைப் பேணிவருகிறாரே! அது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
இந்தியாவின் கனவுகள் நனவாகும்வரை ஓய்வெடுக்கமாட்டேன் என்று மோடி பேசியிருக்கிறாரே?
ஆட்சிக்கு வந்த கையோடு, பா.ஜ.க.வில் 70 வயதுக்கு மேலானவர்கள் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவரே மோடிதான். சொன்னதோடு நில்லாமல் மூத்த தலைவர்கள் பலரை மெல்ல மெல்ல ஆக்டிவ் அரசியலிலிருந்து ஓய்வுகொடுத்து அனுப்பிவைத்தார். இப்போது அவருக்கு 74 வயதாகிறது. இன்னும் ஓய்வுபெற மனம் வரவில்லை. அத்தோடு இந்தியாவின் கனவுகள் நனவாகும் வரை ஓய்வெடுக்கமாட்டேன் என்று பேசியிருக்கிறார். அதாவது வி.ஆர்.எஸ். மூடில் இல்லையெனத் தெரிவித்திருக்கிறார்.
ப.அந்தோணி, மதுரை
இந்தியாவில் ஜல்லிக்கட்டை தடைசெய்த பீட்டா அமைப்பு, வெளிநாட்டில் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறது?
அழகுக் கலை சந்தையாளர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நீடித்த அழகுக்கு இதுதான் காரணமென ஒவ்வொரு முறையும் ஒன்றை மாற்றிக்கொண்டிருப்பார்கள். சமீபத்திய பேஷன் என்ன தெரியுமா? நீடித்த அழகுக்கும், தோலின் பொலிவுக்கும், இளமை நீடிப்புக்கும் சால்மன் மீனின் விந்தணுக்களைக் கொண்டு பேஷியல் செய்து கொள்வதுதான். ஹாலிவுட் நடிகைகளான கிம் கர்தார்ஷியன், ஜெனிபர் அனிஸ்டன் இருவரும் சமீபத்தில் இந்த சால்மன் ஸ்பெர்ம் பேஷியல் மேற்கொண்ட செய்திகள் உலகமெங்கும் ஊடகங் களில் வலம்வந்தன. அதையொட்டி பீட்டா அமைப்பு இவர்கள் இருவரையும், இந்த விளம்பரங்களை மேற்கொள்ளும் அழகுக் கலை சந்தையாளர் களையும் கண்டித்துள்ளது. சால்மன் மீனென்ன, ஹாலிவுட் நடிகைகளை அழகாக்குவதற்கா தாதுவிருத்தி செய்கிறது?