ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடாது என்று எம்.பி. ரஷீத் வேண்டுகோள் விடுத்துள்ளாரே...?
370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என பிரச்சாரம் செய்து வெற்றிபெற்ற கையுடன், “மத்திய அரசுடன் நல்லுறவை மேற் கொண்டால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும் என்றும், 370-வது சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்படும் என்பதை நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் கிடையாது” என்றும் உமர் அப்துல்லா பேசியிருக்கும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை.
என். இளங்கோவன், மயிலாடுதுறை
ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும், கூடாது என்று ஜோ பைடனும் கூறுகிறார்களே?
கொரில்லா குரங்குக்கு ஒரு குவளை மதுவும் ஊற்றிக் கொடுத்து, ஒரு சுருட்டையும் புகைக்கக் கொடுத்து, கடைசியில் ஒரு பச்சை மிளகாயையும் கடிக்க வைத்தால் எப்படி நடந்து கொள்ளுமோ, அதற்கிணையாக தேர்தலில் வெற்றிபெறுவதற்காக முரட்டு பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு பெயர்போனவர் ட்ரம்ப். அவர் பேச்சைப் பொருட்படுத்தக்கூடாது.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு வைப்பது குற்றமல்ல. இதை எதிர்க்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பது பற்றி?
இதுதொடர்பாக பல வழக்கு கள் உயர்நீதிமன்றத்துக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் வந்த நிலையில், உச்சநீதிமன்றம் இதில் மத்திய அரசின் கருத்தென்ன என கேட்டிருந்தது. அப்போது தான், கணவன்- மனைவிக்குள் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. அந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை பெண்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறி தன் தரப்பு விளக்கத்தை அளித்திருந்தது. ஆனால், மனைவியோ, கணவனோ யாராயிருந்தாலும் வலுவில் உறவுகொள்வது தவறானது என்பதுதான் மாவலியின் கருத்து. ஒருவேளை தம்பதியில் யாராவதொருவர் போதிய தாம்பத்ய சுகம் அளிக்கவில்லையெனக் கருதினால், அந்த பந்தத்தை ரத்துசெய்து விட்டு, புதிய திருமண உறவுக்குள் செல்லவேண்டியதுதான்.
வாசுதேவன், பெங்களூரு
டெண்டுல்கரின் ரிக்கார்டை நெருங் கும் ஜோ ரூட்?
சாதனைகளே முறியடிக்கப்படத்தான். சச்சினின் டெஸ்ட் ரன்கள் 15,291. சச்சினுக்கும்- ஜோ ரூட்டுக்கும் இடையில் இன்னும் 3,500 ரன்கள் இருக்கின்றன. டெஸ்ட் சதக் கணக்கிலும் இன்னும் 15 சதங்களை அடித்தால்தான் சச்சினுக்கு இணையாக வரமுடியும். அதற்கு இன்னும் நாலைந்து ஆண்டுகள் இதே வேகத்துடன் ஆடவேண்டும். அப்படி சாதித்தால் நாம் சந்தோஷமாக அவரைப் பாராட்டவேண்டுமே தவிர, சச்சினை விஞ்சிவிட்டாரே என பொறாமைப்படக்கூடாது.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
ஹரியானா வெற்றிக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். என கூறப்படுகிறதே?
ஹரியானா வெற்றி மட்டுமில்லை, பா.ஜ.க.வின் அத்தனை வெற்றியின் பின்னணி யிலும் ஆர்.எஸ்.எஸ். உண்டு. கூடவே பா.ஜ.க. இந்த பத்தாண்டுகளில் சேர்த்துவைத்திருக் கும் ஆயிரக்கணக்கான கோடிகள், மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பதன் சௌகரியம், பா.ஜ.க.வுக்கு தலையாட்டும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் உண்டு.
எம்.செந்தில்குமார், புதுச்சேரி
முரசொலி செல்வம் என்றதும் நினைவுக்கு வருவது?
1992-ல், தமிழக சட்டமன்றத்தில் அன்றைய எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி பேசுகிறார். ஆனால் அன்று மதியமே அப்போதைய சபாநாயகர் பரிதியின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிடுகிறார். அப்போது முரசொலி ஆசிரியராக இருந்த செல்வம் முரசொலியில் பரிதியின் பேச்சின் சாராம்சத்தைப் பதிப்பித்துவிடுகிறார். சபாநாயகர், பரிதி பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதை தாமத மாகத் தெரியவந்த அவர், சென்னைப் பதிப்பில் அந்தச் செய்தியை நீக்கிவிடுகிறார். இதற்கெதிராக தமிழக சட்டமன்றம் உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்து முரசொலி செல்வத்தை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறது. விவகாரம் நீதிமன்றம் சென்று உச்சநீதிமன்றம் வரை போகிறது. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட மறுத்து சபாநாயகரிடம் அந்த விவகாரத்தை விட்டுவிட்டது உச்ச நீதிமன்றம். சட்டமன்றத்தில் விளக்கம் கேட்க அழைக்கப்படு கிறார் முரசொலி செல்வம். இவருக்காகவே ஸ்பெஷலாக விசாரணைக் கூண்டு போன்ற ஏற்பாடுகளையெல்லாம் செய்திருந்தது ஜெ. அரசு. அந்தக் கூண்டிலேற்றிய பின்பும் உரிய விளக்கத்தை அளித்தாரே தவிர, மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார் செல்வம். இதனால் முரசொலி செல்வம் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றம்போல விசாரணைக் கூண்டு தயாரித்து அதில் முரசொலி செல்வத்தை ஏற்றிய ஜெ.வின் பிடிவாதமும், தன் முடிவில் உறுதியாக இருந்த முரசொலி செல்வத்தின் மன உறுதியும்தான் நினைவுக்கு வருகிறது.