அ.யாழினிபர்வதம், சென்னை. 78.

பா.ஜ.க.வும் தி.மு.க.வும் கார்ப்பரேட் கம்பெனிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே?

இருக்கட்டும், அ.தி.மு.க. என்ன பெட்டிக்கடையா இல்லை நடைபாதையில் துண்டுவிரித்து சரக்கை அடுக்கி விற்கும் பாதையோரக் கடையா? அதுவும் இன்னொரு கார்ப்பரேட் கடைதான். இன்றைய தேதியில் சாமானியர் கட்சி ஆரம்பிக்க முடியாது. அத்தனை காஸ்ட்லியான விவகாரமாகி விட்டது. டெபாஸிட் தொகையை மட்டும் ஐந்தாறு மடங்கு ஏற்றிவிட்டார்களெனில் சுயேட்சையாகப் போட்டியிடக்கூட முடியாது.

nn

Advertisment

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

சென்னையில் நாம் இருவரும் சேர்ந்து எப்பொழுது சைக்கிள் ஓட்டலாம் என ஸ்டாலினிடம் ராகுல்காந்தி கேட்டுள்ளாரே...?

2026 சட்டமன்றத் தேர்தல் வருகிறதல்லவா! அப்போது ஓட்டுங்கள்! சைக்கிள் ஓட்டியதுக்கு சைக்கிள் ஓட்டியதுபோலும் ஆச்சு! பிரச்சாரத்துக்கு பிரச்சாரமும் செய்ததுபோல் ஆச்சு! ஆனால் வாசன் வந்து, ஸ்டாலினும் ராகுலும் த.மா.கா.வுக்கு ஓட்டுக் கேட்கிறார்கள் என அவர் கட்சிக்கு மைலேஜ் தேற்றி விடக்கூடாது!

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையில் இளைஞர்களே நம் இலக்கு என மோடி கூறியிருக்கிறாரே?

மற்ற கட்சியில் எல்லாம் வயதானவர்களை சேர்ப்பதை இலக்காக வைத்து செயல்படுகிறார்களா என்ன!

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

உயிருள்ளவரை ஜெகன்மோகன் ரெட்டிக் காகவே பணியாற்றுவேன்.. என்கிறாரே நடிகை ரோஜா..?

roja

கடந்த ஆட்சியில் ரோஜா பேசிய பேச்சுக்கு தெலுகு தேசம் கட்சி அலுவலகம் பக்கம்கூட போகமுடியாது. பிறகெங்கு கட்சி தாவ... அப்படியே ஜெகன்மோகன் பக்கமிருந்து அடுத்து ஐந்து வருடத்தில் அலை மாறுகிறதா என காத்திருக்க வேண்டியதுதான்.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர் களுக்கு இலங்கை நீதிமன்றம் தலா ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதே.. மீனவர்கள் எப்போது கோடீஸ்வரர்கள் ஆனார்கள்?

அதுதானே! தமிழக மீனவர்களின் பிழைப்பைக் கெடுப்பதை இலக்காக வைத்து இலங்கை அரசு செயல்படுகிறது. அவர்களின் படகை பறிமுதல் செய்வது, வலைகளை அறுப்பது, படகைச் சேதப்படுத்துவது தொடர்கிறது. கூடவே கடல் கொள்ளையர்களும். தமிழக அரசின் பெயர் கெடட்டும் என்பதற்காகவே ஒன்றிய அரசு கள்ள மௌனம் சாதிக்கிறதுபோல! காங்கிரஸை கச்சத்தீவு விவகாரத்தில் குறை சொல்லும் பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர் விவகாரத்தில் தலைநிமிர்த்திப் பேசுமளவுக்கு என்ன செய்திருக்கிறது?

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வாங்கிக்கொடுப்பதாக ராகுல் காந்தி எப்படி கூறினார்?

எப்படியும் மத்தியில் ஆட்சிக்கு வருவோம்! அப் போது பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை திரும்பத் தந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான். தவிர, பா.ஜ.க.வே, மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது தற்காலிகமாகத்தான் என்று சொல்லிக்கொண்டி ருக்கிறதே தவிர, நிரந்தரம் என்று சொல்ல வில்லையே. தேர்தல் வாக்குறுதி என வரும்போது, வானவில்லை வில்லாக்கி… வைகுந்தத்தை சுற்றுலாத்தலமாக்கி என என்னவேண்டுமானாலும் பேசலாம். மக்கள் உங்கள் பேச்சை நம்பவேண்டும்... அவ்வளவுதான்!

தெய்வானை குமரன், ஈரோடு.

தி.மு.க. கட்சியினர் ஆத்திகம் பற்றிப் பேசலாமா?

நமக்கு உள்ள பேச்சு உரிமை அவர்களுக்கும் உள்ளதுதானே! திடீரென பா.ஜ.க.வினர் நாத்திகம் பேசினால் என்ன நினைப்பீர்கள்?… அதேதான். அப்படிப் பேசுபவர் சாமானியத் தொண்டராக இருந்தால் பரவாயில்லை. தலைவர்களாக இருந்தால் கட்சியின் மீதான நம்பகத்தன்மை குறையும்.

எச்.மோகன், மன்னார்குடி

கட்சித் தொண்டனுக்கும் சினிமா ரசிகனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?

மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள், கமல், ரஜினி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், விஜயகாந்த், தற்போது விஜய் ரசிகர்கள் பின்னாளில் தொண்டர்களாக மாறியிருக்கிறார்கள். அதை வைத்துப் பார்த்தால் ரசிகன் ஜூனியர், தொண்டன் சீனியர். ரசிகனாவதென்பது பணியில் சேர்வது. தொண்டராவதென்பது பதவி உயர்வு!

வண்ணை கணேசன், கொளத்தூர்

ஓசூரை கர்நாடகத்துடன் இணைக்கக் கோரி கன்னட அமைப்புகள் சாலை மறியல் செய்கின்றனவே?

நாமும் இங்கே பெங்களூரை தமிழகத்துடன் இணைக்க பதிலுக்குப் போராட்டம் நடத்தினால் சரியாகிவிடும்.

ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு

பெண்ணியம் பேசுவதுபோல் ஏன் யாரும் ஆணியம் பேசுவதில்லை?

இன்னும் அந்தளவுக்கு ஆண்களின் நிலைமை அத்தனை மோசமாக மாறிவிடவில்லை.