தே.மாதவராஜ், கோயமுத்தூர்

பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? ஆட்சியைக் கவிழ்க்க ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா?

எல்லா மாநிலங்களிலுமே மக்கள் திரள் போராட்டம் செய்யும்போது அங்கே எதிர்க்கட்சிகளும் வந்து இணைந்துகொள்ளும். அதில் உண்மையிலேயே அறம்சார்ந்த அக்கறையும் இருக்கலாம். எப்போது பிரச்சனை வரும், அதைப் பெரிதாக்கி ஆளும்கட்சிக்கு இக்கட்டை உருவாக்கலாம் என்ற சுயநலக் கணக்கும் இருக்கலாம். 2011-ல் அன்னா ஹசாரேவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான போராட்டம், தானாகப் பெரிதானதாக நினைக்கிறீர்களா? பா.ஜ.க. மாணவரணியினரான ஏ.பி.வி.பி.யினர், பதஞ்சலி ராம்தேவ் உள்ளிட்ட தலைகள் தட்டுப்பட்டது, அப்போது தான் பரிட்சயமாகி வந்த சமூக ஊடகத் தளங்களை திட்டமிட்டுப் பயன்படுத்திய பா.ஜ.க.வின் வியூகம் எனப் பலவும் அந்தப் போராட்டத்தின் பின்னால் உண்டு. அது 2014 தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தப் பயன்பட்டது. மேற்குவங்கப் போராட்டம் தன்னெழுச்சியாய் வெடித் திருக்கலாம். அது நீடிப்பதற்குப் பின்னால் அம்மாநில எதிர்க்கட்சி களின் பங்கு கணிசமாக உண்டு.

mm

Advertisment

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகை கங்கனா ரனாவத்துக்கு பா.ஜ.க. தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதே?

Advertisment

ஏற்கெனவே விவசாயிகள் போராட்டம் செய்த இரு முறையும் பா.ஜ.க.வின் பெயர் ரிப்பேரானதுதான் மிச்சம். எந்தத் தாக்குதலுக்கும் நெருக்கடிக்கும் அசராத விவசாயிகளின் மன உறுதியை நேரடியாகவே பா.ஜ.க. பார்த்திருக்கிறது. அப்படியிருக்க, வேலியில் போகும் ஓணானைப் பிடித்து, பா.ஜ.க.வின் வேட்டிக்குள் விடும் ரனாவத்தை தலைமை சும்மா வேடிக்கை பார்க்குமா!

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

உத்திரப்பிரதேசத்தில் காணாமல்போன மொபைலைக் கண்டுபிடிக்க போலீஸ் ஜிலேபி கேட்டிருப்பது பற்றி?

உத்திரப்பிரதேசமோ... தட்சிணப்பிரதேசமோ, நீங்கள் போலீசுக்குப் போனால், குறைந்தபட்சம் பேனா, பேப்பர், ஸ்கெட்ச், ஸ்டேஷனில் உள்ளவர் களுக்கு டீ, வடைகூட வாங்கிக் கொடுக்காமல் வந்துவிடமுடியுமா? உங்கள் வழக்கில் காவல் துறை பிரத்யேக கவனம் செலுத்தவேண்டும் என்றால் என்ன செய்கிறீர்கள்? மக்கள் நலக் குறியீட்டிலும், உயர்கல்வியிலும் முன்னணியில் இருக்கும் தமிழகத்தி லேயே இப்படியென்றால், உத்தரப்பிரதேசத்தில் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

மைனாரிட்டி ஆட்சியை 5 வருடங்களுக்கு காப்பாற்றிக்கொள்ள தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்கவேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது என்கிறாரே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

கிடாவுக்கும், மறிக்கும் வித்தியாசம் தெரியாத பா.ஜ.க. தலைவர், அ.தி.மு.க. தலைவரின் இமேஜையும் மதிப்பையும் கணக்கில்கொள்ளாமல் அவர் மீது வைத்த விமர்சனத்தைவிட, ஜெயக்குமார் நாகரிகமாகவும், பகுத்தறிவுடன்தான் விமர்சனம் வைத்திருக்கிறார்.

mm

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

விஜய்யின் புதிய கட்சி தி.மு.க. அரசுக்கு சவாலாக இருக்குமா..?

விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பது வாஸ்தவம்தான். தொண்டர்கள் இருக்கிறார்களா என்பது களத்தில் இறங்கி தேர்தலைச் சந்தித்தால்தான் தெரியும். இந்த மாநாட்டுப் பரபரப் பெல்லாம் முடிந்து தேர்தலைச் சந்திக்கட்டும். அந்தக் கட்சி தி.மு.க.வுக்கு மட்டும் தலைவலியா? இல்லை அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசுக்கும் தலைவலியா என்பதை அலசலாம்.

பி. ரமேஷ், உளுந்தூர்பேட்டை

குரங்கு, பூனைகளுக்கு அப்பம் பங்கிட்ட கதை என்ன?

அது சிறுவர்களுக்கான கதைப் புத்தகத்தில் இருக்கும், தேடிப் படித்துக் கொள்ளுங்கள். அதுபோல சமீபத்தில் நடந்த ஒரு கதையை நான் சொல்கிறேன். மதுரையைச் சேர்ந்த ராஜேஷுக்கும் அபிநயாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். இருவருமே தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள். இருவருக்கும் ஒத்துப்போக வில்லை. பரஸ்பரம் பிரிந்துபோவதற்குப் பதில், காவல் நிலையத்துக்குச் சென்றனர். இருவரையும் இன்ஸ் பெக்டர் கீதா விசாரித்தார். அபிநயா, தன் கணவன் ராஜேஷ் திருமணத்தின் போது போட்ட நகையைத் திருப்பித் தரவில்லை எனச் சொல்ல, சில நாட்களில் ராஜேஷ் 102 சவரன் நகையைக் கொண்டுவந்து இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். கீதாவோ, நகையை அபிநயாவிடம் ஒப்படைக்காமல், கொண்டுபோய் அடகுக் கடையில் வைத்துவிட்டார். இப்போது குட்டு அம்பலமாகி கீதா சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். விவகாரம் அம்பலமான பிறகும், 64 சவரன் நகையைத்தான் திருப்பித் தந்திருக்கிறார். மீதி 38 சவரன் நகை, கீதாவின் கடனுக்காக, அடகுக் கடைக்கு செட்டில் செய்தாகிவிட்டது. இப்போது கீதாவை, அபிநயாவின் புகாரின்பேரில் காவல்துறை கைது செய்திருக்கிறது.