எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறாரே.. குஷ்பூ?
குஷ்பூ, மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணியில் ஆர்வம்காட்டப் போவதாக காரணம் தெரி வித்துள்ளார். ஆனால், ராஜ்கமல் என்னும் பேராசிரியர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பி லிருப்பவர், ஒரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கலாமா... அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்மேல் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என கேள்வி யெழுப்பியிருக்கிறார். அதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அவருக்குப் பதிலளிக்கப் படவில்லை. அவரும் விடாமல், இந்த விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இந்தநிலையில்தான் குஷ்பு தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
தே.மாதவன், கோயமுத்தூர்
ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம்கூட வாங்காத இந்தியாவை உலக நாடுகள் எப்படி பார்க்கும்?
ஒலிம்பிக் தங்கம் கௌரவமானதுதான். ஒரு நாட்டின் மதிப்பை உயர்த்தக்கூடியதுதான். ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்காத காரணத்தால் ஒரு நாட்டின் மதிப்பு குறைந்துவிடுவதில்லை. யதார்த்தத்தில், ஒரு நாட்டின் ராணுவ வலிமையும், பொருளாதார பலமும் அந்நாட்டின் கௌரவத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், ராணுவ வலிமையில் நான்காவது பெரிய நாடாகவும் மதிப்பிடப்படுகிறது.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலுள்ள அனைத்துப் பெண் களுக்கும் பாரபட்ச மின்றி மாதம் 2,500 ரூபாய் வழங்கப் படும் என்று முன் னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளாரே...?
அதுசரி, அவர்கள் 1,000 என்றால், இவர்கள் 2,500. பெண்களின் ஓட்டு என்றால் சும்மாவா! பெண்களும் விடக்கூடாது. 5,000 ரூபாயும், மெட்ரோ, புறநகர் ரயிலில் இலவசப் பயணமும் கொடுக்கும் கட்சிக்குத்தான் ஓட்டு என்று உறுதியாக அறிவித்துவிடவேண்டும்.
கே.சுரேஷ், மேற்கு மாம்பலம்
மேற்கு வங்காளத்தில் பயிற்சி மருத்துவ மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நிறைய சந்தேகங்கள் எழுகிறதே?
கே.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர், மற்றும் பெருந்தலைகள் அந்தக் கல்லூரி மாணவியின் மரணத்தை தற்கொலை போல மாற்ற தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக முதலில் தகவல்கள் வந்தன. இன்னொருபுறம், எப்படா மம்தா சிக்குவார் எனக் காத்திருந்த பா.ஜ.க., இந்த விவகாரத்தில் போராட்டம் நடக்கும் இடங்களில் தங்கள் தொண்டர்களை திரளாக அனுப்பி, கலவரமாக மாற்றி சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயல்வதாக மேற்கு வங்க காவல்துறை குற்றம்சாட்டுகிறது. தண்ணீரும், நிகழ்வுகளும் கலங்கலாக இருக்கும்போது, தெளிவு வரும் வரை பொறுமையாகக் காத்திருக்கவேண்டியதுதான்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
சுதந்திர தின விழாவில் ராகுலுக்கு பின் வரிசையில் இடமளித்திருப்பது குறித்து?
ராகுலையும் காங்கிரஸையும், ஆரம்பம் முதலே பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இல்லாமல், எதிரிக் கட்சி யாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய அணுகுமுறையால், ராகுல்மீதுதான் அனுதாபம் பிறக்கும். ஆனால், சில விஷயங்களை தெரிந்தே செய்வதில் பா.ஜ.க.வினர் சமர்த்தர்கள். நாம் இந்த அற்ப விவகாரத்தை விவாதித்து சர்ச்சை செய்துகொண்டிருக்கையில் பின்புறமாக, மிக ஆபத்தான விஷயங்களை விவாதமின்றி நகர்த்திச் சென்றுவிடுவார்கள்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை
ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் சில ரயில்வே திட்டங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே... இந்த தொகையில் என்ன பணி நடக்கும்?
யாராவது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என நாக்கின் மீது பல்போட்டு பேசிவிடக்கூடாதல்லவா, அதற்குத்தான். முதலில் அறிவித்த தொகை 2,214 கோடி. இறுதிசெய்யப்பட்ட தொகை 1,928 கோடி. திண்டிவனம்- திருவண்ணாமலை, அத்திப்பட்டு- புத்தூர் திட்டங்களுக்குத்தான் இந்த 1000 ரூபாய் ஒதுக்கீடு. வீடு பார்க்கப் போகும்போது, டோக்கன் அட்வான்ஸ் கொடுப்பதில்லையா... அதுபோல. எப்படியும் அடுத்த அல்லது அதற்கடுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிவிடுவார்கள். ஒரு கண்ணில் வெண் ணெய். மறுகண்ணில் சுண்ணாம்பு. அதுவும் சுண் ணாம்பைத் தடவாமல் அள்ளி அள்ளி வைக்கிறார்கள்.
சி. அருண்பிரகாஷ், கரூர்
தமிழ்ப் படங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருதுகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதே?
சர்ச்சை கிளம்பாமலிருந்தால்தான் ஆச்சர்யம்!