வாசுதேவன், பெங்களூரு
என்னிடம் ஒருமுறை ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள். 77 ஆண்டுகளாக தமிழகத்தில் யாரும் செய்யாத சாதனையை நான் செய்துகாட்டுகிறேன் என்கிறாரே, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்?
ஒருமுறை ஒரு கிராமத்துக்குள் நுழைந்த மல்யுத்த வீரன், என் வயிறு நிறைய சாப்பாடு மட்டும் போடுங்கள். உங்கள் ஊரின் கிழக்கிலிருக்கும் மலையைத் தூக்கிக் காட்டுகிறேன் என்றானாம். ஒருவேளை சாப்பாடுதானே என கிராம மக்களும் முட்டை, கோழியென அவர்களால் ஆன பெரிய விருந்தை வைத்தார்களாம். விருந்தைச் சாப்பிட்டு வெற்றிலையும் போட்டு, ஏப்பம் விட்டபடி வந்த மல்யுத்த வீரன் மலையடிவாரத்தில் சுமை தூக்க ஆயத்தமான தோரணையில் அமர்ந்து, “"நான் ரெடி, மலையைத் தூக்கி தோளில் வையுங்கள்!'” என்றானாம். முன்வரிசைக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளுமளவு மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் சாதனையை அன்புமணி செய்துகாட்டட்டும். பிறகு எந்தக் கட்சியும் செய்யாத சாதனையையும் அன்புமணி நிகழ்த்தட்டும்! யாராவது ஆட்சியை தாம்பாளத்தில் வைத்துக்கொடுங்கள்,… நான் சாதனை நிகழ்த்துவேன் என்பது வெறும் பேச்சு.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
2024-க்கான மத்திய பட்ஜெட் எப்படியிருக்கும்?
பொதுவாக ஒரு அரசு ஆட்சிக்கு வரும்போதும், ஆட்சிக் காலம் முடிந்து தேர்தல் நெருங்கும்போதும் வரும் பட்ஜெட், கூடுதல் வரிகள் ஏதுமின்றி, சலுகைகள் நிறைந்ததாக இருக்கும். அத்துடன், பா.ஜ.க. இந்த முறை கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கெடுபிடியான பட்ஜெட்டாக இருக்காது. பட்ஜெட்டுக்கு முன்பு கிண்டப்படும் அல்வாவை நிதியமைச்சர், நிதித்துறை அமைச்சரக ஊழியர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, மக்களுக்குத் தரமாட்டார் என எதிர்பார்ப்போம்.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை
இந்த ஆண்டு நடந்துமுடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறிவிட்டதே?
ஒன்றிய அரசு ஆயிரம் கூறும். தீர்ப்பு தரவேண்டியது நீதிபதிகள் அல்லவா! குஜராத், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் என திரும்பும் பக்கமெல்லாம் நீட் வினாத்தாள் கசிவும், கருணை மதிப்பெண் ஊழல்களும் நடந்து தேர்வில் குளறுபடியும் மோசடியும் நடந்திருப்பது அப்பட்டமாயிருக்கிறது. இதற்கு மறுதேர்வு ஒன்றே நியாயமான தீர்வாக அமையும். அத்துடன் டொனேஷன் கொடுத்து எம்.பி.பி.எஸ். சேர்பவர்கள் அடிப்படைப் பாடங்களில் 0 மதிப்பெண்கள் பெற்றாலும் இடமுண்டு என்ற நடைமுறையையும் உச்சநீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். அதற்கும் அப்பால், நீட் தேர்வு தேவையா என்பதே நம் அடிப்படைக் கேள்வி.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
தமிழகத்தில் தின மும் ஒரு கொலை நடக்கிறதே?
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் என்றொரு அரசு அமைப்பு இருக்கிறது. இது மாநிலங்களில் நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு இவற்றைப் பதிவுசெய்து எந்தெந்த மாநி லத்தில் எத்தனை கொலை, திருட்டு, பெண் களுக்கு எதிரான குற்றங்கள், தலித் துகளுக்கு எதிரான குற்றங்கள், பழங்குடி களுக்கு எதிரான குற்றங்கள் என வரிசைப்படுத்தும். அதில் 2023-ல், மாநிலவாரியாக தமிழகம் முதல் 10 இடங்களைத் தாண்டி பின்னால் தான் வருகிறது. ஆனால் முன்னணி நகரங்களைக் கணக்கிலெடுக்கும் போது டெல்லிக்கு அடுத்தபடியாக குற்றம் நிகழும் நகராக சென்னை வருகிறது. தமிழக அரசு கொஞ்சம் சுதாரிக்கத்தான் வேண்டும்.
ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
தண்டச்சோறு என்றுதான் எல்லோரும் சொல்கிறார்களே தவிர தண்டச்சாதம் என்று சொல்வ தில்லையே?
சிந்தனையெல்லாம் பலமாகத் தான் இருக்கிறது. உங்கள் அலை வரிசைக்கே வருகிறேன். இளநீரில் இருப்பது இளநீர் என்றால், தேங்காயில் இருப்பதை முதுநீர் என்று சொல்வதில்லையே ஏன்?
ப.சவீதா, பெசண்ட் நகர்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதற்கு உதாரணம்?
இந்தியா, ஆப்கானிஸ்தானை விட மிகப் பெரிய நாடு. பொருளா தாரத்தில் உலகின் 5-வது பெரிய நாடு. இந்தியாவின் ஜி.டி.பி. தோராயமாக ஆண்டுக்கு 3,502 பில்லியன் டாலர்கள். மாறாக, ஆப் கானிஸ்தான் அதன் ஜி.டி.பி. மதிப் பீட்டின்படி உலக நாடுகள் வரிசை யில் 124-வது இடத்தில் உள்ளது. அதன் ஜி.டி.பி. 14.58 பில்லியன்தான். ஆனால், 1 டாலரை வாங்கவேண்டு மென்றால் அதற்கு நிகராகக் கொடுக்க வேண்டிய இந்திய ரூபாய் 83.49. மாறாக, 1 டாலரை வாங்க ஆப்கானி யர்கள் 71.07 ஆப்கன் கரன்சி கொடுத்தால் போதும். அதாவது, இந்திய ரூபாயைவிட ஆப்கன் கரன்சிக்கு மதிப்பு அதிகம்.