mavali answers

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

இனிமேலாவது இந்தியாவில் நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுவார்களா...?

Advertisment

இனிமேலாவது என்றால் என்ன அர்த்தம்? உண்மையிலேயே நீதியின்மேல் மதிப்பும் மரியாதையும், சட்டத்தை தன் உயிருக்கு நிகராக மதிக்கும் எந்த நீதிபதியும் எத்தனை பெரிய கொம்பர்கள் ஆட்சிக்கு வந்தாலும், தன் பணியில் சுதந்திரமாகவே செயல்படுவார்கள். அத்தகைய நீதிபதிகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள். தன் அடிப்படைக் கடமையிலிருந்து நழுவுபவர்களைப் பற்றி பேச என்ன இருக்கிறது?

Advertisment

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பெரும்பான்மையும் ஒத்துழைப்பும் முக்கியம் என்று கூறுகிறாரே மோடி...?

முதலில் தங்கள் கட்சி வசம் இல்லாதது மோடியின் நினைவுக்கு வந்திருக்கிறது. அதனால் ஏக்கத்துடன் பெரும்பான்மையைக் கூறியிருக்கிறார். அது இல்லாத நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு முக்கியமில்லையா? பா.ஜ.க. ஒத்துழைத்தால், கூட்டணிக் கட்சியினரும் ஒத்துழைப்பார்கள். ஆனால், அதை எதிர்க்கட்சியினரிடம் எதிர்பார்க்கமுடியாது.

என். இளங்கோவன், மயிலாடுதுறை

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு எழுபது சதவீதம் குறைந்துவிட்டதாமே?

ஆமாம். அந்த செய்தி மாவலியின் கண்களிலும் பட்டது. ஆனால், மோடி நமக்குத் தந்த உறுதிமொழி சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்கள் செய்த கருப்புப் பண முதலீட்டைக் கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகும். அப்படி எதுவும் நடந்த மாதிரி மாவலிக்கு நினைவில்லை. இந்தியர்களின் வருவாய் குறைந்து, சுவிஸ் வங்கிகளில் போட்டதை எடுத்துச் செலவழித்துவிட்டார்களா… இல்லை ஸ்விஸ் வங்கிகளைவிட நம்பகமான வேறு இடங்களுக்கு அதனை மாற்றிவிட்டார்களா? என்பதுதான் மாவலிக்குத் தெளிவாகவில்லை.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

நடிகர் விஜய் தன் கடைசி படத்திற்கு தன் தந்தையை ஏன் இயக்குனராக தேர்வுசெய்யவில்லை?

தளபதியின் சினிமா கேரியரைத் தொடங்கி வைத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் என்றால் எத்தனை மரியாதையாக இருக்கிறது. பதிலாக, தளபதியின் சினிமா கேரியரை முடித்துவைத்தவர் எஸ்.ஏ. சந்திரசகேரன் என்றால், கேட்பதற்கு நன்றாகவா இருக்கிறது!

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"நாடாளுமன்றத்தில் இனி ஆதரவு இல்லை' என்று நவீன் பட்நாயக் கூறியிருக்கிறாரே?

கடந்த பத்தாண்டுகளாக நாடாளுமன்றத்தில் மோடி அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களுக்கு ஆமாம் சாமி போடும் வேலையைத்தான் பி.ஜே.டி. உறுப்பினர்கள் செய்துவந்தனர். இத்தனை அனுசரணையாக இருந்தும், பி.ஜே.டி. மீது அபாண்டப் பழிகளைச் சுமத்தி, பூரி ஜெகந்நாதரை கொள்ளையடித்தவராகவும், மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பை வேற்று மாநிலத்தவரிடம் தூக்கிக்கொடுத்தவராகவும் குற்றம்சாட்டி ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிவிட்டது பா.ஜ.க. இனி அங்கே உறவுக்கு எங்கே இடமிருக்கிறது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த பி.ஜே.டி. எதிர்க்கட்சியாகிவிட்டது. மத்தியில் மட்டும் பா.ஜ.க.வுக்கு ஏன் வால்பிடிக்கவேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் நவீன் பட்நாயக்.

வண்ணை கணேசன், கொளத்தூர்

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் அதைப் பற்றி யோசிக்காமல் சிரித்த முகத்துடன் இருக்கிறாரே ஓ.பி.எஸ்.?

முதல் மரியாதை படத்தில், பூங்காற்று திரும்புமா பாடலில் ஒரு வரி வரும். ‘உள்ளே அழுகிறேன்… வெளியே சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்’-னு. அரசியல் களத்தின் சிவாஜிகணேசனாக வேஷம் கட்டிக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.

எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு

ஆங்கில மோகமும், ஆங்கிலப் பள்ளி மோகமும் தற்கொலைக்குச் சமம் என்று என்.சி.இ.ஆர்.டி. தலைவர் டி.டி. சக்லானி கூறியிருப்பது வரவேற்கத்தக்கதா?

இந்தித் திணிப்பும், வலுவில் அதை நம் தலையில் கட்டப் பார்ப்பதும் கொலைக்குச் சமம். காங்கிரஸôகட்டும், பா.ஜ.க. ஆகட்டும், இந்திய மக்களின் தலையில் விலைபோகாத இந்தியை கடந்த 60 ஆண்டுகளாக திணிப்பதற்குப் பதில், அந்த நான்கு மாநிலங்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமே!

ப.வினோத், திருவண்ணாமலை

கேரளா என இருந்ததை கேரளம் என அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளதே அம்மாநில அரசு?

ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்ப இருக்கும் எத்தனையோ பெயர்கள் அவர்கள் சொந்த மொழி உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன. ஒரிஸô என இருந்தது தற்போது ஒடிஸô ஆகவில்லையா! டூட்டிகொரினைவிட தூத்துக்குடி என உச்சரிக்கும்போது நன்றாக இருக்கிறதல்லவா!