எஸ். நிக்கில்குமார், இராமேஸ்வரம்
கல்வி ஒருவருக்குக் கற்றுக்கொடுப்பது என்ன?
சுருக்கமாகச் சொல்வதெனில், வாழ்வில் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என கற்றுத் தருவதே சரியான கல்வி. விழிப்பாக இருக்கும் மனிதன் தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை கற்றுக்கொள்கிறான். சரியான கல்வியென்பது, ஒருவன் தன்னையறிய கற்றுத் தருவதேயாகும்.
ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
ஊடகங்கள் சார்புத்தன்மையோடு செயல்படுகின்றன. அதனால்தான் பத்திரிகை யாளர்கள் சந்திப்பைத் தவிர்க்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளாரே?
மோடி மேடைகளில் வீராவேசமாகப் பேசுவார் என்று தெரியும். விதவிதமான உடைகளில் அசத்துவார். டெலிப்ராம்ட் துணையோடு தமிழ், ஆங்கிலம், தெலுங்கெல்லாம் பேசுவார். ஆனால் இத்தனை நன்றாக காமெடி செய்வார் என்பது மாவலிக்கு இப்போதுதான் தெரியும்.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருதினை இப்போது கொடுத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என்கிறாரே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்?
உயிருடன் இருக்கும்போது பத்மபூஷன் விருது கொடுத்திருந் தால் பொருத்தமானதாக இருக்கும் என சீமான் நினைக்கலாம். ஆனால் பத்மபூஷன் விருதுக்கான தேர்வுக் குழுவினர் அவர் உயிரோடு இருந்தபோது அப்படி நினைக்கவில்லை போலிருக்கிறதே. பருவம் வரும்போதே பழம் பழுக்கும் என்பது பழமொழி.
ப.அஜித், விருகம்பாக்கம்
கேன்ஸ் பட விழாவில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலா 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நகையை அணிந்துவந்திருக்கிறாரே?
கூந்தல் இருக்கிற சீமாட்டி அள்ளிமுடிகிறாள். ஒரு பாலிவுட் நட்சத்திரத்துக்கு ஆஸ்கார், கேன்ஸ் விருதுபோன்ற சர்வதேச விருதுவிழாவில் கலந்துகொள்வது மறக்கமுடியாத நிகழ்வு. அதற்காக எத்தனை சிறப்பாகச் செல்லமுடியுமோ, அத்தனை சிறப்பாகத்தான் செல்வார். ஊர்வசி ரவுதேலா, லா மார்க்குயிஸ் பிராண்ட் நகையை அணிந்தது பிரச்சனையா, அல்லது அத்தனை மதிப்புள்ள நகை அவருக்கு எப்படி கிடைத்தது என்பது பிரச்சனையா? சம்பந்தப்பட்ட நகை நிறுவனமே, விளம்பரத்துக்காக அவரை அணியச் சொல்லியிருக்கலாம். விருது நிகழ்வுக்குப்பின் இந்திய ஊடகம் முழுவதும் இந்தப் புகைப்படம் இடம்பெறும். பேசப்படும்.… அதுபோன்ற காஸ்ட்லி நகையை அணிய மேல்தட்டு வர்க்கத்தினர் தூண்டப் படுவர் என்ற கணக்கெல்லாம் நகை நிறுவனத்துக்கு இருக்கலாம்.
ச.பாலகிருஷ்ணன், மும்பை
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் விபத்துக்குப் பின்னால், இஸ்ரேல் இருக்கக்கூடும்தானே?
நீங்களே இவ்வளவு நுணுக்கமாக யோசிக்கும்போது, ஈரான் உளவுத்துறை யோசிக்காதா! இஸ்ரேல் இதுபோல பட்டவர்த்தனமாக ஒரு நாட்டின் அதிபரைக் கொலைசெய்யும் முயற்சியில் இறங்காது. அது அம்பலமானால் சர்வதேச அளவில் பெரிய பிரச்சனையை உருவாக்கும். ஈரான் அதிகாரவர்க்கமும் உரிய ஆதாரம் இல்லாமல் வெளிப்படையாக அப்படி குற்றம்சொல்லிப் பேசாது. ஒருவேளை நிஜமாகவே இதற்குப் பின்னால் இஸ்ரேல் இருந்து, அது ஈரானுக்குத் தெரியவந்தால் இந்தப் பிரச்சனை இத்துடன் முடியாது. எதிர்காலத்திலும் நீடிக்கும்.
க.சந்திரகலா, சிவகிரி
ஐ.ஐ.டி.யுடன் இணைந்து இசை கற்றுத்தரும் மையம் ஒன்றை இளையராஜா அமைக்க உள்ளாராமே?
நல்ல விஷயம்தான். ஆனால் இளையராஜா எந்த மையத்தில் இசை பயின்று இசைக் கலைஞரானார்? யாரிடம் பயில்கிறோம், என்ன கற்றுத் தரப்படுகிறது என்பதைப் போலவே, எத்தனை அர்ப் பணிப்புடன், எவ்வளவு லட்சிய வேகத்துடன் ஒருவர் கற்றுக்கொள் கிறார் என்பதும் முக்கியம். அது இருந்தால், இளையராஜாவிடம் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாத ஒருவரும் மாபெரும் இசைக் கலைஞராக முடியும்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
பூரி ஜெகன்னாதர் ஆலய பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவி தமிழ் நாட்டுக்குப் போய்விட்டதாக மோடி கூறுகிறாரே..?
அவர் அதுமட்டுமா கூறுகிறார். தென்மாநிலங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் உத்தரபிரதேச மாநில மக்களைத் தவறாகப் பேசுவதாகக் கூறுகிறார். அவர்களிடம் தென் மாநிலத்தவர்கள் தவறாக நடந்து கொள்வதாகப் பேசுகிறார். உண் மையில், மரியாதை, கண்ணியம், நாகரிகம் போன்ற நல்ல பண்பு களுக்கான சாவியைத்தான் மோடி தொலைத்து விட்டார்.