வாசுதேவன், பெங்களூரு
கரும்பு ஜூஸ் குடிப்பது உடலுக்கு நலமாமே?
கரும்பு ஜூஸ் குடிப்பது, ஆப்பிள் ரசம் சாப்பிடுவது, க்ரீன் டீ சாப்பிடுவது என உடல் நலத்தைத் தரும் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. மனிதன் உணவாக உண்ணும் ஒவ்வொரு உணவுப்பொருளுமே புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள், வயதாவதைத் தடுக்கும் பொருட்கள் என மனிதனுக்கு நன்மைசெய்யும் பொருட்களைக் கொண்டுள்ளன. அதற்காக முற்றிய சர்க்கரை நோயுள்ளவர் கரும்பு ஜூஸ் குடிக்கமுடியுமா? நமது பிரச்சனைகளைத் தெரிந்து, அதைத் தூண்டும் உணவுப் பொருளைத் தவிர்க்கவேண் டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதை எப்போ தும் நினைவில் வைத்துக்கொண்டால் எந்தக் கேடும் வராது.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
அதானி, அம்பானிபோல மாற நான் என்ன செய்யவேண்டும்?
பெயரில் மட்டும் அதானி, அம்பானிபோல மாறவேண்டு மென்றால் கெஜட்டில் விண்ணப்பித்து பேர் மாற்றிக்கொண்டால் போதும். நிஜமாகவே அவர்களைப் போல் மாறவேண்டுமென்றால், நிற்கும்போதும், நடக்கும்போதும், உறங்கும்போதும் வியாபார வாய்ப்புகளை யோசிக்கும் மூளையைக் கொண்டிருக்கவேண்டும். அதைவிட முக்கியமாக உங்களின் நலனைப் பற்றி யோசிக்கும் ஒரு பிரதமரின் நட்பை சம்பாதித்திருக்கவேண்டும்.
ப.சரவணன், கரூர்
கதையில் டர்னிங் பாயிண்ட் என்கிறார் களே... அதற்கொரு உதாரணம்?
ஓர் பந்தயத் திடலில் மிகப் பெரிய பரிசுடன் போட்டியொன்று நடத்தப்பட்டது. ஒரு கூடாரம்... அதில் சேற்றிலும், அசிங்கத்திலும் புரண்ட பன்றியொன்று. அதனுடன் பத்து நிமிடம் செலவிடு பவருக்கு பரிசுத்தொகை. பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாய் என்பதால் பலரும் பேராசையுடன் முண்டியடித்துக்கொண்டு வந்தனர். ஆனால் ஓரிரு நிமிடத்துக்குள்ளே அலறியடித்துக்கொண்டு வெளியேறிவிட்ட னர். யாராலும் ஜெயிக்கமுடியாத நிலையில் அந்த ஊரின் மிகப்பெரிய அரசியல்வாதி வந்தார். பந்தயம் நடத்துபவர்களிடம் நான் கலந்துகொள்ளலாமா எனக் கேட்டார். அவர்களும், தாராளமாக என்றனர். வீறாப்பாக நடையிட்டு கூடாரத்துக்குள் சென்றார். இரண்டே நிமிடம். அலறியடித்துக்கொண்டு பன்றி வெளியே வந்துவிட்டது.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
அறிவு- கற்பனை! எது ஒரு மனிதனுக்கு வேண்டும்?
ஏன், இரண்டும் இருந்தால் என்ன! முதலில் ஒரு விஷயத்தை கற்பனை செய்கிறான் மனிதன். பின், அதனை அறிவை துணைகொண்டு உழைத்து அதைச் சாத்தியமாக்குகிறான். நாமும் பறந்துபோகச் சாத்தியமிருந்தால் எப்படியிருக்கும் என்று காலகாலமாக மனிதன் ஏங்கினான். பின் தன் படைப்புகளில் கடவுளர்கள் புஷ்பக விமானங்களிலும், பறவைகள் மீதமர்ந் தும் பறப்பதாக கற்பனை செய்தான். சில ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் விமா னங்களையே கண்டுபிடிக்கும் அளவுக்கு தன் அறிவை வளர்த்துக்கொண்டான். கடவுளுக்கும் தேவர்க்கும் மட்டுமே சாத்தியமாக இருந்த புஷ்பக விமானங்களைவிடவும் சொகுசான விமானங்கள் இன்று மனிதனின் கையில் உண்டு.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரின் 25,000 கோடி சொசைட்டி ஊழலை பா.ஜ.க. முடித்து வைத்துவிட்டதே?
அதெல்லாம் முடித்து வைக்காது. கூட்டணியில் இருக்கும் வரை அந்த வழக்கை நோண்டாது. கூட்டணியை விட்டு அஜித் பவார் வெளியேறினால் புதிதாக அந்த வழக்கை விசாரிக்க அனுமதி பெற்று மீண்டும் விசாரிக்கும். வழக்குகளை தனக்கு ஆதாயம்தரும் அட்சயபாத்திரமாக மாற்றுவதில் எந்தக் கட்சியைவிடவும் பா.ஜ.க. கைதேர்ந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் வழக்கைத் தூண்டிலாகப் போட்டே எதிர்க்கட்சிகளின் பிரபலங்களை தன் அணியில் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இல்லை, அவர்களை சிறையில் அடைத்திருக்கிறது. இதை எந்த அரசியல் ஆய்வாளராவது எடுத்துக்கொண்டு ஆராய்ந்தாலே நிச்சயம் சுவாரஸியமான ஒரு நூல் கிடைக்கும்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
காங்கிரஸும் மார்க்ஸிஸ்ட்டும் பா.ஜ.க.வின் இரு கண்கள், அவர்களுக்குப் போடும் ஓட்டு பா.ஜ.க.விற்குப் போய்ச் சேரும் என்ற மம்தாவின் குற்றச்சாட்டு?
மேற்கு வங்கத்தில் மும்முனைப் போட்டி. திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கூட்டணி போட்டியிடுகின்றன. அதனால் தனக்கு எதிரான ஓட்டுகள் காங்கிரஸ் கூட்டணிக்குப் போய் விடக்கூடாதென்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசுவார். மம்தாவுக்கு வாக்களித்துவிட்டால் மட்டும் அவர் தனியாக மத்தியில் ஆட்சியமைத்துவிட முடியுமா? இந்த இருவரில் ஒருவருக்கு தானே ஆதரவளிக்கமுடியும். பிறகெதற்கு வெட்டிப்பேச்சு!