மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"ஊழல் செய்தால் சிறை உறுதி என்பது எனது உத்தரவாதம்' என்கிறாரே பிரதமர் மோடி?

கிருபாசங்கர் சிங், ஜனார்த்தன ரெட்டி, நாராயண் ரானே, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா, சுவேந்து அதிகாரி, அஜித்பவார், அஜித் பவார் மனைவி சுனேத்ரா என நீளும் பட்டியலில் பாதிப் பேரையாவது சிறையிலடைக்கட்டும். அப்புறம் நம்புகிறோம்.

எம். கல்யாணசுந்தரம், கும்பகோணம்

Advertisment

குஜராத் பா.ஜ.க.வின் சூரத் ஆட்டம் எப்படி?

முதல் பார்வைக்கு சிக்ஸர் போலத்தான் தோன்றியது. கூடவே, தேர்தல் கமிஷன் எனும் அம்பயர்களும் துணைக்கு இருப்பதாகத் தெரிந்தது. பிறகுதான் காங்கிரஸ் வேட்பாளரே எதிரணியுடன் மேக்ஸ் பிக்ஸிங் செய்து தன் பையை நிரப்பிக்கொண்டு, வேண்டுமென்றே வாகான புல் டாஸ் பாலை போட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது அம்பலமாயிருக்கிறது. இதுபோல் பல இடங்களிலும் நடந்தால் காங்கிரஸ் கோப்பையை வெல்வது ஒருபுறம் இருக்கட்டும், புள்ளிப் பட்டியலில் கௌரவமான இடத்தைக்கூட தக்கவைக்க முடியாது.

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

Advertisment

மக்களவை முதல்கட்டத் தேர்தலிலே பா.ஜ.க.வின் 400 சீட் இலக்கு என்ற ரீல் அறுந்துபோச்சு எனும் தேஜஸ்வி யாதவ் கூற்று?

தேஜஸ்வியின் வார்த்தைகளை உண்மையாக்குவதுபோல்தான் பா.ஜ.க. பெருந்தலைகளின் பேச்சு இருக்கிறது. அங்கே தன்னம்பிக்கைக்குப் பதில் பதட்டப் பேச்சுக்களே வெளிப்படுகின்றன. பிரதமரே தன் தகுதிக்குப் பொருந்தாத பிரிவினை, வக்கிரப் பேச்சுக்களைப் பேசுகிறார். இலக்கு என்பது குறி பார்க்குமிடம். அம்பு சென்று சேருமிடம் தெரியட்டும்... மற்றதைப் பேசலாம்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

எப்போது ஏழையின் சொல் அம்பலம் ஏறும்?

அம்பலம் என்பதற்கு பொதுவெளி, மண்டபம் எனப் பொருள். சங்கக் கவிஞர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் எல்லாருமே பெரும்பாலும் ஏழைகள்தான். அவர்களது கவிதைகள் அரசர்களது சபையில் பாடப்பட்டிருக்கிறது. அதாவது அம்பலம் ஏறியிருக்கிறது. கவிஞர்கள் பொருள்ரீதியாக வறியவர்கள், ஆனாலும் கல்விரீதியாக வளமானவர்கள். ஆக, ஒருவரது சொல் அம்பலம் ஏற, பொருளாதார ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ செல்வந்தர்களாக இருக்கவேண்டும். இதையெல்லாம் மீறி ஏழை சொல் அம்பலத்தில் கேட்கவேண்டுமென்றால், அந்த சபையில் அனுபவத்தாலும், ஞானத்தாலும், கருணையாலும் மூத்த ஒருவர் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர், "பொறுங்கள்... அவன் வார்த்தையையும் கொஞ்சம் கேட்போம்'’என அனுமதிப்பார்.

மு.பாஸ்கரன், முத்தியால்பேட்டை

2026-ல் அ.தி.மு.க. -தி.மு.க. இல்லாத கூட்டணி ஆட்சி அமையும் என்று அன்புமணி ராமதாஸ் கூறுவது நடக்குமா?

முதலில் இந்த மக்களவைத் தேர்தல் முடிவு வரட்டும். இப்போதைய கூட்டணியின் வலிமையைப் பார்த்துவிட்டு, 2026 தேர்தல் கூட்டணியின் பலத்தை யூகம் செய்து பார்ப்போம்.

mm

சி. கார்த்திகேயன், சாத்தூர்

"ராமரை விட காங்கிரஸ் கட்சி பெரியதா' என்கிறதே பி.ஜே.பி.?

ஏன், ராமரைவிட பா.ஜ.க. பெரியதா எனக் கேட்டால் பா.ஜ.க.வினர் என்ன சொல்வார்கள்? ஒருவேளை நிஜமாகவே ராமன் இருந்தால் தன் வில்லுடன் ராகுலின் பக்கம்தான் நிற்பாரே தவிர, மோடியின் பக்கம் நிற்கமாட்டார். இதுதான் மாவலியின் அபிப்ராயம்! ராமாயணத்தின் தமிழ் வெர்ஷனில், கம்பர் ராமரைவிட பெரியவர் என ஒருவரைச் சொல்கிறார். தனது தாயின் வரத்தால், தனக்குக் கிடைத்த ஆட்சியதிகாரத்தை மறுத்துவிட்டு, காட்டுக்கே தேடிவந்து அரசாள வரும்படி ராமனை அழைக்கிறான் பரதன். இதைப் பார்த்துவிட்டு குகன், ஆயிரம் ராமன் வந்தாலும் உனக்கு நிகர் ஆவாரோ எனப் பாராட்டுகிறான்.

அன்னூரார், பொன்விழி

வீட்டில் மணிபிளான்ட் செடி வளர்த்தால் பணம் பெருகுமா?

மணி பிளாண்ட், வாஸ்து புத்தர் வைத்தால், நவரத்தின மோதிரங்கள் அணிந்தால் பணம் பெருகுமா எனக் கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்வேன். மணிபிளாண்ட் செடி விற்பவர்களுக்கு, வாஸ்து புத்தர் உற்பத்தியாளர்களுக்கு, நவரத்தின மோதிரக் கடைகளுக்கு, இதையெல்லாம் பயன்படுத்த ஆலோசனை சொல்லும் ஜோதிட ருக்கு. உங்களிடம் பணம் பெருக வேண்டுமென்றால் மூன்றே மூன்று வழிதான். ஒன்று சிக்கனம், இரண்டு சேமிப்பு, மூன்று முதலீடு.